ரினா சந்திரன்
மும்பை, ஏப்ரல் 13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - சமீபத்தில் பஹ்ரைனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் போலவே, இரு பிராந்தியங்களுக்கும் இடையே வளர்ந்துவரும் ஆட்கடத்தலை சமாளிப்பதன் ஒரு பகுதியாக, ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதத்தில் இந்தியா, ஐக்கிய அரபு குடியரசுகளுடன் (யுனைடெட் அரபு எமிரேட்ஸ்) ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது.
ஒவ்வோராண்டும் தெற்கு ஆசியாவிற்குள் ஆட்கள் கடத்தப்படுவது 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாகும். ஆனால், இந்த வர்த்தகம் ரகசியமாகவே நடைபெறுவதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகக் கூட இருக்கும்.
ஐக்கிய நாடு மன்றத்தின் போதை மருந்துகள் மற்றும் குற்றப்பிரிவு தகவலின்படி, தென் கிழக்கு ஆசியாவிற்கு அடுத்ததாக, தெற்கு ஆசியா, உலகில் ஆட்கடத்தல் தொழில் மிக வேகமாக அதிகரித்து வரும் இரண்டாவது பிராந்தியமாக இருக்கிறது.
ஐக்கிய அரபு குடியரசுகளுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்கீழ், பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு உதவுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் அதிரடிப்படைப் பிரிவுகள் அமைக்கப்படும். இத்தோடு இதில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என்று புதனன்று மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் கூறியது.
இரு நாடுகளாலும், ஆட்கடத்தலின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, “பாதுகாப்பாகவும் வலுவாகவும் ஒன்றிணையக்கூடிய விதத்தில்’’துரிதமாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப்படும். இதே சமயத்தில், ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது மிகத் துரிதமாக புலனாய்வுகளை மேற்கொண்டு வழக்கு தொடுக்கப்பவதிலும் உத்தரவாதப்படுத்தப்படும் என்றும் பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தின் அறிக்கை கூறியது.
உடன்பாடு “மிக விரைவில்’’ கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது மேலும் கூறியது.
இந்தியா, அண்டை நாடான பங்களா தேசத்துடனும் ஆள் கடத்தல் எதிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருக்கிறது.
ஐக்கிய அரபு குடியரசிற்கு ஆட்கடத்தலுக்கு மூல ஆதார நாடாகவும், வழியிடை நாடாகவும் இந்தியா இருந்து வருகிறது. தெற்காசியா, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு குடியரசுகளுக்கு இப்படி ஏமாற்றி அழைத்து வரப்படும் ஆண்களையும் பெண்களையும் மற்றும் குழந்தைகளை வலுக்கட்டாயமான வேலைகளிலும், பாலியல் தொழிலிலும் ஈடுபட வைக்கப்படுகிறார்கள்.
மேலும், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்கு, பெண்கள் வீட்டு வேலை உதவியாளர்களாகவும், செவிலியர்களாகவும், ஒப்பனையாளர்களாகவும், துப்புரவாளர்களாகவும் போகக்கூடிய அதேசமயத்தில், ஆண்கள் கட்டுமானப் பணிகளிலும், ஓட்டல்களிலும் வேலை செய்வதற்காகவும், ஓட்டுநர்களாகப் பணிபுரிவதற்காகவும் தம்மிச்சையாகவே போகிறார்கள்.
சில தொழிலாளர்களின் கடவுச் சீட்டுகள் சட்டவிரோதமாக பறித்து வைத்துக் கொள்ளப்பட்டும், அவர்களது வெளிப்பழக்க வழங்கங்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தியும், ஊதியங்கள் அளிக்காமலும், அச்சுறுத்தப்பட்டும், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வலுக்காட்டாய உழைப்புக்கும் ஆளாகிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.
ஆட்கடத்தலைத் தடுத்திடவும், பாதிக்கப்பட்டோரைப் பாதுகாத்திடவும், “ஐக்கிய அரபு குடியரசுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே அனைத்து மட்டங்களிலும் ஆட் கடத்தல் எதிர்ப்பு முயற்சிகளை வலுவாக எடுத்துச் செல்லுதல் அவசியம்,’’ என்றும் அறிக்கை கூறியது.
(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: டிம் பியர்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.