- ரினா சந்திரன்
மும்பை, மே 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - மும்பை வீதிகளில் வாழும் குழந்தைகளில், அநேகமாக சரிபாதிப்பேர் இளம் சிறுமிகளாவர். சமீப காலங்களில் இது அதிகரித்திருக்கிறது என்பதோடு வீதிகளில் வாழ்வது என்பது இளம் பெண்கள் கடத்தப்படுவதற்கும் மற்றும் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்குரிய மிகப்பெரிய ஆபத்தை இது வைக்கிறது என்று உள்ளூரில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனம் கூறுகிறது,
கல்வி குறித்து கவனம் செலுத்தும் பிராதம் என்னும் மும்பையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, போக்குவரத்து விளக்குகளின் கீழும், ரயில்வே நிலையங்களிலும் மற்றும் சுற்றுலா மையங்களிலும் உள்ள 18 வயது மற்றும் இதற்கும் கீழே உள்ள 651 குழந்தைகளை ஆய்வு செய்ய, இவர்களில் 47 சதவீதத்தினர் பெண்கள் என்று கண்டிருக்கிறது.
இவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் ஐந்து வயதுக்குக் குறைந்தவர்கள், 6 வயதுக்கும் 14வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 60 சதவீதத்தினர் என்றும் அந்த ஆய்வு கண்டிருக்கிறது.
“சிறுவர்களும் சிறுமிகளும் அநேகமாக சரி சமமாக இருப்பது ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது“என்று பிராதம் கவுன்சில் ஃபார் வல்னரபல் சில்ட்ரன் என்கிற அமைப்பின் இயக்குநர் பரிதா லம்பே கூறினார்.
“பெண் குழந்தைகள் கடத்தப்படுதல், துஷ்பிரயோகம் செய்யப்படுதல், விரைவாகவே திருமணம் செய்விக்கப்படுதல் போன்ற இடர்களுக்கு ஆளாவதற்கான தாக்குதல்கள் குறித்து மிகவும் கவலை கொள்ள வேண்டியிருக்கிறது,“ என்று அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் கூறினார்,
2013இல் சாரிடி ஆக்சன்எய்ட் என்னும் நிறுவனமும் டாட்டா சமூகவிஞ்ஞானக் கழகமும் மேற்கொண்ட ஆய்வில், மும்பையில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் குழந்தைகள் வீதிகளில் வசிக்கிறார்கள் என்றும், இவர்களில் 70 சதவீதத்தினர் சிறுவர்கள் என்றும் கண்டிருக்கிறது.
2011ஆம் ஆண்டில் சேவ் த சில்ட்ரன் என்னும் அமைப்பு மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, டெல்லியில் 51 ஆயிரம் வீதிக் குழந்தைகள் இருப்பதாகவும். இவர்களில் ஐந்தில் ஒரு பங்கு சிறுமிகள் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.
உலக அளவில் வீதியில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை கோடியில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. சிலர் இது 10 கோடி இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.
இந்தியாவின் நிதி மையம் மும்பை. சிறந்த பொருளாதார வாய்ப்புகளைக் கோரி நாடு முழுதுமிருந்தும் மற்றும் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்தும் இங்கு குடிபெயர ஈர்க்கிறது.
பிரதாம் அமைப்பால் செய்யப்பட்ட ஆய்வில் குழந்தைகளில், 10 சதவீதத்தினர் தனியாக வாழ்கின்ற அதே சமயத்தில், பெரும்பாலானவர்கள், பெற்றோர்களுடன் வாழ்கிறார்கள் என்றும் கூறுகிறது. இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் பள்ளிகளுக்கு போவதை நிறுத்திக் கொண்டனர்.
அநேகமாக பாதிக் குழந்தைகள் பிச்சை எடுப்பதைக் காண முடிகிறது. சுமார் பாதிக் குழந்தைகள் சிறு பொருள்களை வீதிகளில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் மிகவும் சிறிய அளவிலான சதவீதத்தினர் போதைப் பழக்கத்திற்கும் ஆளாகியிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன,
வீதிக் குழந்தைகளை மீட்பது என்பது எப்போதும் நடைமுறைசாத்தியமான ஒன்றாக இருக்காது. ஏனெனில், இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்துகொண்டிருக்கும்போது இது சாத்தியமில்லை என்று கூறுகிறார் லம்பே. இது போன்ற நிலைமைகளில், தொண்டு நிறுவனங்கள் வீதிக் குழந்தைகளின் குடும்பங்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு குழந்தைகளை இரவுப் பள்ளிகளில் பதிவு செய்திட முயற்சிக்கிறார்கள் அல்லது இதர பயிற்சி அளிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
தனியாக வாழும் குழந்தைகள் அல்லது நண்பர்களுடன் வாழும் குழந்தைகள் கடத்தப்படுவதற்கோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கோ ஆளாகும் ஆபத்தான நிலையிலேயே இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் போதை மருந்துகள் மற்றும் குற்றப் பிரிவு அலுவலகத்தின்படி கிழக்கு ஆசியாவிற்கு அடுத்தபடியாக தெற்கு ஆசியாவில் தான் ஆட்கடத்தலில் உலகில் மிக வேமாக வளர்ந்து வருகின்ற இரண்டாவது ஒரு பெரிய பிராந்தியமாக விளங்குகிறது.
கடந்த பல பத்தாண்டுகளில். இந்தியாவில் மிகவும் மோசமாக ஏற்பட்டுள்ள வறட்சி, பல்லாயிரக்கணக்கான மக்களை புலம்பெயரச் செய்திருக்கிறது. இதுவும் வீதிகளில் குழந்தைகள் அதிகமாகிட இட்டுச் செல்லலாம் என்றும் லம்பே கூறினார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, நிவாரண நடவடிக்கைகளில் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன் அவர்களைக் கடத்தலுக்கு உள்ளாக்குவது, குழந்தைத் திருமணம் செய்விப்பது அல்லது கொத்தடிமைத்தனத்திற்கு ஆளாக்குவது ஆகியவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரசாங்கம் பல மாநிலங்களில் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் இளம் சிறார் பிரிவுகள் அமைத்திருக்கிறது.
“கடந்த சில ஆண்டுகளில் வீதிக் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால், இப்பிரச்சனை இப்போதும் இருக்கிறது. முக்கியமாக குழந்தைகள் பிச்சை எடுத்தல் மற்றும் வேலை செய்தல் நீடிக்கிறது.” என்று மும்பையில் காவல் உதவி ஆணையராக இருக்கும் ராஜ்தூத் ரூப்வாதே கூறினார்.
“நாங்கள் குழந்தைகளுக்குப் புனர்வாழ்வு அளித்திட முயற்சிக்கிறோம். கடத்தப்பட்டோரை அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து புனர்வாழ்வு அளிக்க முயற்சிக்கிறோம்,” என்று அவர் கூறினார். (செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: அலிசா டாங். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.