- அனுராதா நாகராஜ்
சென்னை, ஆக. 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தென்னிந்தியாவில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகள் அதிகமாகத் தேயிலைப் பறிக்கும் பருவ காலங்களில் தற்காலிகமாகத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதாகவும், சட்டப்படி தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய அடிப்படை உரிமைகளையும் மறுப்பதாகவும் செவ்வாயன்று வெளியாகியுள்ள ஓர் அறிக்கை கூறியது.
தமிழ்நாட்டில் இரு தேயிலை எஸ்டேட்டுகளில் 2015இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் அங்கே பணியிலிருந்த தொழிலாளர்களில் சுமார் பாதியளவிற்கு தற்காலிகத் தொழிலாளர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்லது ஓய்வுபெற்றவர்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது. இவ்விரு தேயிலை எஸ்டேட்டுகளும் லாபம் நோக்கமல்லாத சர்வதேச நிறுவனமான ரெயின்ஃபாரெஸ்ட் அல்லயன்ஸ் என்னும் நிறுவனத்தால் சான்றிடப்பட்டவைகளாகும்.
அங்கே பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்கள், அங்கே நிரந்தர தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் போனஸ் பெறவில்லை, தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணங்களுக்கான பங்களிப்புகளைப் பெறவில்லை, ஓய்வூதிய நிதியம் பெறவில்லை, மழலையருக்கான காப்பக வசதிகளையோ அல்லது இதர சமூகப் பாதுகாப்புப் பயன்பாடுகளையும் பெறவில்லை என்பது அங்கே நடத்தப்பட்ட குழு விவாதங்களும், ளிலிருந்தும், தனிப்பட்ட முறையில் நேர்காணல்கள்களும் காட்டுகின்றன.
“உலகம் முழுதும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆபத்தான மற்றும் தரம்தாழ்ந்த தொழிலாளர் பணி நிலைமைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்,” என்று தொழிலாளர் மற்றும் மனித உரிமைகள் மீது இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த குளோபல் ரிசர்ச் அண்ட் தி இந்தியா கமிட்டி என்னும் அரசு சாரா நிறுவனத்தின் அறிக்கை கூறியது.
உலகில் சீனாவிற்கு அடுத்து உலகில் இரண்டாவது பெரிய உற்பத்தி நாடாகத் திகழும் இந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சுமார் 35 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது என்று அறிக்கை கூறியது.
அறிக்கையானது, இந்தியாவில் அதிகம் தேயிலை வளர்த்திடும் பகுதிகளில் ஒன்றான தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் குறித்து கவனம் செலுத்தி இருக்கிறது. இங்கே சுமார் 2 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.
இவர்களில் கிட்டத்தட்ட பாதியளவிற்கு இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் ஆவார்கள்.
1951ஆம் ஆண்டு இந்தியன் தோட்டம் (இந்தியன் பிளாண்டேசன்) சட்டத்தின்படி அனைத்துத் தொழிலாளர்களும், அவர்கள் தற்காலிகத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி அல்லது நிரந்தரத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, சரிசமமாகக் கருதப்பட வேண்டும். ஆயினும், அரசாங்க அதிகாரிகளின் மோசமான அமலாக்கம் தேயிலை எஸ்டேட் மேலாளர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு உரிமைகளை மறுப்பதை அனுமதித்திருக்கிறது என்று அறிக்கை கூறியது.
அறிக்கையானது ஆண்டுக்கு ஒருமுறை தொழிலாளர்களுக்கு, அவர்களின் கல்வி, திருமணம், வீடு கட்டுதல் மற்றும் அவசரகால நிகழ்வுகளுக்காக அளிக்கப்படும் முன்பணம் குறித்தும் ஆழமான கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
தற்காலிக ஊழியர்கள், வேறு வேலைகளுக்குச் செல்வதற்காக எஸ்டேட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால், வாங்கிய முன்பணத்தை ஒட்டுமொத்தமாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது சில வழக்குகளில் கொத்தடிமை வளையத்தை உருவாக்கி இருக்கிறது.
தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள், காயங்கள் அடைவது அல்லது உடல் நலிவுறுவது அதிக அளவில் இருப்பதாகவும் அறிக்கை கண்டிருக்கிறது.
மேலும், அதிக மணி நேரம் வேலை வாங்குதல் மற்றும் இழப்பீடு ஆகியவை குறித்து சட்டப்படியான நடைமுறைகளோ அல்லது தி ரெயின்ஃபாரெஸ்ட் அல்லயன்ஸ் மற்றும் தி சஸ்டெயினபிள் அக்ரிகல்சர் நெட்வொர்க் போன்ற இலாபம் ஈட்டா பாதுகாப்பு குழுக்களின் விதிகளோ பின்பற்றப்படுவதில்லை என்றும் அது கண்டிருக்கிறது .
அறிக்கையின் கண்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், தி ரெயின்ஃபாரெஸ்ட் அல்லயன்ஸ் மேற்படி இரண்டு சான்றிட்ட தேயிலை எஸ்டேட்டுகளுக்கும் சட்டப்படி முறையீடு அனுப்பி இருப்பதாகவும், மற்றும் ஒரு புலனாய்வு தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறியது.
இவ்விரு தேயிலைத் தோட்டங்களிடமிருந்தும் தேயிலையை வாங்கும் யூனிலீவர் நிறுவனம், மேற்படி எஸ்டேட்டுகள் மறுதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும், தங்களுக்கு “தேயிலையை அளிப்பவர்களின் தொழிலாளர்களின் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் வீட்டு வசதி ஆகியவைகள் குறித்து முழுமையாகத் தாங்களும் கவனம் செலுத்துவதாகவும்” கூறுகிறது.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.