மும்பை, செப். 28 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சட்டவிரோதமான, ஒழுங்குபடுத்தப்படாத மைக்கா சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இறந்து வருவதை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் கள ஆய்வு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஜெர்மன் கார் உற்பத்தி நிறுவனமான வோல்க்ஸ்வேகன் இந்தியாவில் தனக்கு சப்ளை செய்து வரும் சிலரிடமிருந்து மைக்கா வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக, அந்த நிறுவனத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
அழகுசாதனப் பொருட்கள், கார்களுக்கான வண்ணங்கள் ஆகியவற்றை மேலும் ஒளிவிடச் செய்கின்ற மைக்காவை உற்பத்தி செய்து வரும் மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றில் மூன்று மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறைந்தது ஏழு குழந்தைகள் மரணமடைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வோடு கூடவே இத்தொழில் நிறுவனத்தினருக்காக மனித உரிமைகள் குழுவான டெரி டே ஹோம்ஸ் மேற்கொண்டஆய்வு ஆகியவற்றைத் தொடர்ந்து உலகில் அதிகமாக விற்பனையும் காரை உற்பத்தி செய்யும் நிறுவனம் இந்தியாவிலிருந்து தங்களுக்கு சப்ளை செய்து வந்தவர்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டது என வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் லெஸ்லி போத்கே குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள அதன் முதல் கட்ட பிரிவு அல்லது நேரடியாக வண்ணங்களை சப்ளை செய்பவர்கள் ஆகியவர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் தாங்கள் வாங்குகின்ற மைக்கா சிறுவர்களை தொழிலாளர்களாகப் பயன்படுத்தாத சட்டபூர்வமான சுரங்கங்களிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது என்பதை உறுதி செய்ய கூடுதலான தீவிர முயற்சிகளை வோல்க்ஸ்வேகன் எடுத்துள்ளதாக போத்கே கூறினார்.
“இரண்டாம் கட்ட நிலையிலும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என மின்னஞ்சல் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போத்கே கூறினார். “இதன் விளைவாக, முறையான நடைமுறைகள் முடியும் வரையிலும், குறிப்பிட்ட நடவடிக்கைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் வரையிலும் ஒருசில சப்ளை நிறுவனங்களிடமிருந்து சப்ளை பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இது வழிவகுத்துள்ளது.”
இந்தப் பிரச்சனையை கவனத்தில் கொள்ளவும், மைக்கா சப்ளை தொடரில் குழந்தைத் தொழிலாளர்களை தவிர்ப்பதற்கான தீர்வுகளைக் கண்டறியவும், “தொழில் மற்றும் பல்முனை தொடர்பாளர்களுக்கான மேடை” ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு குறித்து வோல்க்ஸ்வேகனுக்கு வண்ணங்களை சப்ளை செய்து வருவோர் விவாதித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“நீடித்து நிற்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவது என்பது … எளிதானதொரு வேலை இல்லை. இதற்கு நேரமும் ஆகும்.” எனவும் போத்கே தெரிவித்தார்.
இந்தக் கனிமம் சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகவும் திகழ்வதால், சமீப காலத்தில் வெளிர் பழுப்பு நிற, கண்ணைப் பறிக்கும் இந்தக் கனிமம் அதிக அளவில் முன்னுக்கு வந்தது. மைக்காவை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
சிதிலமடைந்த சட்டவிரோத சுரங்கங்களில் இருந்தே இந்தியாவின் 70 சதவீத மைக்கா உற்பத்தி செய்யப்படுகிறது என தொழிலாளர் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து மைக்காவை வாங்கிவரும் இதர உலகப்புகழ்பெற்ற நிறுவனங்களும் கூட இந்த விசாரணையைத் தொடர்ந்து தங்களுக்கு சப்ளை செய்பவர்கள் குறித்த பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது என முடிவு செய்துள்ளன. சீன நாட்டின் வண்ணக் கலவை உற்பத்தியாளரான ஃபுஜியான் குன்சாய் மெட்டீரியல் டெக்னாலஜி கோ லிமிடெட், ஜெர்மன் நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனமான மெர்க் கேஜியே மற்றும் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனமான எல்’ ஓரியல் ஆகியவை இத்தகைய முடிவெடுத்த நிறுவனங்களில் அடங்குவனவாகும்.
(செய்தியாளர்: ரினா சந்திரன் @rinachandran, எடிட்டிங்: கேட்டி நகுயென் மற்றும் டிமோதி லார்ஜ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.