- அனுராதா நாகராஜ்
பெங்களூரு, பிப். 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - புதிய மென்பொருள் ஓன்று வடகிழக்கு மாநிலங்களில் ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடவும் வங்கதேசம், மயான்மர் ஆகியவற்றுடன் எல்லைகளைத் தாண்டி விசாரணைகளை மேற்கொள்வதை விரைவுபடுத்தும் வகையில் காவல்துறையின் செயல்பாட்டை முற்றிலும் தலைகீழாக மாற்றக் கூடியதாக அமையும் என அதை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டனர்.
புலனாய்வு விவரங்களை பகிர்ந்து கொள்வது, தேடப்படும் ஆட்கடத்தல்காரர்கள் குறித்த பதிவுகளை அணுகுவது, அவர்களின் மீதான வழக்குகளின் நடப்பு விவரங்களை அறிந்து கொள்வது ஆகிய புதிய வழிகளை வழங்கக் கூடிய மென்பொருளான இம்பல்ஸ் கேஸ் இன்ஃபோ செண்டர் சாஃப்ட்வேர் –ஐ ஆறு மாநிலங்களில் உள்ள காவல் துறை இப்போது எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆட்கடத்தல் குறித்த குற்றங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசின் புள்ளி விவரங்களின்படி அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இளம் சிறுமிகள் பெரும் எண்ணிக்கையில் கடத்தப்படுகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே இனரீதியான மோதல்களில் சிக்கித் தவிக்கும் வடகிழக்குப் பகுதியின் பல இடங்களும் இத்தகைய ஆட்கடத்தலுக்கான பரபரப்பான இடங்களாக மாறியுள்ளன என பிரச்சாரகர்கள் குறிப்பிடுவதோடு, இந்தப் பகுதியானது கட்த்தப்படுவதற்கான ஆதாரப்பகுதியாக, வந்து சேரும் இடமாக, இங்கிருந்து இடம் மாறிச் செல்லும் முனையம் என்பதாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.
இந்த மென்பொருளை உருவாக்கவும், தேவைக்கேற்ப அதை ஒழுங்குபடுத்தவும் இரண்டு ஆண்டுகள் ஆனது என டிஎஃப்எம் இன்ஃபோ அனலிடிக்ஸ் என்ற புதிதாகத் துவங்கப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சீவன் தேவ்நாத் குறிப்பிட்டார்.
“இதைப் பயன்படுத்த இருப்பவர்கள் காவல்துறையினர் என்பதும், அவர்களில் பலரும் இதற்கு முன்பு கணினியையே பயன்படுத்தியிராதவர்கள் என்பதும் இதை உருவாக்கும்ப்போது நாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரும் சவாலாக இருந்தது ” என தேவ்நாத் குறிப்பிட்டார்.
இதை உருவாக்குவதற்காக தேவ்நாத் உடன் இணைந்து செயல்பட்ட இம்பல்ஸ் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த சலோமி தோம்மி குறிப்பிடுகையில் இந்த மென்பொருள் ஆட்கடத்தல்காரர்கள் குறித்த முழு விவரங்களையும் வழங்கும் என்றார்.
“விசாரணை மேற்கொள்வோர் தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆட்கடத்தல்காரர் குறித்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள இதர வழக்குகளையும் உடனடியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை தரும் ஏற்பாடு இதில் மிகச் சிறப்பான அம்சம் ஆகும்.” என்றார் தோம்மி.
ஒவ்வோர் ஆண்டும் இத்தகைய ஆட்கடத்தல் கும்பல்களால் பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்தியாவின் நகரங்களுக்கு கூட்டி வரப்படுகின்றனர். இந்தக் கும்பல்கள் அவர்களை அடிமையாக உழைப்பதற்காக விற்று விடுகின்றன; அல்லது இரக்கமேதுமின்றி ஊழியர்களைக் கசக்கிப் பிழியும் முதலாளிகளிடம் வாடகைக்கு விடுகின்றன.
இவர்களில் பலரும் வீட்டு வேலை செய்பவர்களாக, செங்கல் சூளைகளில் தொழிலாளிகளாக, சாலையோர உணவு விடுதியில் ஊழியர்களாக, அல்லது சிறிய நெசவாலைகள், கைப்பின்னல்(எம்ப்ராய்டரி) தொழிலகங்கள் ஆகியவற்றில் வேலை செய்யுமாறு தள்ளப்படுகின்றனர். இவர்களில் பெண்கள் , சிறுமிகள் பலரும் பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர்.
இந்த மென்பொருள் வங்க தேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள ஆட்கடத்தலுக்கு எதிரான குழுக்களுடன் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இணைப்பதாகவும், எல்லை கடந்து மேற்கொள்ள வேண்டிய விசாரணைகளை விரைவாகச் செய்து முடிக்க உதவுவதாகவும் அமைகிறது.
இத்தகைய ஆட்கடத்தல் வழக்குகள் குறித்த புள்ளி விவரங்கள், ஆட்கடத்தல்காரர்கள் குறித்த தகவல்கள், அவர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்ற பாதைகள், அவர்கள் கடத்திச் செல்வதற்காகக் குறி வைக்கும் நலிந்த பிரிவு மக்கள் ஆகிய விவரங்களை தேவ் நாத் தும் அவரது குழுவினரும் ஒழுங்கமைத்தனர்.
“இந்த அமைப்பில் நுழைந்த உடனேயே பல வழக்குகளுக்கு எங்களால் தீர்வு காண முடிந்தது ” என சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஆட்கடத்தலுக்கு எதிரான குழுவின் தலைவரான யாங்கீலா பாட்டியா குறிப்பிட்டார். “இந்தப் பகுதியில் ஆட்கடத்தல்காரர்கள் பலரும் மாறி மாறி சுற்றி கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பு அவர்களை எளிதாகக் கண்டுபிடிக்க உதவுகிறது.”
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எட் அப்ரைட். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.