×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவின் ‘குழந்தைக் கடத்தல் கும்பல்’ தொடர்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு

Wednesday, 1 March 2017 16:55 GMT

A child sleeps in a makeshift cradle as a homeless boy sleeps on the pavement in Mumbai in this 2009 archive photo. REUTERS/Arko Datta

Image Caption and Rights Information

சென்னை / கொல்கத்தா, மார்ச் 1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்பனை செய்த ‘குழந்தைக் கடத்தல் கும்ப’லுக்குப் பின்னே ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி – அதுவும் அதன் பெண்கள் பிரிவின் தலைவர்- சூத்திரதாரியாக இருந்திருக்கிறார் என புதன்கிழமையன்று காவல் துறை தெரிவித்தது.

ஜுஹி சவுத்ரிக்காக கடந்த பத்து நாட்களாக காவல் துறை நடத்திய வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய ஆட்கடத்தல்காரர்களுடன் உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமென பிரச்சாரகர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

“இந்த குழந்தைக் கடத்தல் கும்பலுக்குப் பின்னே அவர் சூத்திரதாரியாக இருந்திருக்கிறார்” என மேற்கு வங்க காவல் துறையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

“சட்டவிரோதமான தத்தெடுப்பு, ஜல்பைகுரியில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து குழந்தைகளைக் கடத்துதல் ஆகியவற்றுக்குப் பின்னே அவர் சூத்திரதாரியாக இருந்திருக்கிறார். அந்த மருத்துவமனையின் உரிமையாளரான சந்தனா சக்ரபர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார்.”

ஆட்கடத்தல் குறித்த குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள சவுத்ரி புதன்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவர் மீது முறையான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது.  தான் வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக சவுத்ரி நிருபர்களிடம் தெரிவித்தார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒரு தலைவரான சவுத்ரி கடந்த மாதத்திலிருந்தே காவல் துறையின் கைகளில் சிக்காமல் ஓடிக் கொண்டிருந்தார். அவர் மேற்கு வங்க மாநிலத்தின் இந்திய-நேபாள எல்லைக்கு அருகே செவ்வாயன்று இரவு கைது செய்யப்பட்டார் என காவல் துறை தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் உள்ள ஓர் அனாதை இல்லத்தை மூடிய பிறகு இது குறித்து விசாரணை மேற்கொண்டவர்கள் சவுத்ரியைத் தேடி வந்தனர். குழந்தையில்லாத தம்பதியினருக்கு சட்டவிரோதமாகக் குழந்தைகளை விற்பனை செய்ததற்காக அந்த அனாதை இல்லத்தின் உரிமையாளரையும் காவல் துறை கைது செய்திருந்தது.

ஜல்பைகுரி நகரத்தில் செயல்பட்டு வந்த அந்த அனாதை இல்லம் லாபநோக்கற்ற ஓர் அமைப்பினால் நடத்தப்பட்டு வந்தது என்பதோடு தத்தெடுப்பதற்காக இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட குழந்தைகளையும் அது விற்பனை செய்திருந்தது என காவல் துறை தெரிவித்தது.

அந்த அனாதை இல்லம் போலியான ஆவணங்கள், போலி முத்திரைகள், சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒவ்வொரு குழந்தையையும் ரூ. 1 லட்சத்திலிருந்து  2 லட்சம் வரை விற்பனை செய்துள்ளது.

இந்த அனாதை இல்லத்தின் உரிமையாளரும் சவுத்ரியும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தை நடத்துவதற்குத் தேவையான அனுமதி, நிதியுதவி ஆகியவற்றைப் பெறுவதற்கென மாநிலத்தின் மூத்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து வந்துள்ளனர் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இந்தத் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம்” என தாம்ஸன் ஃபவுண்டேஷனிடம் குமார் தெரிவித்தார்.

இந்த அனாதை இல்லமானது மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒன்று என்பதோடு தத்தெடுப்பிற்காகக் குழந்தைகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே அமைப்பாகவும் ஜல்பைகுரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்தது.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்கடத்தல் சம்பவங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவை விலைக்கு வாங்கப்பட்டு, விற்கப்பட்ட, நவீன காலத்திய அடிமைகளாகச் சுரண்டப்படுகின்ற குழந்தைகள் தொடர்பானவை என்பதை 2016ஆம் ஆண்டில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணை புதன்கிழமையன்று விரிவடைந்துள்ள நிலையில் ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கும் உள்ளூர் அதிகாரத்தில் உள்ள நபர்களுக்கு இடையே உள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டுவதாகவே இந்தக் கைது நடவடிக்கை  உள்ளது எனவும் பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

“மாவட்ட அதிகாரிகளுக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய மோசடி நடப்பதற்கான வாய்ப்பே இல்லை” என்று குழந்தைகளின் உரிமைகளுக்காக இப்பகுதியில் போராடி வரும் லாபநோக்கற்ற குழுவான  டுவார்ஸ் ஜாக்ரண் அமைப்பைச் சேர்ந்த விக்டர் பாசு குறிப்பிட்டார்.

 “இந்த அனாதை இல்லத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இளம் பெண்களை கடத்தி வந்துள்ளதோடு என்பதோடு அவர்களின் குழந்தைகளையும் சட்டவிரோதமான தத்தெடுப்பிற்காக விற்பனை செய்துள்ளது. (அதிகாரிகளின்) ஒத்துழைப்பு இல்லாமல் இது எப்படி சாத்தியமாகி இருக்கும்?”

நீதிமன்றத்திற்கு வெளியே உள்ளூர் ஊடகங்களிடம் பேசும்போது “அரசியல் நோக்கங்களுக்காகவே தான் பழிவாங்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

எனினும் இந்தியாவில் குழந்தைகளைக் கடத்துவது என்பது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குற்றமாக மாறியுள்ளது; இதில் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் பெரும் பயன்களை வழங்குவதாகவும் உள்ளது என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

“குழந்தைகளின் உரிமைகள் குறித்துத் தற்போதுள்ள சட்டத்தின் உயிர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகவே இந்தச் சம்பவங்கள் உள்ளன” என சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ என்ற மனித உரிமைகள் குழுவைச் சேர்ந்த மொஹுவா சாட்டர்ஜி தெரிவித்தார்.

“இந்தச் சட்டங்களின் கீழ் வழிகாட்டி நெறிமுறைகள், வழிவகைகல் ஆகியவை இருந்த போதிலும் தத்தெடுப்பு நடைமுறைகள் குறித்த செயல்முறைகள் இவ்வாறு குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வரும் பெற்றோர்களுக்கு இன்னமும் சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதோடு, இதுபற்றிய விவரங்களை  போதிய அளவிற்கு அறியாதவர்களாக அவர்கள் இருப்பதால் இத்தகைய தீய சக்திகளுக்கு அவர்கள் இரையாகி விடுகின்றனர்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எட் அப்ரைட் மற்றும் லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->