- நீதா பல்லா
புது டெல்லி, மார்ச் 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பெண்களும் குழந்தைகளும் ஆட்கடத்தலுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகரிப்பு என்பதை வியாழனன்று வெளியிடப்பட்ட அரசுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டில் 15,448 பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டனர் எனில், கடந்த ஆண்டு இது 19,223 ஆக உயர்ந்துள்ளது என பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் மிக அதிகமான எண்ணிக்கை மேற்குவங்கத்தில் பதிவாகியுள்ளது.
ஆட்கடத்தல் தொடர்பான குற்றங்கள் குறித்து மக்களின் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதும், காவல் துறைக்கு மேலும் அதிகமான பயிற்சியும்தான் இந்த அதிகரிப்பிற்குக் காரணம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இந்தக் குற்றங்கள் திடீரென்று அதிகரித்து வருகின்றன என்று கூறுவது மிகவும் கடினம்” என தன் பெயரைத் தெரிவிக்க விரும்பாத மூத்த தில்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“ஆட்கடத்தல் குறித்து மேலும் அதிகமான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இதில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் அதிக எண்ணிக்கையில் புகார் தெரிவிக்க முன்வருகின்றனர்” என அந்த அதிகாரி கூறினார்.
“அரசு மற்றும் மக்கள் சமூகக் குழுக்கள் ஆகியவை இது குறித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஊடகங்களில் மேலும் அதிகமான வழக்குகள் வெளியாகி வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர்.”
உண்மையான கணக்கு இன்னும் அதிகமாக இருக்கவும் கூடும் என்றும் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் காவல்துறையுடன் இன்னமும் வழக்குகளை பதிவு செய்வதில்லை. ஏனெனில் இதுகுறித்த சட்டம் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை; அல்லது ஆட்கடத்தல் கும்பல் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருந்திருக்கக் கூடும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
உலகத்திலேயே ஆட்கடத்தல் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக இந்தியாவை மையமாகக் கொண்ட தெற்காசியப் பகுதி விளங்குகிறது.
பெரும்பாலும் ஏழைகளான, கிராமப்புறத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் சிறு நகரங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் ஆட்கடத்தல்காரர்கள் ஏமாற்றி அழைத்து வரப்படுகின்றனர். நல்ல வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து இவ்வாறு அவர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் நவீன கால அடிமைத்தனத்தில் விழும் வகையில் விற்கப்படுகின்றனர்.
இவர்களில் சிலர் வீட்டு வேலை செய்பவர்களாக அல்லது நெசவுக் கூடங்கள் போன்ற சிறு தொழிற்சாலைகளில் அல்லது வயல்களில் வேலை செய்யும்படியாக கட்டாயப்படுத்தப்படுகின்றனர்; அல்லது பாலியல் தொழில் மையங்களில் கூடத் தள்ளப்படுகின்றனர். அங்கு அவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்படுவதில்லை அல்லது கடனை அடைப்பதற்காக அடிமையாக வேலை செய்ய நிறுத்தி வைக்கப்படுகின்றனர். இவர்களில் சிலர் காணாமலே போய் விடுகின்றனர். அவர்களது குடும்பங்களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.
சமமான எண்ணிக்கையில் பெண்களும் குழந்தைகளும் ஆட்கடத்தலுக்கு ஆளாவதாக தேசிய குற்றம் தொடர்பான பதிவேடுகள் கழகத்திலிருந்து வெளியான 2016ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் 9,104 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் இந்தக் கணக்கு அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட 27 சதவீதம் அதிகமாகும். 2016ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் 22 சதவீதம் அதிகரித்து 10,119 என்ற எண்ணிக்கையை எட்டியது.
மிகவும் ஏழ்மையான அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு பலவீனமான எல்லையைப் பகிர்ந்து கொண்டு வரும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் ஆட்கடத்தலுக்கு பிரபலமான மையமாக அறியப்படுகிறது. இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டில் ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டவர்கள் குறித்த விவரங்கள் இந்த மாநிலத்தில் பதிவாகியுள்ளன.
பாலைவனம் சூழ்ந்த மாநிலமான ராஜஸ்தான் 2016ஆம் ஆண்டில் இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் கடத்தப்பட்ட மாநிலமாகப் பதிவாகியுள்ளது. அதை போன்றே இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பை இருக்கும் இடமுமான மகாராஷ்டிரா இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் பெண்கள் கடத்தப்படும் மாநிலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: அஸ்டரிட் ஜவ்ய்நெரட். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.