×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

போலி ஆவணங்கள், இந்தியக் குழந்தைகளை சிக்க வைத்து, ஆட்கடத்தல்காரர்கள் சட்டத்தை ஏமாற்ற உதவுகின்றன

by Roli Srivastava and Anuradha Nagaraj | @Rolionaroll | Thomson Reuters Foundation
Friday, 31 March 2017 10:25 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா மற்றும் அனுராதா நாகராஜ்

மும்பை /சென்னை, மார்ச் 31 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சட்டபூர்வமாக வயதுக்கு வந்தவர்கள் என்று காட்டும் போலி ஆவணங்களைப் பெறவும், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்கவும் இந்தியாவில் உள்ள ஊழல்மிக்க மருத்துவர்கள், கிராமத்துப் பெரியவர்கள் ஆட்கடத்தல்காரர்களுக்கு உதவுகின்றனர் என மனித உரிமைகளுக்கான குழு கூறுகிறது.

2016ஆம் ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்தகைய ஆட்கடத்தலுக்கு இரையாகியுள்ளனர். அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி அதற்கு முந்தைய ஆண்டை விட இது 27 சதவீதம் அதிகமாகும். இவர்களில் பலரும் பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர்;அல்லது நெசவு நூற்பாலைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றிலும், வீட்டு உதவியாளர்களாகவும் வேலை செய்யக் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு சிறுமிகளை கடத்திக் கொண்டு வரும் குற்றங்களில் ஈடுபடும் வலைப்பின்னலை இரண்டு ஆண்டு காலம் ஆய்வு செய்த பிறகு, இவ்வாறு பாதிக்கப்படுவோரின் வயதை மறைப்பதற்கு போலியான பள்ளியிறுதிச் சான்றிதழ்களைத்தான் ஆட்கடத்தல்காரர்கள் மிக அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதை அறக்கட்டளை நிறுவனமான ஜஸ்டிஸ் அண்ட் கேர் கண்டறிந்துள்ளது.

 “(முதல் பார்வையில்) இந்த ஆவணங்கள் உண்மையானதைப் போன்றே தோற்றம் அளிப்பதால், சட்டத்தை   நிலைநாட்டுவதற்கான செயல்முறையை நிலைகுலையச் செய்யும் திறமை கொண்டதாக அவை அமைகின்றன” என ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பின் அதிகாரபூர்வ பேச்சாளர் அட்ரியன் பிலிப்ஸ் கூறினார்.

“நாட்டின் சட்டமானது மருத்துவ ரீதியான அல்லது தடயவியல் சோதனைகளை விட ஒரு சில குறிப்பிட்ட ஆவணங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன” என்று குறிப்பிடும் பிலிப்ஸ், பிறந்த தேதிக்கான ஆவணங்கள், பள்ளியிறுதி சான்றிதழ்கள் போன்றவை போலியாகத் தயாரிக்கப்பட்டவையா என்ற சோதனைக்கு மிக அரிதாகவே ஆட்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

குழந்தைகளை கடத்துவது என்ற குற்றத்திற்கு தற்போது இந்தியாவின் பல்வேறு வகையான சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் பதியப்படுகின்றன. பாலியல் ரீதியான குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குழந்தைகளை கடத்திச் செல்வது அல்லது பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்வதாகச் சந்தேகத்திற்கு ஆளாவோர் பிணையில் வெளிவர இயலாது.

“குழந்தைகளைக் கடத்திச் சென்றதற்கான வழக்குகளில் தண்டனை என்பது ஏழு ஆண்டுகளில் இருந்து ஆயுள் தண்டனை வரை உள்ளது” என மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஹரீஷ் பண்டாரி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர்களை சட்டபூர்வமாக வயதுக்கு வந்தவர்கள் என்று காட்டப்பட்டால், அதற்கான தண்டனையின் அளவு மிகக் குறைவாக இருப்பதோடு, இந்த ஆட்கடத்தல்காரர்கள் பிணையும் கோர முடியும்.”

வங்க தேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள எல்லைப்பகுதியில் உள்ள ஓர் அச்சக உரிமையாளர் ஆட்கடத்தல்காரர்களின் பயன்பாட்டிற்கென 600 வரையிலான பள்ளியிறுதி சான்றிதழ்களை போலியாக உருவாக்க தாம் உதவியதாகத் தெரிவித்தார் என ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பு ஓர் அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது.

இவ்வாறு போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடவோ அல்லது ஒப்புதல் அளிக்கவோ கிராமக் குழுக்களின் உறுப்பினர்கள் அவர்களது தலைவர்களால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

“இந்தக் கிராமக்குழு உறுப்பினர்கள் இத்தகைய கடத்தல் கூட்டணியின் பகுதியாகவும் உள்ளனர்” எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்த அறிக்கை, போலியான பிறப்புச் சான்றிதழ்கள் ஒவ்வொன்றும் ரூ. 1000 என்ற விலைக்கு மிக எளிதாகக் கிடைக்கின்றன என்றும் தெரிவிக்கிறது.

இதில் பாதிக்கப்படுவோரின் வயதை அவர்களது அடையாளத்திற்கான ஆவணங்களின் மூலம் பரிசோதிக்க அதிகாரிகள் விரும்பும்போது, அவர்களின் முன் நிரூபிப்பதற்கென போலியான பெற்றோர்களையும் இந்த ஆட்கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்கின்றனர் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

பாலியல் தொழில் மையங்களை நடத்துபவர்கள், இன்னும் சில நேரங்களில் இத்தகைய கடத்தலுக்கு ஆளானவர்களின் பெற்றோர்களே வயதை நிர்ணயிப்பதற்காக மேற்கொள்ளப்படும் எலும்பு அடர்த்தி சோதனைகளில் மீட்கப்பட்ட சிறுவன்/சிறுமி வயதுக்கு வந்தவர் என சான்றிதழைப் பெறுவதற்கு மருத்துவர்களை, குறிப்பாக சிறு மருத்துவ மையங்களைச் சேர்ந்த மருத்துவர்களை, தங்கள் செல்வாக்கிற்கு ஆட்படுத்துகின்றனர்.

ஆட்கடத்தல் வழக்குகளில் போலியான அடையாளச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுவது குறித்து தங்களுக்குத் தெரியும் என இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களின் வயது குறித்த சந்தேகம் ஏதும் இருந்தால் அவர்களை வயதுக்கு வராதவர்கள் என்றே கருதுமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெலிங்கானா காவல்துறை தலைவர் மகேஷ் பகவத் கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா மற்றும் அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->