×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவில் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் சிறந்த வழி எது? சட்டம் படிப்பதுதான்

Thursday, 6 April 2017 10:30 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஏப். 6 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஆறுவயதில் ஒரு பாலியல் தொழில்மையத்திற்கு பெற்றோர்களால் விற்கப்பட்டவர் என்ற வகையில் அந்தச் சம்பவம், மிகவும் மதிப்புக்குரிய தொழில்களில் ஒன்றான சட்டத் தொழிலை தான் படிப்பதற்கு வழிவகுக்கும் என்று இஷிகா எப்போதும் நினைத்ததில்லை.

பாலியல் ரீதியான அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இப்போது 24 வயதாகும் இஷிகா தன்னைக் கடத்தியவர்களுக்கு எதிராக நீதி கிடைப்பதற்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை செலவிட்டிருக்கிறார். நீண்ட காலமாக அந்த வழக்கு நடந்து வந்த போதிலும் தன் வாழ்க்கையைச் சிதைத்தவர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நிற்பதைப் பார்க்க வேண்டும் என்ற தனது நம்பிக்கையை மட்டும் அவர் விட்டுவிடவில்லை.

“நான் ஒரு வழக்கறிஞராக மாறுவேன். இவ்வாறு கடத்தலுக்கு ஆளானவர்களின் வழக்குகளை எடுத்துக் கொள்வேன். அவர்களுக்காகச் சிறப்பாகப் போராடுவேன்” என வியாழக்கிழமையன்று ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளை துவக்கியுள்ள திட்டத்தின் கீழ் சட்டம் படிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட 20 பேரில் ஒருவரான இஷிகா குறிப்பிட்டார்.

 “13 வருடங்களுக்கு முன்னால் நான் இந்தத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டேன். இருந்தாலும் என் வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது” தன் முதல் பெயரால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட இஷிகா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “பல நேரங்களில் இந்தச் செயலால் பாதிக்கப்பட்டவளைப் போல நான் உணர்வதில்லை; மாறாக அதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவளைப் போலவே நான் உணர்கிறேன். இத்தகைய ஒரு நிலையை இவ்வாறு கட்த்தப்பட்டவர்கள் அனுபவிக்க நான் விரும்பவில்லை.”

இந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி பாலியல் தொழிலாளிகளில் 1 கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காக கடத்தலுக்கு ஆளானவர்களாகவே உள்ளனர் என பிரச்சாரகர்கள் கூறுகின்றனர். எனினும் ஐந்தில் இரண்டை விடக் குறைவான ஆட்கடத்தல் வழக்குகளில்தான் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கிறது.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஆட்களை கடத்துவது குறித்த 2016ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையில் தனது சட்டத்தை நிலைநாட்டும் முயற்சிகளை அரசாங்கள் அதிகப்படுத்தியுள்ள போதிலும் ஆட்களை கடத்துவதற்கான விசாரணைகள், குற்றம் சுமத்துதல், தண்டனை வழங்குதல் ஆகியவை இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

தனது ‘நீதிக்கான பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் சிறுவயதில் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்ட இளம்பெண்கள் கல்லூரியில் அனுமதி பெறுவது, அவர்களது கல்வி மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றுக்கு பொறுப்பேற்கப்படும் என ஃப்ரீ எ கேர்ள் மூவ்மெண்ட் தெரிவித்தது.

“இது பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு மீண்டவர்களுக்கு வலுவூட்டும் வகையிலும் எதிர்காலத்தில்  அவர்கள் அரசு வழக்கறிஞர்களாக மாறுவதற்கு உதவும் வகையிலும் ஆன நீண்ட காலம் திட்டம் ஆகும். இதன் மூலம்  குழந்தைக் கடத்தல், சிறுவயது விபச்சாரம் ஆகியவை தொடர்பான வழக்குகளை அவர்கள் கையிலெடுக்க முடியும்” என இந்த அறக்கட்டளையின் அதிகாரபூர்வ செய்தியாளர் ஃப்ரான்சிஸ் க்ரேசியாஸ் கூறினார்.

இத்தகைய வழக்குகளை நடத்தும் அரசு வழக்கறிஞர்கள் இத்தகையோரின் நிலைமையோடு தங்களை இணைத்துக் கொள்ளவோ அல்லது நீதிமன்றத்தில் போதுமான வகையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு உதவவோ இயலாதவர்களாக உள்ளனர். இதன் விளைவாக இந்த வழக்குகள் வலுவிழந்து போவதுடன் பெரும்பாலான நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்கு வழிகோலுவதாக உள்ளது என பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

“சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ், எந்தக் காரணத்திற்காக போடப்பட்டுள்ளது என்பது போன்ற வழக்கின் சட்டபூர்வமான விஷயங்களை அறியாதவர்களாகவே இத்தகைய நிலைமையிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் உள்ளனர்” என இஷிகாவைப் போன்ற மீட்கப்பட்ட பெண்கள் தங்கள் பள்ளிக் கல்வியை முடிக்க உதவுகின்ற சன்லாப் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த தபதி பவ்மிக் குறிப்பிட்டார்.

“ஏனெனில் இத்தகைய செயலால் ஏற்பட்ட வலி, சோக உணர்ச்சி ஆகியவற்றை அவர்களும் அனுபவித்துள்ளதால் இந்த (மீட்கப்பட்ட) பெண்கள் ஆட்கடத்தல்  குறித்த வழக்குகளை நீதிமன்றத்தில் நன்றாகவே கையாளுவார்கள்.” என பவ்மிக் குறிப்பிட்டார்.

சட்டக் கல்லூரி ஒன்றுக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான தயாரிப்பாக ஆங்கிலம், கணிதம் மற்றும் இதர பாடங்களை இஷிகா ஏற்கனவே படிக்கத் துவங்கி விட்டார். ஒரு நாள் அது தனது வழக்கில் வெற்றி பெற உதவும் என்றும் அவர் நம்புகிறார்.

“காப்பகத்தில் நான் கழித்த இத்தனை ஆண்டுகளாக பாலியல் தொழில்மையத்தைச் சேர்ந்த தலைவியும் என்னைக் கடத்தியவரும் தொடர்ந்து சுதந்திரமாகத்தான் இருக்கின்றனர். இத்தகைய ஆட்கடத்தல்காரர்கள் சட்டத்தையும் என்னையும் பார்த்து பயப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.” என்றார் அவர்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->