புது டெல்லி, மே 31 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - அதிகமாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ள கிராமங்களிலிருந்து பெண்களும் சிறுமிகளும் பாலியல் வர்த்தகத்திற்குள் காணாமல் போவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்தியாவைச் சேர்ந்த ஓர் அறக்கட்டளை ஆட்கடத்தலுக்கு அதிகம் வாய்ப்புள்ள இடங்களை சுட்டிக் காட்ட பெரும் புள்ளிவிவரங்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளது.
நவீன அடிமைத்தனத்தில் பெரிது ஆழ்ந்து விடுவதற்கான அபாயத்தில் உள்ள கிராமங்களை கண்டறிய மை சாய்சஸ் ஃபவுண்டேஷன் இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. பின்னர் இது குறித்த அபாய எச்சரிக்கை மணியை ஒலிக்க உள்ளூர் அளவில் பிரச்சாரங்களை அது மேற்கொள்கிறது.
“ஆட்கடத்தல் என்ற ஒன்று இருப்பதைப் பற்றியே பெரும்பாலும் அறியாதவர்களாகவே இந்தியாவின் பொதுமக்கள் இன்னமும் இருந்து வருகின்றனர். தங்கள் குழந்தைகள் உண்மையில் அடிமைத்தொழிலுக்கு விற்கப்படுகின்றனர் என்பதைப் பற்றிய தெளிவே இல்லாதவர்களாக பெரும்பாலான பெற்றோர்கள் உள்ளனர்”என மை சாய்சஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனரான எல்கா க்ரோப்ளர் குறிப்பிட்டார்.
“எனவேதான் ஆட்கடத்தல் வர்த்தகத்திற்கு முடிவு கட்டவேண்டுமெனில் கிராம அளவில், அடிமட்டத்தில் விழிப்புணர்ச்சியும், கல்வியும் மிக முக்கியமானதாக அமைகிறது” என செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் க்ரோப்ளர் தெரிவித்தார்.
இதில் மிகவும் அபாயத்திற்குரிய கிராமங்களைக் கண்டறிய ஆஸ்த்ரேலிய நிறுவனமான க்வாண்டியம் உருவாக்கியுள்ள பகுப்பாய்வு கருவி பல்வேறு வகையான அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்கள், வறட்சிக்கான அபாயம், வறுமையின் அளவு,கல்வி, வேலை வாய்ப்புகள் போன்ற அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இதில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ள பகுதிகளை அது கண்டறிகிறது.
அபாய எச்சரிக்கை
உலகம் முழுவதிலும் 4 கோடியே 60 லட்சம் பேர் அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1கோடியே 80 லட்சம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர் என2016ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணை தெரிவிக்கிறது. நவீன கால அடிமைத்தனத்திற்கு முடிவு கட்ட முயற்சிக்கும் உலகளாவிய அமைப்பான வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் இந்த அட்டவணையை உருவாக்கியுள்ளது.
கிராமத்தில் வசிப்பவர்கள் பலரும் நல்ல வேலை என்ற வாக்குறுதி, கொஞ்சம் முன்பணம் ஆகியவற்றின் மூலம் ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்.தாங்களோ அல்லது தங்களின் குழந்தைகளோ வயல்களில் அல்லது செங்கற்சூளைகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் நிலைக்கும், பாலியல் தொழில் மையங்களில் அடிமைகளாக ஆக்கப்படுவதையும், பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்கென விற்பனை செய்யப்படுவதற்கும் ஆளாவதை அவர்கள் இறுதியில்தான் உணர்கின்றனர்.
2016ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 20,000 பெண்களும் குழந்தைகளும் இந்தியாவில் ஆட்கடத்தலுக்கு பலியாகியுள்ளனர். அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 25 சதவீத அதிகரிப்பாகும்.
சமீப ஆண்டுகளில் இந்தியா தனது ஆட்கடத்தலுக்கு எதிரான கொள்கையை வலுப்படுத்தியுள்ளது என்ற போதிலும்,பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்ச்சி இல்லாத நிலையானது மிகப்பெரும் தடையாக தொடர்ந்து நீடிக்கிறது என ஆட்கடத்தலுக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2014ஆம் ஆண்டில் மை சாய்சஸ் ஃபவுண்டேஷன் “அபாய அறிவிப்பிற்கான நடவடிக்கை” என்ற திட்ட்த்தைத் துவக்கியது.பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராமப்புற தலைவர்கள்,குழந்தைகள் ஆகியோரிடையே ஆட்கடத்தல்காரர்கள் பற்றித் தெரிவிக்கும் வகையில் அறிவுறுத்தல் நிகழ்ச்சிகளை அது வழங்கியது.
எனினும் இந்தியாவில் 6,00,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், மிகக் குறைவான நிதியாதாரங்களே உள்ள நிலையில், இந்த அறக்கட்டளை இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவோரை எதிர்த்துப் போராடுவதற்கென பழைய,புதிய வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்,புதியதொரு புள்ளிவிவரங்களுக்கான கருவியை உருவாக்கவும் க்வாண்டியம் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது.
“ஒரு நேரத்தில் ஒரு கிராமம் என்ற வகையில் மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பம், அடிமட்ட அளவில் கல்வி ஆகிய இரண்டும் இணைந்த வகையில் பயன்படுத்திக் கொண்டு ஆட்கடத்தலை முற்றிலுமாகத் தடை செய்ய நாங்கள் உதவி செய்து வருகிறோம்” என க்ரோப்ளர் தெரிவித்தார்.
(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla, எடிட்டிங்: லிண்ட்சே க்ரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.