×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – குறைந்த ஊதியம் பெறும் இந்தியாவின் நெசவாலைத் தொழிலாளர்கள் 76 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு கோருகின்றனர்

Monday, 17 July 2017 00:00 GMT

Employees sit during their lunch time inside a textile mill of Orient Craft Ltd. at Gurgaon in Haryana, northern India April 16, 2014. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

  - அனுராதா நாகராஜ்

சென்னை, ஜூலை 17 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – கோடைக்கால புழுக்கத்தில் சென்னையில் உள்ள சின்னஞ்சிறிய நீதிமன்ற அறையில் சுமார் ஒரு டஜன் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் உலகத்தின் புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களுக்கு ஆடைகளை உருவாக்கித் தரும் தொழிற்சாலைகளில் வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியத்தை எதிர்த்து நீண்ட நாட்களாக நடத்தி வரும் வழக்கின்  சமீபத்திய விசாரணைக்காக அங்கு கூடியிருந்தனர்.

ஆண்டுக்கு 40 பில்லியன் அமெரிக்க  டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் செய்யும் இந்தியாவின் நெசவாலை மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலின் மிகப்பெரும் மையமான தமிழ்நாட்டில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களில் ஒரு சிலர் அங்கு இருந்தனர்.  நீண்ட நெடுநாட்களாகவே அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவர்கள் பல மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரி வருகின்றனர்.

இந்தத் தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் நெசவாலைத் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு பெற வேண்டும் என்றும், 2014ஆம் ஆண்டிலிருந்து ஊதிய நிலுவைத் தொகையை அவர்கள் கோரலாம் என்றும்  கூறப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளுக்கு இவர்கள் பெறவிருக்கும் முதல் குறைந்தபட்ச ஊதிய உயர்வு இதுவே ஆகும்.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு 12 மாதங்கள் ஆனபிறகும் கூட, தொழிற்சாலை முதலாளிகளில் பலரும் இந்த ஊதிய உயர்வையும் நிலுவைத் தொகையையும் வழங்கத் தவறியுள்ளனர்.

காற்றோட்டமில்லாத அந்த சென்னை நீதிமன்ற அறையின் பின்பகுதியில் ஒரு மூலையில் அந்த நடுத்தர வயதுப் பெண்மணி நீல நிறச் சுவர்களின் மீது சாய்ந்தபடி, தனது கோரிக்கையை நிரூபிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் நிரம்பிய பாலித்தீன் பையை இறுக்கமாகப் பிடித்தபடி நின்றிருந்தார்.

வழக்கமான நாட்களில் உலகத்தின் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனங்கள்  நிரம்பிய வீதிகளுக்குப் போய்ச் சேரும் ஆடைகளை, இடையாடைகளை, மேலாடைகளை தைப்பதற்காக தையல் இயந்திரத்தின் முன்பாக குனிந்தபடி நாள் முழுவதும் வேலை செய்பவர்தான் அவர்.

ஆனால் கடந்த பல மாதங்களாகவே  நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக அவர் விடுப்பு எடுத்து வருகிறார்.

“இந்த நீதிமன்ற நடவடிக்கையில் பங்கெடுக்க வருவதற்காக நான் ஒரு நாள் ஊதியத்தை இழக்க நேரிடுகிறது. பார்ப்பதற்கு அது பெரிய தொகையாகத் தெரியாதுதான். ஆனால் எங்களுக்கு அது கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணம்” என்று 48 வயதான அந்த தையல் கலைஞரான பெண்மணி கூறினார். தன் பெயரை வெளியிடுவது வழக்கை பாதிக்கும் என்பதால் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார் அவர்.

“நியாயமாக எனக்கு வந்து சேர வேண்டியதைத் தான் நான் கேட்கிறேன். எனக்கு வந்து சேர வேண்டிய தொகையை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்பதைக் கூட என்னிடம் சொல்ல மறுக்கிறார்கள்.”

சென்னைப் பகுதியில் உள்ள ஆயத்த ஆடைகளை தைப்பது, ஏற்றுமதி செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டுவரும் தொழிற்சாலைகளில் மட்டுமே 150க்கும் மேற்பட்ட நிலுவைத் தொகையைக் கோரும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் கோரியிருந்த மனுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துறைமுக நகரத்தைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் குறைந்தது  80,000 தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இதன் மொத்த தொகை ரூ. 49 கோடியாக இருக்கும் .

எனினும் இந்த நிலுவைத் தொகைக்கான கோரிக்கைகள் மேலோட்டமாகத் தெரிபவை என்றும், அரசின் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் பதிவு செய்யும் வழக்குகள் மட்டுமே இதில் கணக்கிடப்பட்டுள்ளது என தொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஊதிய வெட்டுக்கள்

சென்னை நீதிமன்றத்தின் 2016ஆம் ஆண்டுத் தீர்ப்பின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள ஆயத்த ஆடை மற்றும் நெசவாலை தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ. 4500-லிருந்து ரூ. 6000 ஆக உயரும். பெரும்பாலான மாநிலங்களில் நெசவாலை தொழில்களில் நிலவும் ஊதியத்திற்கு இது இணையானது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்தத் தீர்ப்பு வந்தபிறகு மேலாளர்கள் இந்தத் தொகையை வழங்காமலிருக்கவோ அல்லது தாமதிக்கவோ செய்கின்றனர்; அவர்களில் ஒரு சில ஊதிய வெட்டுக்களையும் அமல்படுத்தியுள்ளனர் என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

குறைந்த பட்ச ஊதியம் குறித்த மாநில அரசின் சட்டங்கள் இருந்தபோதிலும், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ‘மிக குறைந்த’ ஊதியத்தையே தொடர்ந்து பெற்று வருகின்றனர் . மேலும், அவர்களுக்கு இன்னமும் கூட ஊதிய விவரங்களைக் கொண்ட ரசீது தரப்படுவதில்லை என்பதோடு, அவர்கள் பெரும்பாலும் பயிற்சியாளர்கள் என்ற வகையில்தான் வேலைக்கு எடுக்கப்படுகின்றனர் என்றும் பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“தொழிலாளர்களுக்கு சரியான ஊதியத்தை வழங்குவதற்குப் பதிலாக, இந்த நிறுவனங்கள் அவர்களின் உரிமைகளை மறைமுகமாக நசுக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றன” என அவர்களின் வழக்குகளை நடத்தி வரும் தொழிலாளர் சங்கங்களுக்கு உதவி செய்து வரும் வழக்கறிஞரான செல்வி பழனி குறிப்பிட்டார்.

 “நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கிறது. என்றாலும் பணம் கைக்கு வந்தபாடில்லை.  தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.”

பெண் தொழிலாளர்களுக்கான ஒரு சங்கமான பெண் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த சுஜாதா மோடி கூறுகையில், ஊதியத்தை உயர்த்திய ஒரு சில நிறுவனங்களும் கூட இப்போது உடல் நலக் குறைவுக்காக விடுப்பு எடுக்கும் நாட்களுக்கான ஊதியத்தையும், தொழிற்சாலைகளில் வழங்கப்படும் உணவு, வீட்டிலிருந்து கூட்டி வந்து திரும்பக் கொண்டுவிடுவதற்கான போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றுக்கான தொகையை கழித்துக் கொள்கின்றன. இதற்கு முன்பு இவை அனைத்தும் இலவசமாக இருந்தது. இதன் பொருள் என்னவெனில் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் மிகக் குறைவான உயர்வையோ அல்லது எந்தவித உயர்வும் பெறாத நிலையையோ சந்திக்க நேர்கிறது.

ஒரு சில தொழிற்சாலைகள் கூடுதலான ஊதியம் பெற்றுவரும் தொழிலாளர்களை அற்பமான காரணங்களுக்காக வேலையில் இருந்து நீக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தொழிலாளர்களின் குறைகளைக் கேட்பது கடினமாக ஆகியுள்ள நிலையில் , தொழிற்சாலை நிர்வாகங்கள் அவர்களின் வருமானத்திலிருந்து பிடித்தம் செய்வதற்காக புதிய வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர்” என மோடி குறிப்பிட்டார்.

அடிக்கடி தொடரும் தாமதங்கள்

தொழிலாளர்களை சுரண்டலிலிருந்து காப்பாற்றுவதற்காக 1948ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.  எனினும் தமிழ்நாட்டில் நெசவாலை உற்பத்தியாளர்கள் இத்தகைய ஊதிய உயர்வை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.

கடந்த ஆண்டின் நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்க ஊதியங்கள் வழங்கப்படுகிறதா? என்பதை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் ஒவ்வொரு நிறுவனத்தின் ஆவணங்களையும் சோதித்து வருகின்றனர் என மாநிலத்தின் தொழிலாளர் நல ஆணையர் கா. பாலச்சந்திரன் தெரிவித்தார்.

“தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், அதை  உடனடியாகப் பெறவும் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் இந்த ஊதிய உயர்வு மிகவும் அதிகமானது என்றும், இதர மாநிலத்தில் உள்ள தங்கள் போட்டியாளர்கள் மத்தியில் தங்கள் நிலையை பலவீனமானதாக ஆக்குகிறது என்றும் கூறுகின்றனர்.

குறைந்த பட்ச ஊதியத்தை விட அதிகமாகவே தாங்கள் வழங்கி வருகிறோம் என்று அவர்களில் ஒரு சிலர் கூறுகின்றனர்.

“தனித்திறன் படைத்த தொழிலாளர்கள், தனித்திறன் பெறாத தொழிலாளர்கள் என்ற வேறுபாடு எதையும் இந்தப் புதிய விதிமுறைகள் செய்யவில்லை” என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த எஸ். சக்திவேல் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஒரு சில நிறுவனங்கள் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு எண்கள் தொடர்ந்து வரிசையாக அழைக்கப்படுகின்றன.

ரூ. 5,000 வரையில் நிலுவைத் தொகை பெறக்கூடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிரருக்கும்  அந்தத்  தையல்கார பெண்மணி, மெதுவாகச் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் சத்தத்திற்கு இடையே தனது வழக்கு எண் அழைக்கப்படுகிறதா என்று உன்னிப்பாக கேட்க முயல்கிறார்.

 “எனது நிதிநிலைமை ஒன்றும் நன்றாக இல்லை” என்று அவர் மெதுவாக முணுமுணுக்கிறார்.

“ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் எனது கணவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் உள்ளது. வீட்டையும் நடத்த வேண்டும். ஓராண்டிற்கும் மேலாக எனது நிறுவனம் எனக்கு நிலுவைத் தொகை தர வேண்டியுள்ளது. அந்த வருமானம் எனக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.”

அவரது வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படுகிறது. நிறுவனத்தின் சார்பில் வழக்காடும் வழக்கறிஞர் நீதிபதியிடம் இன்னும் சற்று கூடுதலான கால அவகாசம் கோருகிறார். வழக்கை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்ற நீதிபதியின் எச்சரிக்கையுடன் வேறொரு நாளுக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது.

 “ நல்ல தீர்வு கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்” என நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது அந்தத் தையல்கார பெண்மணி கூறினார்.

“இத்தனை ஆண்டுகள் வேலை செய்த பிறகு, வேலையிலிருந்து நின்று விட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் அது நடக்காது என்றே தோன்றுகிறது. குறைந்த பட்சம் அவர்கள் எனக்கு முறையாக சம்பளம் தருவார்களேயானால் , நான் கொஞ்சமாவது சந்தோஷப்படுவேன்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எம்மா பாதா. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->