×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தைக் கடத்தலுக்கு எதிராக உலகின் மிகப்பெரும் பேரணியை இந்தியா நடத்தவுள்ளது

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 22 August 2017 14:35 GMT

- நீதா பல்லா

புது டெல்லி, ஆக.22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஆட்கடத்தல், குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக உலகின் மிகப்பெரும் பேரணியை இந்தியா நடத்தவிருக்கிறது  என நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகளின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளருமான கைலாஷ் சத்யார்த்தி செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார். இந்தக் குற்றங்களைச் சுற்றியிருக்கும் மவுனத்தை உடைத்தெறிய இதுவே தருணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் இருந்து செப்டெம்பர் 11 அன்று புறப்பட்டு, அக்டோபர் 16 அன்று இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் முடிவடைய உள்ள இந்த ஒரு மாத காலப் பேரணியில் இந்தியா முழுவதிலுமிருந்து 1 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

 “குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, குழந்தைகளைக் கடத்துவது ஆகியவற்றுக்கு எதிரான ஒரு யுத்தத்தை நான் இன்று அறிவித்துள்ளேன். வரலாற்றின் மிகப்பெரிய சமூகரீதியான அணிதிரட்டலுக்கான இயக்கத்தையும் நான் இன்று அறிவிக்கிறேன்” என அவரது “பாதுகாப்பான குழந்தைப் பருவம்- பாதுகாப்பான இந்தியா” என்ற பிரச்சார இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சியில் சத்யார்த்தி குறிப்பிட்டார்.

 “நமது குழந்தைகள் எதிர்நோக்குகின்ற விஷயம் சாதாரணமான குற்றமல்ல; அது நமது நாட்டையும் உலகத்தின் இதர பகுதிகளையும் பிடித்தாட்டுகின்ற நெறிமுறை சார்ந்த தொற்று நோய். அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு நாடு என்ற வகையில் நமது மவுனத்தை நாம் கலைக்க வேண்டும். ஒரு நாடாக நாம் ஒன்றுபடுவதோடு, நமது குரலையும் எழுப்ப வேண்டும்.”

ஆட்கடத்தல், பாலியல் ரீதியான வன்முறை, சிறுவயது திருமணம் என்பதிலிருந்து துவங்கி, தரமான கல்வி, சுகாதார வசதி ஆகியவற்றைப் பெறுவது வரை இந்தியாவில் உள்ள குழந்தைகள் பல்வேறு வகையான சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2016ஆம் ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 27 சதவீதம் அதிகமாகும். இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் என்பதோடு ஆட்கடத்தல்காரர்களால் நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டப்பட்டு நகரங்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்களை அடிமைத் தனத்திற்கு விற்கப்படுகின்றனர்.

இவர்களில் சிலர் வீட்டு வேலை செய்பவர்களாக, அல்லது சிறு உற்பத்தி பிரிவுகளில் கட்டாயமாக வேலை செய்ய வேண்டியவர்களாக, விவசாயத்திலும் அல்லது பாலியல் தொழில் மையங்களில் பாலியல்ரீதியான அடிமைத்தனத்திற்குள் தள்ளப்படுபவர்களாக உள்ளனர். பல நேரங்களில் அவர்களுக்கு உரிய ஊதியமும் அளிக்கப்படுவதில்லை அல்லது கடன் அடிமைத்தனத்திற்குள் பிடித்து வைக்கப்படுகின்றனர். இவர்களில் சிலர் மட்டுமே கண்டுபிடிக்கப்படுகிறார்கள்; பலரும் தொடர்ந்து காணாமல் போனவர்களாகவே உள்ளனர்.

2015ஆம் ஆண்டில் பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் ஆபாச தளங்களுக்காக சுரண்டப்படுவது ஆகியவற்றில் கிட்டத்தட்ட 15,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய குற்றங்களுக்கான ஆவணப் பிரிவிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 67 சதவீதம் அதிகமாகும்.

எனினும், தூற்றப்படுவோம் என்றும், அவமானப்படுத்தப்படுவோம் என்றும் அல்லது இழிவான பெயர் சூட்டப்படுவோம் என்றும் அச்சப்படுவதன் விளைவாக இதனால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்து விடுவதோடு, தாங்கள் எதிர்கொண்ட கொடுமைகள் குறித்து எவ்வித புகாரையும் கொடுப்பதில்லை என்ற நிலையில் உள்ள சமூகரீதியாக பழமையானதொரு சமூகத்தில் இந்தப் புள்ளிவிவரங்கள் முற்றிலும் குறைவான மதிப்பீடே ஆகும் என இது குறித்த செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்யார்த்தி நடத்தி வரும் பாச்பன் பச்சாவ் அந்தோலன் (குழந்தைப் பருவத்தைக் காப்பதற்கான இயக்கம்) என்ற அறக்கட்டளை இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட 80,000 குழந்தைகளை மீட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்பவும், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கென வலுவான கொள்கைகளை அமலாக்கக் கோரியும் மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்தப் பேரணி என சத்யார்த்தி குறிப்பிட்டார்.

இந்தப் பேரணியில் பங்குபெறுவோர் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 22 மாநிலங்களைக் கடந்து 11,000 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொள்வார்கள். அவர்கள் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் நின்று பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று உள்ளூர் அதிகாரிகள், காவல்துறையினர், மத மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

“பாலியல் ரீதியான வன்முறை குறித்து அவமானப்படுவதற்குப் பதிலாக, அது குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டும் என்று நாங்கள் குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும், அவர்களது இனத்தவரிடமும் சொல்வோம். ஆட்கடத்தல்காரர்கள் குழந்தைகளை கடத்திச் செல்லும்போது அதைக் கண்டும் காணாணது போல் வேறு பக்கம் பார்க்காமல் , அவை குறித்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் நாங்கள் மக்களிடம் எடுத்துரைப்போம்” என்று சத்யார்த்தி குறிப்பிட்டார்.

“மிக நீண்ட நாட்களாகவே நாம் மவுனமாக இருந்துவந்திருக்கிறோம். ஆட்கடத்தலுக்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாம் வற்புறுத்த வேண்டியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக நமது சட்ட அமைப்பிலும் சீர்திருத்தங்களையும் நாம் வலியுறுத்த வேண்டும். நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால்தான் புதிய இந்தியா என்ற கனவு நனவாகும்.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->