- அனுராதா நாகராஜ்
சென்னை, ஆக. 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கடந்த 56 ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவின் ஆயத்த ஆடைகளுக்கான மையமாக விளங்கும் தென் இந்தியாவில் பயிற்சித் தொழிலாளர்கள் இனியும் இவ்வாறு பயிற்சியாளர்களாக சிக்கிக் கிடக்க மாட்டார்கள். எனவே இதை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என இது குறித்து பிரச்சாரம் செய்து வருவோரும், தொழிற்சங்கங்களும் புதன்கிழமையன்று கோரிக்கை விடுத்தன.
கடந்த பத்தாண்டு காலமாக இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து ஒரு தொழிலாளியை பயிற்சியிலேயே இருத்தி வைப்பதற்கான கால அளவைக் குறுக்கியதோடு, தொழிற்சாலையில் மொத்தம் வேலைசெய்பவர்களில் 10 சதவீதம் பேரை மட்டுமே பயிற்சியாளர்களாக வைத்துக் கொள்ள அனுமதிப்பது ஆகிய அம்சங்களுடன் 1961ஆம் ஆண்டின் பயிற்சிக்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது.
நூற்பாலைகளிலும் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளிலும் பத்தாயிரக் கணக்கான இளம் பெண்கள் மூன்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பயிற்சியாளராகவே சிக்கிக் கொண்டுள்ளனர் எனவும், குறைந்த பட்ச ஊதியத்திற்கும் அதிகப்படியான நேரத்திற்கும் அவர்கள் வேலை செய்கின்றனர் எனவும், அவர்களுக்கு எந்த வித தொழிலாளர் நல சலுகைகளோ அல்லது வேலைக்கான பாதுகாப்போ கிடைப்பதில்லை என்றும் இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவோர் தெரிவித்தனர் .
இச்சட்டத்தின் புதிய விதிகள் பயிற்சிக்கான காலத்தை ஆறுமாதங்கள் முதல் ஓராண்டு வரை என குறுக்கியுள்ளதோடு, நிரந்தர தொழிலாளர்களின் படையில் அவர்களும் இணைவதற்கான வாய்ப்பையும் இத்தொழிலாளர்களுக்குக் கொடுத்துள்ளது. இவ்வாறு திருத்தப்பட்ட சட்டம் உடனடியாக அமலாக்கப்பட வேண்டுமென்று இதுகுறித்த பிரச்சாரகர்கள் கோரியுள்ளனர்.
“இத்தொழிலில் சுரண்டல் என்பது மிகப் பெருமளவிற்கு நீடித்து வருகிறது” என கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இச்சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென பிரச்சாரம் செய்து வந்த ஆல் இந்தியா கவுன்சில் ஆஃப் ட்ரேட் யூனியன்ஸ் (ஏஐசிசிடியு) அமைப்பைச் சேர்ந்த அனந்தராமன் சிவகுமார் கூறினார்.
“சட்டத்தில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பாதை மிக நீண்டதாகவே இருந்தது. இது அமல்படுத்தப்படுமானால், தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், சமூகப் பாதுகாப்பு, முறையான விடுமுறை ஏற்பாடுகள், மேலும் நாகரீகமான வாழ்க்கை ஆகியவற்றை இச்சட்டத்தினால் அளிக்க முடியும்.”
திருத்தப்பட்ட விதிகள் இளம் பெண்களை பயிற்சியாளர்களாக வேலைக்கு வைத்து ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர்களை வழக்கமான உற்பத்தி வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது, மூன்றாண்டுகளுக்குப் பிறகு கணிசமான தொகையை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்குவது போன்ற முறைகளுக்கு முடிவைக் கொண்டு வரும் என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.
இந்த இளம் பெண்களுக்கு இப்போது முறையான ஒப்பந்தங்கள், வரையறுக்கப்பட்ட கால அளவிலான பயிற்சிக் காலங்கள், நிரந்தர வேலையைப் பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவை கிடைக்கக் கூடும்.
“பல நேரங்களில் இந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளப்பட்டியல் கூட வழங்கப்படுவதில்லை; அவர்கள் எவ்வளவு ஊதியம் ஈட்டினார்கள்; எவ்வளவு பிடித்தம் அதில் செய்யப்பட்டது என்ற விவரங்கள் வாய்மொழியாகவே தெரிவிக்கப்பட்டன” என பெண்களை மட்டுமே கொண்ட தமிழ்நாடு டெக்ஸ்டைல் அண்ட் காமன் லேபர் யூனியனின் (டிடிசியு) ஆலோசகரான தியா சேசுராஜ் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்தியாவின் நெசவு மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலில் மிகப்பெரும் மையமாக விளங்கும் தமிழ்நாட்டில் சுமார் 4,00,000 பேர் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளை தயாரிக்கும் நூற்பாலைகளிலும் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வருகின்றனர்.
இத்தொழிலில் ஈர்க்கப்படும் பெருமளவு பெண் தொழிலாளர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
2016 ஆம் ஆண்டில் மாநில தொழிலாளர் நலத்துறையினால் முன்வைக்கப்பட்ட மிக விரிவான விளக்கக் காட்சிபெரும்பாலான நெசவாலைகளில் நிரந்தரமாக்கப்பட்ட தொழிலாளர்களை விட அதிகமான எண்ணிக்கையில் பயிற்சித் தொழிலாளர்கள் உள்ளதையும், அவர்களுக்கு மிகக் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது என்பதையும், ‘மூன்றாண்டுகால பயிற்சிக் காலத்தின்’ முடிவில் அவர்களில் பெரும்பாலோர் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர் என்பதையும் தெரிவித்தது.
“அவர்களின் வாய்ப்புகள் வளர்ப்பதைத் தடுப்பதன் மூலம் பெண் தொழிலாளர்களின் உரிமைகளை இனிமேல் இத்தொழில் நசுக்கி வைக்க முடியாது. இப்போது அவர்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர் அணியின் ஒருபகுதியாக ஆக்க வேண்டும் என்பதோடு அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உரிய சம்பளத்தையும் கொடுக்க வேண்டும்” என சிவகுமார் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மாற்றங்கள் இறுதியாக தமிழ்நாடு அரசிலிருந்து செயல்படுத்துவதற்கான உத்தரவிற்காக காத்துக் கொண்டிருந்தன.
“2008ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக நாங்கள் இந்த மசோதாவை அனுப்பி வைத்ததற்குப் பிந்தைய காலத்தில் இத்துறையில் பெருமளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன” என மாநில தொழிலாளர் நலத்துறையின் முன்னாள் தலைவரான பி. அமுதா தெரிவித்தார்.
“மாறுதலுக்கு உள்ளான இச்சட்டத்தை அமல்படுத்துவதில் எவ்விதமான தடங்கலும் இல்லாத வகையில், ஒவ்வொருவரும் இதற்கு ஒப்புதல் தெரிவிப்பதற்காக தொழிலாளர் நலத்துறை இது குறித்து ஊழியர்கள், நிர்வாகத்தினர் ஆகியோருடன் நடத்தி வரும் கலந்தாலோசனை அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது.”
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.