- நீதா பல்லா
புது டெல்லி, அக். 13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சிறுவயதினரை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கு முடிவு கட்டுவது குறித்து இந்தியா தீவிரமாக இருக்குமெனில், பாலியல் தொழிலின் ‘வாடிக்கையாளர்’களை இலக்கு வைத்து இதற்கான தேவையை மட்டுப்படுத்த வேண்டும் என இது குறித்த நிபுணர்கள் வெள்ளிக்கிழமையன்று கோரினர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மை நிரம்பிய கிராமத்துக் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள், இவர்களில் பெரும்பாலோர் ஏழ்மை நிரம்பிய கிராமத்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்பட்டோ அல்லது கடத்தப்பட்டோ அவர்களை பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்கு ஆட்படுத்துகின்ற பாலியல் தொழிலில் உள்ள இடைத்தரகர்களுக்கும் பாலியல் தொழில் மையங்களுக்கும் விற்று விடுகின்றனர்.
கடந்த பல வருடங்களாகவே இந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராடும் வகையில், இது குறித்த சட்டங்களை வலுப்படுத்துவது; வறுமையில் ஆழ்ந்துள்ளவர்களை மேம்படுத்துவதற்கான சமூக நலத்திட்டங்களை அதிகரிப்பது போன்ற பல நடவடிக்கைகளை அரசு அறிமுகப்படுத்தி வந்துள்ள போதிலும் பாலியல் ரீதியான சுரண்டலுக்காக இளம் சிறுமிகள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் மிக மோசமான வகையில் அமலாக்கம் செய்வதன் விளைவாக இந்த நிலைமை நீடிக்கிறது என காவல்துறை அதிகாரிகளும், கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் தெரிவிக்கின்றனர். சிறுவயதினருடன் பாலியல் உறவு கொள்வதை விலை கொடுத்து வாங்கும் ஆண்களின் மீது அரசு தன் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்று அவர்கள் கோரிய அதே நேரத்தில், நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதே இதற்கான மிகப்பெரிய தடுப்பு நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். குழந்தைகளுடனான பாலியல் உறவை விலைக்கு வாங்கும் ஆண்களை இலக்கு வைத்து தண்டிக்க வேண்டுமென இந்தியாவிடம் வற்புறுத்தல்
“வணிகரீதியான பாலியல் சுரண்டலின் மையமாக இருப்பது அதன் வாடிக்கையாளர்களே” என இந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கென புதியதொரு அறிக்கையை வெளியிட்டுள்ள மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தின் ஆட்கடத்தல் குறித்த ஆய்வுக்கான ஒருங்கிணைப்பாளரும் தலைமைப் பேராசிரியருமான பி.எம். நாயர் கூறினார்.
“இத்தொழிலில் ஈடுபடும் ஆட்கடத்தல்காரர்கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்பவர்கள், இடைத்தரகர்கள், பாலியல் தொழில் மையங்களின் உரிமையாளர்கள் போன்றவர்களின் மீது நாம் கவனத்தைச் செலுத்தலாம். என்றாலும் இவை அனைத்திற்கும் மையமாக இருப்பது இத்தொழிலுக்கான வாடிக்கையாளர்கள் என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இந்த வாடிக்கையாளர்களுக்கு தண்டனை என்று ஏதாவது இருக்குமானால், அது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது.”
குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விலைக்கு வாங்குவது, விற்பது போன்றவற்றை எதிர்த்துப் போராடும்போது அதிகாரிகள் ‘வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட’ அணுகுமுறையை மேற்கொண்டு, இதற்கான தேவையை கட்டுப்படுத்தாதவரை, இந்தக் குற்றம் நடைபெறாமல் நிறுத்துவதற்கு இந்தியாவினால் இயலாது என்றும் நாயர் கூறினார்.
ஆட்கடத்தல்காரர்களுக்கு மிக எளிதான இரை
உலகத்தில் மிக அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அதன் 120 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் 18 வயதிற்குக் கீழுள்ளவர்கள் ஆவர்.
கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி பல லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து உயர்த்திய போதிலும், இன்னமும் மிக மோசமான குடும்பச் சூழ்நிலைகளில்தான் பல குழந்தைகளும் பிறந்து வருகின்றன. உலகத்தில் வறுமையில் உழன்று வரும் 38 கோடியே 50 லட்சம் குழந்தைகளில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உள்ளனர் என உலக வங்கி தெரிவிக்கிறது.
இத்தகைய நிலைமைகளில் உள்ள குழந்தைகள்தான் வேலை, நல்ல வாழ்க்கை என்ற வாக்குறுதிகளைக் கொண்டு ஆட்கடத்தல்காரர்களால் கவரப்படுகின்றனர். எனினும் பெரும்பாலும் அவர்கள் பல்வேறு வகைப்பட்ட கட்டாய உழைப்பில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
2016ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பெண்களும் குழந்தைகளும் ஆட்கடத்தலுக்கு இரையாகியுள்ளனர். இது அரசின் புள்ளிவிவரங்களின்படியே அதற்கு முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகரிப்பாகும்.
அவர்கள் நகரங்களில் டிராஃபிக் விளக்குகளுக்கு அருகே சுற்றிக் கொண்டும், வரும் கார்களுக்கு இடையே நகர்ந்து சென்று, அவற்றின் கண்ணாடிகளைத் தட்டி பிச்சை எடுப்பதையோ அல்லது சாலையோர உணவகங்களில் தட்டுகளைக் கழுவிக் கொண்டோ, அல்லது பருத்தி, நெல் அல்லது சோளம் விளையும் வயல்களில் கடும் வெயிலில் உழைத்துக் கொண்டு, கடுமையான பூச்சிக் கொல்லிகளை சுவாசிக்க வேண்டிய நிலையில் ஆழ்த்தப்பட்டோ இருக்கின்றனர்.
வசதியான நடுத்தர வர்க்க இல்லங்களில் அவர்கள் துடைத்து மெழுகிக் கொண்டு, வீட்டு உரிமையாளரின் குழந்தைகளை, சில நேரங்களில் தங்களை விட அதிக வயதுடைய குழந்தைகளை, பாராமரித்துக் கொண்டும், அறிமுகமில்லாதவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்வதற்காக முகத்தில் வண்ணங்களைப் பூசிக் கொண்டு காத்திருக்கின்றனர்.
இவர்களில் ஒரு சில குழந்தைகள் தப்பித்துச் செல்ல முடிகிறது அல்லது குழந்தைகள் நலனுக்கான செயல்பாட்டாளர்கள் அல்லது உள்ளூர்வாசிகள் , மற்றவர்களால் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் நடைபெறும் காவல்துறையின் அதிரடி சோதனைகளில் இத்தகைய பாலியல் மையங்களிலிருந்து மீட்கப்படுகின்றன. இந்த அளவிற்கு அதிர்ஷ்டமில்லாதவர்கள் வருடக்கணக்கில் இதில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகரின் முன்முயற்சியில் துவங்கப்பட்ட நேஷனல் கோயலிஷன் டு ப்ரொடெக்ட் அவர் சில்ட்ரன் (என்சிபிஓசி) என்ற அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல நடவடிக்கைகளில் விலைகொடுத்து பாலுறவை வாங்கும் ஆண்களின் மீது கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்றாகும்.
காணாமல் போன குழந்தைகள் பற்றிய புள்ளிவிவரத்தொகுப்பை உருவாக்குவது; சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புகளுக்கென பயிற்சி, ஆதாரங்கள் ஆகியவற்றை அதிகரிப்பது; குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது ஆகியவை இந்த அறிக்கையின் மற்ற பரிந்துரைகள் ஆகும்.
“நம் நாட்டில் மிக மோசமான வறுமை நிலவி வரும் பெரும்பாலான பகுதிகள் இத்தகைய குழந்தைக் கடத்தலுக்கு உதவும் சூழ்நிலையை இன்னமும் எதிர்கொண்டு வருகின்றன. நமது குழந்தைகளை பாதுகாப்பதற்கான நிறுவனரீதியான அமைப்பு ஏதும் இல்லாததும் இந்த நிலைமையை மேலும் மோசமானதாக ஆக்குகிறது” என சந்திரசேகர் தெரிவித்தார்.
“இத்தகைய வாடிக்கையாளர்களின் மீது வழக்கு தொடுப்பதற்கு உரிய சட்டங்கள் இருக்கவே செய்கின்றன. எனினும் அவை அமலாக்கப்படுவதில்லை.”
(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.