- அனுராதா நாகராஜ்
சென்னை, டிச. 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கடத்திக் கொண்டு வரப்பட்ட பதின்பருவச் சிறுமிகளை ‘வழிக்குக் கொண்டு வருவதற்காக’ மேற்கு வங்காள பாலியல் தொழில்மையங்களில் கையாளப்படும் வன்புணர்ச்சி, அடி-உதைகள், பட்டினி போன்ற கொடூரமான தண்டனைகள் ‘யாருக்குமே முடியாது’ எனச் சொல்ல இயலாத அல்லது இத்தகைய சூழலிலிருந்து தப்பிக்கவோ முடியாத நிலைக்கு அந்தச் சிறுமிகளை ஆக்கிவிடுகின்றன என ஓர் ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
விபச்சாரத் தொழிலில் தள்ளப்படுவதற்கு முன்பாக எத்தகைய வன்முறையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதன் ஒரு சிறு பகுதியை கொல்கத்தாவில் பாலியல் ரீதியிலான நோக்கங்களுக்காகக் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளின் வாக்குமூலங்கள் எடுத்துக் கூறுகின்றன.
“இந்தச் சிறுமிகளின் எதிர்ப்புணர்வை உடைத்தெறிய ஆட்கடத்தல்காரர்கள் ‘வழிக்குக் கொண்டுவரும்’ செயல்முறையை பின்பற்றுகின்றனர்” என மேற்கு வங்க மாநில அரசுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்ட இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த சாஜி பிலிப் கூறினார்.
“இதில் தப்பிப் பிழைத்தவர்களில் 55 சதவீதம் பேர் பலவிதமான பொருட்களால் தாக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சில இதர சிறுவர்களை கொலை செய்வதைக் காணும்படி கட்டாயப்படுத்தப் படுத்தப்பட்டனர். அவர்களின் இந்த வழிமுறைகள் அனைத்துமே மிகவும் வன்முறையானதாகவும் கொடூரமானதாகவும் இருந்தன.”
கொல்கத்தாவில் பெண் குழந்தைகளை வணிக ரீதியாக பாலியல் தொழிலில் சுரண்டி வரும் நிலை குறித்த இந்த அறிக்கை இதிலிருந்து மீண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ‘வழிக்குக் கொண்டுவரப்படும்’ காலப்பகுதியை கடக்க நேர்ந்தது என்றும், முதல் வாடிக்கையாளரால் வன்புணர்ச்சிக்கு ஆளாவது, அச்சுறுத்தல்கள், உடலளவிலான வன்முறை ஆகியவையும் இதில் அடங்கும் என்றும் தெரிவித்தது.
அரசின் புள்ளிவிவரங்களின்படி 2016ஆம் ஆண்டில் தெரிய வந்த ஆட்கடத்தல் சம்பவங்களில் 44 சதவீதம் கொல்கத்தாவை தலைநகராகக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றவை ஆகும். அதைப் போன்றே காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கையிலும் பெரும்பாலானவை இந்த மாநிலத்திலிருந்தே வெளிவந்துள்ளன.
இவர்களில் ஒரு சிலர் இரண்டு வாரங்களுக்கு மேலான காலத்திற்கு தொடர்ந்து அடி-உதைக்கு ஆளானதோடு, சிகரெட்களால் சூடு வைக்கப்பட்டனர். சிலர் தனியாக அடைத்து வைக்கப்பட்டனர். ஒருவர் 12 நாட்களுக்கு உணவின்றி ஓர் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என இதிலிருந்து தப்பித்தவர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு வழிக்குக் கொண்டு வருவதற்கான காலப்பகுதியோடு கூடவே, இவர்களை பாலியல் தொழிலில் இறங்குவதற்கு கட்டாயப்படுத்த கடன் அடிமைத்தனத்தையும் இத்தொழிலின் மேலாளர்கள் பயன்படுத்தியுள்ளனர் என சென்ற வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இவர்களில் சுமார் பாதிப் பேரிடம் அவர்கள் விலைக்கு விற்கப்பட்டுவிட்டனர் என்றும் அந்தப் பணத்தை திருப்பித் தராத வரையில் அவர்களால் இதிலிருந்து வெளியேற முடியாது என்றும் இந்த மேலாளர்கள் கூறியுள்ளனர்.
நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் என்ற உறுதிமொழியை கூறி அழைத்து வரப்பட்டு ஏமாற்றி விபச்சாரத் தொழிலில் இவர்களை கட்டாயப்படுத்தி நுழைப்பதற்கு முன்பாக அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து மாதக்கணக்கில் அவர்களின் உணவுக்காகவும், உடைக்காகவும், இருப்பிடத்திற்காகவும் செய்துள்ள செலவைத் திருப்பித் தரவேண்டியுள்ளது என மற்றவர்களிடம் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் ‘வழிக்குக் கொண்டுவரப்பட்ட’ பிறகு நாளொன்றுக்கு ஏழில் இருந்து பதினெட்டு வாடிக்கையாளர்கள் வரையில் தாங்கள் சேவை செய்ய வேண்டியிருந்தது என இதிலிருந்து தப்பித்தவர்கள் கூறியிருந்தனர்.
“வாடிக்கையாளர்களின் வார்த்தையை எப்போதும் தட்ட வேண்டாம். அவர்கள் நன்றாக அனுபவிக்க வேண்டும். அதனால் ஏற்படும் வலியை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்த வேண்டாம் என அவர்கள்(மேலாளர்கள்) எங்களிடம் கூறுவார்கள்” என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பதின்பருவச் சிறுமி இந்த அறிக்கைக்காக எடுக்கப்பட்ட பேட்டியில் கூறியிருந்தார்.
“அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால் அதிகமாகவே பணம் தருவார்கள்.”
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.