- அனுராதா நாகராஜ்
புதுதில்லி, டிச. 13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – தில்லியில் உள்ள ஒரு பாலியல் தொழில் மையத்தில் கறைபடிந்த சுவற்றின் சாற்றப்பட்டிருந்த ஏணி இருட்டான ஒரு பாதைக்கு இட்டுச் செல்கிறது. அங்கே பூட்டப்பட்ட கதவுகள் வரிசையாக உள்ளன. அவற்றுக்குள்ளே பாலியல் தொழிலாளர்களின் உடைகள், கம்பளிப் போர்வைகள், அழகு சாதனங்கள், கருத்தடை உறைகள் ஆகியவற்றால் நிரம்பிய சின்னஞ்சிறு கூண்டுகள் மறைந்திருக்கின்றன.
மிகக் குறைவான வெளிச்சம் கொண்ட அந்த வழியின் குறுக்கே அதேபோன்ற மற்ற இருட்டான வழிகள் குறுக்கிடும் வகையில் சென்று இறுதியில் ஒரு தூக்கும் வகையிலான கதவின் முன்னால் சென்று முடிகிறது. திறக்கும்போது வாடிக்கையாளர்கள் அல்லது வெளியாட்களின் கண்களில் மிக அபூர்வமாகவே தென்படும் மற்றொரு ரகசிய இடத்தை அது வெளிப்படுத்துகிறது.
“உண்மையில் அவை மற்றவர்களை ஏமாற்றுவதற்கும் ஒளித்துவைக்கவுமே செய்யப்பட்டுள்ளன” என பாலியல் தொழிலாளி ஒருவர் அமைதியாகக் கூறினார்.
“எவரொருவரும் வழி தவறிவிடுவார்கள் என்பதோடு பின்பு கண்ணில் தென்படாமலேயே போய்விடுவார்கள்”
கடத்தி வரப்பட்ட இளம் பெண்கள், புதுதில்லி மற்றும் இதர முக்கிய பெருநகரங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களில் இருந்து செயல்படும் பாலியல் தொழில் மையங்களில் இருக்கும் இத்தகைய சுற்றுவழிகள், ரகசிய அறைகளுக்குப் பின்னால் – சட்டத்தின் பார்வையிலிருந்து மறைக்கப்படுவதோடு – விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதற்காக ‘வழிக்குக் கொண்டு வரப்படும் இடம்’ ஆகவும் இவை உள்ளன என இது குறித்த பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் தொழில்ரீதியாக விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி பேரில் சுமார் 1 கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகவே கடத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர் என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்; அல்லது கட்த்தப்படுகின்றனர். பின்னர் அவர்கள் பாலியல் தொழிலில் உள்ள இடைத்தரகர்கள், பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர். பின்னர் அவர்களால் இந்தப் பெண்களும் சிறுமிகளும் பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
“இந்த மறைவு அறைகள் சிறுவயதினரை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள் தப்பித்துப் போவதற்கான வழியாகவும் இது அவர்களுக்கு விளங்குகிறது” என இந்த ஆண்டில் 57 சிறுமிகளை விடுவித்த பெண்களுக்கான தில்லி கமிஷனின் தலைவரான ஸ்வாதி ஜெய் ஹிந்த் கூறினார்.
“குழந்தைகள் இங்கு அழைத்து வரப்படுவது பற்றிய குறிப்பான தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன. அவர்களை மீட்பதற்காக நாங்கள் இங்கு வரும்போது சில நேரங்களில் எந்தச் சிறுமியும் இருப்பதில்லை; அவர்கள் கண்ணில் தென்படாமலேயே மறைந்து விடுகின்றனர்.”
பாலியல் ரீதியான நோக்கங்களுக்கான ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதிலிருந்து தொடங்கி சமூக நலத் திட்டங்களை அதிகரிப்பது வரையிலான பலவேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
எனினும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவே இளம் சிறுமிகள் விற்கப்படுவது குறித்தும் அவர்கள் இத்தகைய மறைவிடங்களில் ஒளித்து வைக்கப்படுவது குறித்துமான தகவல்கள் அதிகரித்து வருகின்றன என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.
“இத்தகைய இருண்ட, அசுத்தமான இடங்களுக்குள்ளே எத்தகைய வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்பதை சிறுமிகள் விவரிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது” என அடிமைத்தனத்திற்கு எதிரான அறக்கட்டளையான சக்தி வாஹினியைச் சேர்ந்த ரிஷி காந்த் கூறினார்.
“ஒரு மீட்பு நடவடிக்கையில் நாங்கள் பங்கெடுத்தபோது, உடைகளை, பொருட்களை வைப்பதற்கான ஓர் அலமாரியைப் போலத் தோற்றமளித்த ஒரு இடம் கண்ணுக்குத் தென்படாத ஒரு ரகசிய வழியைக் காட்டியது. அங்கே நாங்கள் சில சிறுமிகளைக் கண்டுபிடித்தோம். இது குறித்து உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.”
பாதாள அறைகளில் மறைந்திருப்பவர்கள்
காவல்துறையைச் சேர்ந்த பிரபீர் குமார் பால் இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் காணாமல் போன ஒருவரைப் பற்றிய விசாரணையை துவக்கியபோது அது சாதாரணமானதொரு வழக்கு என்றே அவர் கருதியிருந்தார்.
எனினும் அந்தப் பதின்பருவப் பெண்ணை அவர் தேடிச் சென்றபோது அது புதுதில்லி, நாட்டின் தலைநகருக்குத் தெற்கே சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் (124 மைல்) உள்ள சுற்றுலாத் தலமும், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் இருக்கும் நகரமும் ஆன ஆக்ரா ஆகியவற்றில் உள்ள பாலியல் தொழில்மையங்களுக்கு அவரை இட்டுச் சென்றது.
“ஆக்ராவில் இருந்த பாலியல் தொழில் மையங்களில் சர்வதேச எல்லைப் பகுதிகளில் காணப்படுவது போன்றே பாதாள அறைகள் இருந்தன” என்று அவர் கூறினார்.
“அந்தப் பெண்ணை விடுவிப்பதற்காக நாங்கள் அவற்றை உடைத்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இத்தகைய பாதாள அறைகளில் மேலும் ஆறு சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். அவர்களை மீட்பதென்பது போருக்குப் போவதைப் போலத்தான் இருந்தது” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.
ஆட்கடத்தல்காரர்கள் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து சிறுமிகளை கடத்திக் கொண்டு தில்லி சென்று அங்கு பாதுகாப்பான வீடுகளில் வைக்கின்றனர். பின்பு அவர்களை இதர நகரங்களில் செயல்பட்டு வரும் பாலியல் தொழில் மையங்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர் எனவும் பால் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதத்தில் கணவன் – மனைவி ஆகியோரை தில்லியில் கைது செய்ததன் விளைவாக இந்தப் பகுதியின் மிகப்பெரிய ஆட்கடத்தல் வலைப்பின்னல் உடைத்தெறியப்பட்டது. “காவல்துறையின் சோதனையின்போது இளம் சிறுமிகளை ஒளித்து வைக்க எவ்வாறு பாதாள அறைகளும் சுரங்கப் பாதைகளும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன என்பது குறித்த மிகவும் அபூர்வமான விளக்கம் எங்களுக்குக் கிடைத்தது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கடத்தி வரப்பட்ட இளம்பெண்களில் பலரும் ஜிபி ரோட் என்று பொதுவாக அறியப்படும் புதுதில்லியின் மிகப்பெரும் சிவப்பு விளக்குப் பகுதியின் சந்தடிமிக்க தெருக்களுக்கு வந்து சேர்கின்றனர்.
கட்டிடத்திற்கான இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை ஒட்டியிருக்கும் போதிய வெளிச்சமில்லாத படிக்கட்டுகள் பல்வேறு தளங்களில் இருந்து செயல்படும் நூற்றுக்கணக்கான பாலியல் தொழில்மையங்களுக்கான வழியாக உள்ளன. இடைத்தரகர்கள் வாடிக்கையாளர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கையில், பேரிளம் பெண்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க முனையும்போது, இளம் பெண்கள் அமைதியாக இவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பரிமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டபிறகு வாடிக்கையாளர்கள் இந்தப் பாலியல் தொழில் மையங்களுக்குள் நுழைகின்றனர். அவர்கள் மிகச் சிறிய, ஜன்னல்கள் ஏதுமில்லாத அறைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பின்பு கதவுகள் மூடப்படுகின்றன.
“நான் இந்த இடத்திற்கு 20ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டபோதில் இருந்தே இந்த இடத்தில் எதுவுமே மாறவில்லை” என வாடிக்கையாளர்களை சந்திப்பதற்குத் தயாராக ஒப்பனை செய்து கொண்டிருந்த பாலியல் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டார்.
“நான் இங்கே வந்தபோது இந்த இடம் மிகவும் அசுத்தமானதாக இருந்தது. இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. நெளிந்து வளைந்து செல்லும் வழிகளில் உள்ள அறைகள், செய்யப்படும் ஒப்பந்தங்கள், இங்கு சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களின் நிலைமை ஆகிய அனைத்துமே காலத்தால் உறைந்து நிற்கின்றன.”
இவ்வாறு மீட்கப்படுவோர் தெரிவிக்கும் தகவல்கள் மேலும் மேலும் அதிகமான அளவில் பாலியல் தொழில் மையங்களின் அமைப்பைப் பற்றியும், அங்கே நிகழ்ந்து வரும் சுரண்டலின் தீவிரம் குறித்தும் ஆதாரங்களை வழங்குகின்றன. இத்தகைய பாலியல் தொழில் மையங்களை மூட வேண்டும் என்று பல அமைப்புகளையும் தூண்டுவதற்கு இது வழிவகுத்துள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்டபிறகு, கடந்த மே மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கான கமிட்டி இந்த ஜிபி ரோடில் உள்ள பாலியல் தொழில்மையங்களில் உள்ள ‘ரகசிய பகுதி’களை உடைக்குமாறு உத்தரவிட்டது.
இத்தகைய ரகசிய அறைகளையும் வழிகளையும் கண்டுபிடித்து அவற்றுக்கு சீல் வைக்குமாறு தில்லியின் பெண்களுக்கான கமிஷன் காவல்துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
“இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என ஹிந்த் குறிப்பிட்டார்.
“இந்த பாலியல் தொழில் மையங்களின் உரிமையாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். இவற்றை மூடவைப்பதிலும் நாங்கள் உறுதியோடு உள்ளோம்.”
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.