அனுராதா நாகராஜ்
சென்னை, டிச. 27 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தமிழ்நாட்டில் ஒரு பின்னலாடைத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 21 வயதுப் பெண்ணின் மரணம் பல லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள தொழிலில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்துவரும் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் குறித்த உரிமைகளுக்கான இயக்கத்தினர் மத்தியில் மீண்டும் கவலையை தூண்டியுள்ளது.
ஒரு சில நாட்கள் ஜுரத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தமிழ்நாட்டின் பின்னலாடைத் தொழிலின் மையமான திருப்பூரில் ஒரு மருத்துவமனையில் டிசம்பர் 14ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
உடற்கூறு பரிசோதனையைத் தொடர்ந்த புலன்விசாரணை முடிவுகள் மூலமான அவரது இறப்பின் காரணம் இன்னும் தெரியவராத நிலையில் உள்ளது என காவல் துறை தெரிவித்தது.
நெசவாலைத் தொழிலாளர்களிடையே செயல்பட்டு வரும் ஓர் அறக்கட்டளையான ரைட்ஸ் எஜுகேஷன் அண்ட் டெவலெப்மெண்ட் செண்டர் இந்தப் பெண்ணின் மரணம் குறித்து அளித்த ஓர் அறிக்கை இடம்பெயர்ந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு “குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், அவர்கள் பதிவு செய்யப்படுவதில்லை” என்றும் குறிப்பிடுகிறது.
தென் இந்தியாவின் நெசவாலை மையத்தில் வேலை செய்வதற்காக இடம் பெயர்ந்து வருகின்ற தொழிலாளர்கள் குறித்த கவலை அதிகரித்து வருகிறது. அவர்கள் உலகப் புகழ்பெற்ற வணிக நிறுவனங்களுக்கென நூல் நூற்பது, ஆடைகளைத் தைப்பது போன்ற வேலைகளில் 14 மணிநேரம் வரையில் செலவழிக்கின்றனர்.
ஒடிசா மாநிலத்தின் மிகவும் ஏழ்மையான குடும்பங்களிலிருந்து வரும் இந்தத் தொழிலாளர்களை தொழிற்சாலை வளாகங்களுக்குள்ளேயே இருக்க வைக்க முடிவதோடு, மிக மோசமான வகையில் ஊதியம் வழங்கவும், வேலைசெய்பவர்கள் என்ற கணக்கில் வைக்கப்படாமல் இருக்கவும் முடிகிறது என இது குறித்த இயக்கத்தினர் தெரிவித்தனர்.
“இறந்து போன அந்த இளம் பெண்ணுக்கும், ஆலையில் வேலை செய்து வரும் மற்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த இது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்” என இதற்கான உண்மையறியும் குழுவில் இருந்த கருப்பசாமி ராமன் கூறினார்.
“இடம்பெயர்ந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை படுமோசமாக உள்ளது. நெருக்கமாக அடைத்துவைக்கப்பட்ட விடுதிகளில் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் வசிக்கின்றனர். ஏஜெண்டுகளின் மூலமாக அவர்கள் இங்கே அழைத்து வரப்படுகின்றனர். ஆட்கடத்தல் குறித்தும் நாங்கள் சந்தேகப்படுகிறோம்.”
இடம்பெயர்ந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கென முறையான பதிவு ஏற்பாடுகள் தேவை என மக்கள் சமூகத்தின் குழுக்கள் கோரி வருவதோடு, இந்தத் தொழிலாளர்களில் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், எத்தகைய விதிமுறைகளின் கீழ் அவர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் வெளிப்படையாக இருப்பதில்லை என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் 1,500க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. இந்தியாவில் நெசவாலை மற்றும் உற்பத்தியாளர்களின் மிகப்பெரிய மையமாக விளங்கும் இப்பகுதியில், பருத்தியை நூலாகவும், இழையாகவும், துணியாகவும் மாற்றும் பணிகளில் 4, 00,000 தொழிலாளர்கள் வரை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கல்வியறிவு பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் சுரண்டல் மிக்க சூழ்நிலையில் உள்ள இந்த வேலைகளை செய்ய அவர்கள் மறுக்கும் நிலையில், அதிகமான அளவில் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இன்று வேலை செய்பவர்களில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இத்தகைய தொழிலாளர்களே ஆவர்.
“இங்குள்ள ரயில் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வந்து சேர்ந்த ஒரு சில மணி நேரங்களுக்குள்ளேயே தொழிற்சாலைகளில் மாயமாக மறைந்து விடுகின்றனர். யார் இங்கு வந்தார்கள்; அவர்கள் எங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆவணப்பதிவுகள் எதுவும் இல்லை” என பின்னலாடை தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சேகர் நடராஜ் என்பவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளில் உள்ள விடுதிகளை அணுக இயலாத நிலை உள்ளதால் இத்தகைய தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் கடினமானதாக உள்ளது என இது குறித்த இயக்கத்தினர் கூறுகின்றனர்.
“சட்டத்தினால் வரையறுக்கப்பட்டபடி, தொழிலாளர்களின் பட்டியல் இருக்க வேண்டும். நிறுவனங்கள் இவற்றைப் பின்பற்ற வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட வேண்டும்” என நடராஜ் தெரிவித்தார்.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.