- அனுராதா நாகராஜ்
சென்னை, ஜன. 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இயந்திரம் ஒன்றில் தலையும் கையும் சிக்கி ஆயத்த ஆடைத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் உலகத்தின் தலைசிறந்த ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கான உடைகளைத் தமிழ்நாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் துயரம் கொள்ளும் வகையில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதை எடுத்துக் கூறுவதாக உள்ளது என இது குறித்த இயக்கத்தினர் வியாழனன்று தெரிவித்தனர்.
20 வயதே ஆன புவனேஸ்வரி ஆதிமூலம் தமிழ்நாட்டின் ‘நெசவாலை பள்ளத்தாக்கு’ என கருதப்படும் மாவட்டமான திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலை ஒன்றில் கடந்த புதன்கிழமையன்று இரவுப் பணியில் இருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது என காவல்துறை மூலம் தெரிய வந்தது.
புவனேஸ்வரி கடந்த மாதம்தான் அங்கு வேலை செய்யத் துவங்கினார் என (காவல்துறை) அதிகாரியான ஆர். ரமேஷ், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
விபத்து நடைபெற்ற அந்தத் தொழிற்சாலையின் பெயரையோ அல்லது எந்த ஆயத்த ஆடை நிறுவனத்திற்காக அது ஆடைகளை தயாரித்து வருகிறது என்பதையோ அவர் தெரிவிக்கவில்லை எனினும் கவனமின்மையின் விளைவாக ஏற்பட்ட மரணம் என வழக்கு ஒன்று அத் தொழிற்சாலையின் உரிமையாளரின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களில் மிகப்பெரும் மையமாகத் திகழும் தமிழ்நாட்டில் இயங்கி வரும் 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சுமார் 4,00,000 தொழிலாளர்களிடையே காயமுறுதல் என்பது அடிக்கடி நிகழும் சம்பவமாகவே உள்ளது என தொழிலாளர்களுக்கு ஆதரவான இயக்கத்தினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
“இத்தகைய இயந்திரங்களில் தலைமுடி, ஆடைகள், விரல்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் மிகச் சாதாரணமாக நடைபெறுகின்றன” என மக்கள் சமூகக் குழுவான சோஷியல் அவேர்னஸ் அண்ட் வாலண்டரி எஜுகேஷன் அமைப்பைச் சேர்ந்த அலோய்சியஸ் ஆரோக்கியம் கூறினார்.
முதல் முறையாக இத்தகைய வேலையில் சேருபவர்கள் தங்கள் முன்னோடிகளிடமிருந்து “பார்த்து கற்றுக் கொள்வது” என்ற முறையிலேயே வேலையை கற்றுக் கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த இயந்திரங்களில் அவர்களுக்கு வேறெந்த பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
300 உற்பத்தியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சவுத் இந்தியா இம்போர்ட்டெட் மெஷின் நைட்டர்ஸ் அசோசியேஷனின் தலைவரான என். விவேகானந்தன் இத்தகைய விமர்சனத்தை மறுத்தார்.
‘ஒரே ஒரு இழை அறுந்து போனாலும் கூட நின்று விடும்’ தன்மையுள்ள இந்த தானியங்கி இயந்திரங்களைக் கையாளுவதற்கு முன்பாக இத்தகைய வேலைக்குப் புதிதான தொழிலாளர்களுக்கு எட்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், புவனேஸ்வரியின் மரணத்தின் பின்னணி குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று மேலும் குறிப்பிட்டார்.
“இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என விவேகானந்தன் கூறினார்.
2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 13 விபத்துகளும் எட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதை ஆரோக்கியம் சார்ந்துள்ள சோஷியல் அவேர்னஸ் அண்ட் வாலண்டரி எஜுகேஷன் ஆர்கனைசேஷன் ஆவணப்படுத்தியுள்ளது.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.