- அனுராதா நாகராஜ்
சென்னை, மார்ச் 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்த வாரம் துவக்கி வைத்த ஒரு திட்டத்தின் கீழ் ஆட்கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட கிட்டத்தட்ட 5 லட்சம் பேருக்கு இந்தியா தொழில்நுட்பப் பயிற்சியைத் தரவிருக்கின்றது.
இந்தத் திட்டத்தை நடத்தவிருக்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பின் கூற்றுப்படி இந்த மூன்று மாதப் பயிற்சியானது அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டவர்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்து அவர்களின் மன உறுதியை வளர்த்தெடுக்கும்.
இதில் பங்கேற்பவர்கள் மிகவும் பெரிதாகப் பேசப்பட்டு வருகின்ற, 2022ஆம் ஆண்டிற்குள் 40 கோடி பேருக்கு பயிற்சி அளிப்பதற்காக 2015ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட திறன் இந்தியா திட்டத்துடன் இணைக்கப்படுவார்கள் என ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
வியாழக்கிழமையன்று புதிய பாட வகுப்பினை துவக்கி வைத்துப் பேசிய கோவிந்த் “ஆட்கடத்தல் என்பது ஒரு சமூகத் தீமை மட்டுமல்ல;அது மனித குலத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒரு குற்றமும் ஆகும்” என்று குறிப்பிட்டார்.
ஆட்கடத்தலுக்கு எதிரான ஒரு மசோதாவிற்கு பிப்ரவரி 28ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தால் சட்டமாக இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சட்டத்தின் கீழ் இதில் ஈடுபடும் ஆட்கடத்தல்காரர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கோ அல்லது ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆயுள் முழுவதற்குமோ சிறைத் தண்டனை விதிக்கப்பட முடியும். இவ்வாறு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமானால், குறைந்தபட்சமாக ரூ. 1,00,000 அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்படக் கூடும்.
இத்தகைய ஆட்கடத்தல் குறித்த வழக்குகளை விரைந்து நடத்துவதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை மற்றும் அவர்கள் தாயகம் திரும்பி வழக்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வருவதற்கு ஓர் ஆண்டு மட்டுமே அதிகபட்ச கால அவகாசமாக இருக்கும் என்றும் இந்த சட்டம் வரையறை செய்துள்ளது.
2016ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள 8,132 வழக்குகள் அதற்கு முந்தைய ஆண்டை விட ஆட்கடத்தல் குறித்த பதிவுகள் கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
சில நேரங்களில் பாலியல் ரீதியாக சுரண்டப்படும் கொடுமைக்கு ஆளானவர்கள், கொத்தடிமை முறையில் சிக்கிக் கொண்டவர்கள் அல்லது திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய நிலைமைகளிலிருந்து தப்பித்து வந்தபிறகு உயிர் பிழைத்து இருப்பதற்கும், தங்களின் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கும் போராடிக் கொண்டு வருகின்றனர். மீண்டும் கொத்தடிமை உழைப்பில் தாங்கள் மீண்டும் சிக்கிக் கொண்டு விடுவோமோ என்று தாங்கள் அஞ்சுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய பாடதிட்டத்தை உருவாக்கிய ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பின் கருத்துப்படி இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலரும் மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வருபவர்கள் என்பது மட்டுமின்றி, மிகக் குறைவான படிப்பறிவைக் கொண்டவர்களாக உள்ளனர்.
“இவர்களுக்கு வாழ்க்கைக்கான முறையான வழிவகைகள் வழங்கப்படாவிடில் அவர்கள் பாலியல் தொழில் அல்லது குழந்தை உழைப்பு போன்ற அதே விஷச் சுழலுக்குள் மீண்டும் திரும்பிச் செல்லும் அளவிற்கு மிகுந்த பலவீனமானவர்களாக உள்ளனர்” என இந்த அறக்கட்டளையைச் சேர்ந்த ஜோயிதா அம்பெட் கூறினார்.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.