×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

செயற்கை நகை உருவாக்கும் தொழில்மையங்களில் காவல்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையால் குழந்தைத் தொழிலாளிகள் விடுவிப்பு

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 9 April 2018 09:34 GMT

ARCHIVE PHOTO: Women buy artificial jewellery at an open air market in the western Indian city of Ahmedabad, October 19, 2014. REUTERS/Amit Dave

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஏப். 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள குஜராத் மாநிலத்தில் செயற்கை நகைகளை தயாரிக்கும் முக்கிய மையங்களில் மேற்கொண்ட முதல் அதிரடி நடவடிக்கையில் காவல்துறை 70க்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டதோடு சுமார் 25 பேரை கைது செய்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பத்து நாட்களுக்கு முன்னால் தனது முதலாளியிடமிருந்து தப்பித்துச் சென்ற இரண்டு சிறுவர்கள் தாங்கள் மோசமாக நடத்தப்பட்டதாகவும் அங்கு மிக மோசமான வேலை நிலைமைகள் நிலவுவதாகவும் கூறியதைத் தொடர்ந்து ராஜ்கோட் நகரில் இந்த அதிரடி நடவடிக்கை துவங்கியது என காவல் துறையில் அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்தார். 

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவர்கள் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மாதத்திற்கு ரூ. 6,000 ஊதியம் தருவதாக உறுதியளித்து அவர்களை ஒப்பந்தக்காரர்கள் இந்த நகரத்திற்கு அழைத்து வந்ததாகவும் ராஜ்கோட் நகர காவல்துறையின் உதவி ஆணையரான பல்ராம் மீனா தெரிவித்தார். 

 “நாங்கள் மீட்ட சிறுவர்கள் இரவு பகலாக வேலை செய்துவந்தனர் என்றும் ஓர் அறையில் 10 முதல் 12 பேர் தங்கியிருந்ததாகவும், ஒருசிலர் தாங்கள் வேலை செய்து வந்த இடத்திலேயே தங்கியிருந்தனர் ” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்த மீனா, அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகையில் பாதி மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும் மேலும் தெரிவித்தார்.

“இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவர்கள் மேலும் அதிகமான சிறுவர்களை நோக்கி எங்களை அழைத்துச் செல்கின்றனர். இந்த நடவடிக்கை இந்த வாரமும் தொடர்ந்து நடைபெறும்.”

இத்துறையில் வேலை செய்துவரும் சிறுவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள காவல்துறை முயற்சித்து வருகிறது என்றும் மீட்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தச் சிறுவர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, இதுவரையில் சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இத்தகைய மையங்களின் முதலாளிகள் மற்றும்  ஆட்கடத்தல்காரர்கள் ஆவர். 

இத்தகைய சுமார் 700 நிறுவனங்கள் செயல்பட்டு வரும் ராஜ்கோட் நகரமானது இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நகைகள் தயாரிப்பு மையங்களில் ஒன்றாகும். இவை ஆண்டுக்கு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  வர்த்தகம் செய்து வருகின்றன.

ராஜ்கோட் நகரில் செய்யப்படும் கைகாப்புகள், காதணிகள் மற்றும் இதர ஆபரணங்கள் பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்க, பாகிஸ்தான், மத்தியக் கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன ராஜ்கோட் நகர செயற்கை நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான நரேந்திர மேத்தா கூறினார்.

 இந்த நகைகளில் பெரும்பாலானவை வீடுகளிலிருந்தே பெண்களால் செய்யப்படுகின்றன என்றும், அவர்கள் வேலை செய்யும் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் கொடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் மாதத்திற்கு ரூ. 5,000 முதல் ரூ. 7,000 வரை ஊதியம் ஈட்டுகிறார்கள் என்றும் மேத்தா கூறினார்.

இத்துறையில் குழந்தைகள் வேலை செய்வது தமக்குத் தெரியாது என்றும், இந்த வேலை நடைபெறும் ஒவ்வொரு வீட்டிலும் சென்று பார்ப்பது இயலாது என்றும், எனினும் உற்பத்தி இடங்களுக்கு இனி சங்கம் செல்லத் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை. நாங்கள் ஒரு கூட்டத்தை  நடத்தி சிறுவர்களை வேலைக்கு வைக்கக் கூடாது என அறிவித்துள்ளோம் என்றும் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் மேத்தா கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->