- அனுராதா நாகராஜ்
சென்னை, மே. 2 – (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – இந்திய நகரமான பெங்களூருவில் உள்ள வணிகவளாகங்களில் பொருட்களை வாங்கவரும் வாடிக்கையாளர்களுக்கு தொழிலாளர் தினத்தன்று அவர்கள்எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைத்தது என்று தான் கூறவேண்டும். ஏனெனில் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை வெளிப்படுத்த இது குறித்த இயக்கங்களை நடத்துவோர் இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்த ஆண்டின் தொழிலாளர் தினத்தன்று தென் இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரத்தில் குறைந்தது நான்கு புகழ் பெற்ற வணிக வளாகங்களில் தொழிலாளர் தினத்திற்கான விற்பனை குறித்த விளம்பர அறிவிப்புகளோடு கூடவே கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த படங்களும் செய்திகளும் அடங்கிய திரை விளம்பரப் பலகைகளும் இடம் பிடித்திருந்தன.
இந்த டிஜிட்டல் விளம்பரப் பலகைகளுக்கு முன்பாக நின்ற படி அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும், பின்பு இந்தக் குற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்யவும், இந்த வணிக வளாகங்களுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இதன் மூலம் எந்தவொரு இடத்திலும் கொத்தடிமைமுறை கண்டுபிடிக்கவும் அது குறித்த புகார்களை தெரிவிக்கவும் அவர்களால் இயலும்.
“இந்தக் குற்றத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடுவதற்கு போதிய விழிப்புணர்ச்சி இல்லாத நிலை தடையாக இருக்கிறது” என செவ்வாயன்று மூன்று புகழ் பெற்ற வானொலி நிலைய நிகழ்ச்சிகளில் இது பற்றிப் பேசிய அரசு அலுவலரான ஜகதீஷ் கெம்பலக்கே கவுடா கூறினார்.
“நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த எட்டு மாதங்களில் 100க்கும் மேற்பட்டவர்களை இத்தகைய கொத்தடிமைத்தனத்தில் இருந்து நாங்கள் விடுவித்திருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை கண்டால் உடனடியாக அது குறித்து புகார் தெரிவிக்குமாறும் நாங்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.
1976ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட இந்த கொத்தடிமை முறை இன்னமும் இந்தியா முழுவதும் பரவலாக நீடித்துவருகிறது. பல்லாயிரக் கணக்கான பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் இந்தக் கடன் வளையத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தாங்கள் வாங்கிய கடன்கள் அல்லது மற்றவர்களுக்காக அவர்கள் அடைக்கவேண்டிய கடன்களைத் தீர்ப்பதற்காக ஊதியம் ஏதுமின்றி வேலை செய்ய வேண்டிய நிலைக்குப் பெரும் பாலானவர்கள் தள்ளப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். எனினும் எவ்வளவு கடன் வாங்கப்பட்டது அல்லது தீர்க்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் ஏதும் பெரும்பாலும் இருப்பதில்லை என்றும், இதன்விளைவாக பல மாத காலத்திற்கு அல்லது பல ஆண்டுகளுக்கும் கூட இந்தக் கடன் வளையம் தொடர்ந்து நீடிக்கிறது என இது குறித்த இயக்கங்களை நடத்துவோர்கூ றுகின்றனர்.
இந்தக் குற்றத்தின் மீது தாக்குதல்தொடுக்கும் தனது முயற்சிகளில் 2030ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சம் பேரை இந்தக் கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்கவும் இதைசெயல்படுத்துவோர் மீதான சட்டபூர்வமான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் திட்டங்கள் தம்மிடம் உள்ளது எனவும் அரசு கூறுகிறது.
வணிக வளாகங்களில் இத்தகைய சித்தரிப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்த எண்ட் பாண்டட் லேபர் கோயலிஷன் போன்ற இது குறித்த பிரச்சாரங்களை நடத்துவோர் இந்தக் குற்றமானது இன்று வரையிலும் தொடர்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“ இத்தகைய கொத்தடிமைத்தனம் இப்போது இல்லை என்றே பெரும்பாலானவர்கள் எண்ணி வருகின்றனர். ஆனால் அது இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நம்மில் பெரும்பாலோரால் அதைக்கண்டறிய முடிவதில்லை” என மாதத்திற்கு சராசரியாக பத்துலட்சத்திற்கும் மேற்பட்டவாடிக்கையாளர்கள் வருகை தரும் மந்த்ரி ஸ்குவேர் மால் –இன் விற்பனை மேலாளாரான நுபுர் சிங் கூறினார்.
“சாலையில் போக்குவரத்து நிறுத்தங்களில் அவர்களுக்கு ரோஜாப்பூக்களை விற்பனை செய்யும் குழந்தையைப் பற்றி சிந்திக்க அவர்கள் முயற்சிப்பதில்லை” என தொலைபேசி மூலமாக அவர் கூறினார். “அவர்களை சற்றே நிறுத்தி வைத்து, இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தங்களை எண்ணிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”
இத்தகைய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த செவ்வாய்க்கிழமை மிகவும் பொருத்தமானதாக இருந்தது எனவும் சிங் தெரிவித்தார்.
“விடுமுறை நாள் என்பதால் ஏராளமானவர்கள் வணிகவளாகங்களுக்கு வருகை தந்தனர். தொழிலாளர் தினம் ஏன் முக்கியமானது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் நாங்கள்விரும்பினோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.