மும்பை, மார்ச்.10 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - "இந்தியாவும் பாஃரைனும் ஆட் கடத்தல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் தாயகம் திருப்பியனுப்பவும் இரு நாடுகளும் நெருக்கமாக ஒத்துழைக்கவும் இசைந்துள்ளனர்" என வியாழன்று வெளியான ஒரு அதிகார பூர்வமான அறிக்கை தெரிவித்தது.
கடந்த வருடத்தில் இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஆட் கடத்தல்களுக்கு எதிரான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் தொடர்சியாக, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் பாஃரைன் செல்லும்போது இதே மாதிரியான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய அரசின் பத்திரிகை மையம் தெரிவித்தது.
ஐக்கிய நாடுகளின் போதை மற்றும் குற்றப் பிரிவு தகவலின்படி, இந்தியாவை மையமாகக் கொண்ட, தெற்காசியா உலகத்திலேயே மிக வேகமாக ஆட் கடத்தல்கள் வளர்ந்து கொண்டிருக்கும் பகுதியாகவும், இதில் தென் கிழக்கு ஆசியாவைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய பகுதியாகவும் விளங்குகிறது.
ஒவ்வொரு வருடமும் தெற்காசியாவுக்குள் 1,50,000-க்கும் அதிகமான நபர்கள் கடத்தப்படுகிறார்கள். ஆனால், இந்தத் தொழில் இரகசியமாக நடப்பதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இரு நாட்டு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவும் பாஃரைனும் “ஆட் கடத்தலோடு தொடர்புடைய தடுத்தல், மீட்பு, திரும்ப அழைத்தல், தாயகம் அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மேம்படுத்தும்” என்று அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியா மற்ற வளைகுடா நாடுகள் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுடனும் ஆட் கடத்தல்களைத் தடுக்க இதுபோன்ற ஒப்பந்தங்கள் செய்ய ஆலோசித்து வருகின்றது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பாஃரைனுக்கு ஆட்களைக் கடத்திச் செல்லப் பயன்படுவதற்கு இரண்டு வகைகளில் இந்தியா மூல மாகவும் வழித்தட நாடாகவும் விளங்குகிறது. தெற்காசிய மக்கள் வீட்டு வேலைகள் செய்யும் தொழிலாளர்களாக அல்லது கட்டுமானத்துறை மற்றும் மருத்துவத் துறைகளில் பணியாளர்களாக வேலை செய்ய தாமாகவே முன்வந்து பாஃரைன் மற்றும் வளைகுடா நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்கின்றனர்.
நல்ல சம்பளம் மற்றும் வேலைச்சூழல் என்று உறுதியளித்து அவர்கள் அழைக்கப்பட்டாலும், பாஃரைனுக்கு வந்த பின்னர் சிலர் உடல் உழைப்புத் தொழில்களில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்; அவர்களின் கடவுச் சீட்டுகள்(பாஸ்போட்) பறிமுதல் செய்யப்படுகின்றன; அவர்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; அவர்களின் சம்பளம் முடக்கப்படுகிறது; அவர்கள் பயமுறுத்தப்படுவதுடன் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தகாத முறையில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
வீட்டு வேலை செய்பவர்கள்தான் உலகத்திலேயே மிக அதிகமான சுரண்டல்களுக்கு ஆளாகின்றனர். இந்தோனேசியா உட்பட்ட சில ஆசிய நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதைத் தடை செய்ய ஆலோசித்து வருகின்றன.
இந்தியாவும் பாஃரைனும் விரைவாக ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான புலன் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை இரு நாடுகளிலும் துரிதப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படும். மனிதக் கடத்தல்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாகத் தாயகம் திரும்ப அனுப்ப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது,
இந்த ஒப்பந்தம் முறையாகச் செயல்படுகிறதா என்று கண்காணிக்க, இரு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அதிரடிக்குழு ஏற்படுத்தப்படும்.
(கட்டுரையை எழுதியவர்: ரினா சந்திரன்; எடிட் செய்தவர்: டிம் பியர்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரிடெட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. மேலும் இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.