பொன்னேரி, மார்ச் 11( தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - போலீஸ் சென்னை புறநகர் பகுதில் உள்ள செங்கல் சூளையை சோதனையிட்டது போது, அங்கு, சிரியா பஞ்சோர்(Siriya Banchor) மற்றும் நூற்றுக்கான படிக்காத புலம் பெயர்ந்த ஏழைத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டு இருந்தனர். 48 வயதான பஞ்சோர் என்கிற அந்தப் பெண் தொழிலாளி சோதனையின்போது ஆறுதல் அடைந்ததைவிட அதிகமாகத் திகைப்பு அடைந்தவராகக் காணப்பட்டார்.
தனது குடும்ப உறுப்பினர்களுடன் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பகிர்ந்து கொண்ட ஜன்னல் இல்லாத செங்கல் மற்றும் சேற்றினால் ஆன அறையின் இருட்டில் தடுமாறிக் கொண்டிருந்தார். தன்னுடைய பொருள்களையெல்லாம் ஒரு கோணிப் பையில் திணித்து வைத்திருந்த அவர் தன்னுடைய குழந்தையின் கையைப் பற்றிக் கொண்டு பிற்பகல் வெயிலின் பிரகாசத்தில் வெளிவந்தார்.
”என்னிடம் இரண்டு ஜோடி துணிகள், இரண்டு பாத்திரங்கள் மற்றும் கொஞ்சம் அரிசி மட்டுமே இருக்கின்றன. கடனைக் கொடுக்க போதுமளவு சம்பாதிக்க முடியும் என்று நினைத்து, நாங்கள் எதுமே கொண்டு வரவில்லை” என்று பாதி வெந்த செங்கல்கள் குவியல்களின் மேல் கால் வைத்து, தற்காலிக விடுதிகளுக்குக் கூட்டிச் செல்லும் லாரிகளில் ஏறக் காத்திருக்கும் மற்ற மீட்கப்பட்ட தொழிலாளிகளுடன் சேர்ந்து கொள்ளச் செல்லும்போது கூறினார்.
”நாங்கள் ஒன்றும் இல்லாமல் திரும்பிச் செல்லுகிறோம். ஆனால், குறைந்தது எங்கள் துயரங்கள் ஒரு முடிவுக்கு வரும்” என்று சென்னை புறநகரத்தில் உள்ள செங்கல் சூளையில் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பஞ்சோர் கூறினார்.
‘கடந்த வாரத்தில் பஞ்சோருடன் சேர்த்து மொத்தம் 564 செங்கல் சூளைத் தொழிலாளர்களை ஒரு சூளைத் தொழிளாளி கொடுத்த தகவலின் பேரில் போலீஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து மீட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் இது மிகவும் பெரியது. இது வளர்ந்து வரும் கட்டுமானத் தொழிலில் அதிக எண்ணிக்கையில் முறையற்ற முறையில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
”இந்த துறையில் பிரச்சனையின் அளவும் பரிணாமும் மிகவும் பெரியவனவாகும்” என இரண்டு வருடங்களுக்கு முன் கட்டுமானத் தொழிலில் முறையற்ற செயல்களை அம்பலப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட ”பிளட் ப்ரிக்ஸ்”(Blood Bricks) என்ற அமைப்பைத் தோற்றுவித்த சந்தன் குமார் கூறுகிறார்.
‘’மேலும், இதுபோன்ற பல சூளைகளில் மிக மோசமான முறையில் விதிமீறல்கள் நடக்கின்றன. ஆனால், அரசிடம் இந்த இடங்களை ஆய்வு செய்ய வசதியும் ஆற்றலும் இல்லை. மேலும், அங்கு வாழும் தொழிலாளர்களின் பெரும்பாலான சூழ்நிலைகள் தற்காலிக அடிமைத்தனம் என்று சொல்கின்ற அளவுக்கு மோசமாக இருக்கின்றன.
கொத்தடிமைகளால் கட்டப்படும் நகரங்கள்
`ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள ‘வால்க் ஃப்ரீ அமைப்பின் 2015 ஆண்டு உலக அடிமைத்தன அட்டவணையின்படி இந்தியா ஏறக்குறைய உலகில் உள்ள 36 மில்லியன் அடிமைகளில் பாதி அடிமைகளின் தாயகமாக உள்ளது.
பல இந்தியர்கள் பண்ணைகளிலும், விலை மாதர் இல்லங்களிலும் சிறு கடைகளிலும் உணவு விடுதிகளிலும் வாங்கிய சிறு கடனுக்காகவோ அல்லது வாரிசு உரிமை முறையில் உறவினரின் கடனுக்குப் பொறுப்பேற்கும்போதோ வேலை செய்யும்படி ஏமாற்றப்படுகிறார்கள்.
பொதுவாக இம்மாதிரியான சுரண்டல்கள் பிரத்யேகமாகக் கட்டுமானத் தொழில் துறையிலும், குறிப்பாக ஒழுங்கு செய்யப்படாத செங்கல் தயாரிப்பு மற்றும் கல்குவாரிகளில் காணப்படுகின்றன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனினும், இந்தியப் பொருளாரத் துறையில் கட்டுமானத்தொழில் மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாக, 35 மில்லியன் வேலைகள் வழங்குவதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விழுக்காடு பங்கு அளிக்கும் தொழிலாக விளங்குகிறது.
இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் நகரங்களில் 2050 ஆண்டு வரையில் 404 மில்லியன் கூடுதல் மக்கள் பெருக்கம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பின்படி, உள்கட்டமைப்பு மற்றும் சேவைக்கான தேவை தொடர்ந்து பெருமளவில் அதிகமாகவே இருக்கும்.
”அரசு தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்று ஒத்துதுக்கொள்கிறது. நகர்ப்புற வீட்டுவசதித் துறையில் மட்டுமே 18.8 மில்லியன்(ஒரு கோடியே 88 லட்சம்) வசிப்பிடங்கள் குறைவாக உள்ளன என்றும் அது கூறுகிறது.
”நகரங்களில் நீங்கள் காண்கின்ற கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கும் கொத்தடிமைகளை வேலைக்கு வைத்திருக்கும் செங்கல் சூளைகளில் இருந்து வருகின்ற கட்டுமானத் தளங்களில் காணப்படும் செங்கள் குவியல்களுக்கும் உறுதியாகத் தொடர்பு இருக்கிறது’ என்று ஆட் கடத்தல் மற்றும் தற்காலத்திய அடிமைத்தனம் ஆகியவற்றில் முன்னணி வல்லுநரான பி.எம். நாயர் கூறினார்.
“ஒரு ஒப்பந்தம் கொடுக்கப்படும்போது, அந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் கூலியும் அடங்கும். ஆனால் ஒரு விழுக்காடு கூட தொழிலாளர்களுடைய நலனுக்காக பணம் ஒதுக்கப் படுவதில்லை” என மும்பையில் உள்ள “டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தின்” அமர்வு பேராசியர் மற்றும் மனிதக் கடத்தல் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் ஆக இருக்கின்ற நாயர் கூறினார்.
மனிதக் கடத்தலும் ஏமாற்றமும்
வெட்டவும் வடிவம் கொடுக்கவும் மற்றும் களிமண் செங்கற்களைக் கைகளால் சுட்டெடுக்கவும் எத்தனை தொழிலாளர்கள் இந்தியாவின் பல்லாயிரக் கணக்கான செங்கற் சூளைகளில் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளார்கள் என்பதற்கு அதிகார பூர்வமான புள்ளிவிவிரங்கள் இல்லை.
அறிவியல் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை மையத்தின்(சி.எஸ்.இ.) 2015 வது ஆண்டின் ஆய்வுக் கட்டுரையின்படி குறைந்தது 10 மில்லியன் மக்கள் செங்கற் சூளைகளில் வேலை செய்கிறார்கள். அச்செங்கல் சூளைகளில் பல சூளைகள் நகரங்களின் ஓரங்களில் அமைந்திருப்பதால் அவைகள் நகர்ப்புற கட்டிடம் கட்டும் நிறுவனங்கள் எளிதாக அணுகும் வரையில் அமைந்துள்ளன.
சென்னையிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பொன்னேரியில் ஸ்ரீ லஷ்மி கணபதி செங்கல் தொழிற்கூடத்தின் செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அங்கு இரண்டு மாதத்திற்கு முன்பு எப்படி முகவர்களால் கொண்டு வரப்பட்டார்கள் என்பதை விவரிக்கிறார்கள்.
அனைத்து வேலையாட்களும் ஒடிசா மாநிலத்திலிருந்து வந்தவர்கள், ஆட் கடத்தல்காரர்கள் தங்கள் கிராமங்களுக்கு வருகை தந்தார்கள் என்றும் ஆறு மாத வேலைக்கு ஈடாக 20,000 ரூபாய் கடனாகக் கொடுத்தார்கள் என்றும் கூறினார்கள்.
ஆட் கடத்தல்காரர்கள் கடனை இன்னொரு ’முகவருக்கு’ மாற்றினர் அப்புதிய முகவர் தொழிலாளர்களை இரயில் மூலமாக பல குழுக்களாக சென்னைக்கு கொண்டு வந்தனர் என்றும் கூறினார்கள்.
”கிராமத்திற்கு வந்த முகவர்கள் கஷ்டத்தில் இருக்கின்ற குடும்பங்களை அடையாளம் காண்கின்றனர். அவர்களுக்கு எதிர்பாராத செலவு எப்போது வரும் என்று தெரிந்து கடன்களை அளிக்கின்றனர்” என்று தனது மாமாவைத் தொடர்ந்து செங்கல் சூளைக்கு வெற்று நெஞ்சுடன்[மேல் சட்டையில்லாத] வந்த ஒரு இளைஞர் கூறினார்.
”நாங்கள் அடிமட்ட நிலைக்கு போகும்போது எங்களிடம் முகவர்கள் வருகின்றனர். அதனால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் அவர்களுடைய நிபந்தனைகளுக்கு உட்படவேண்டியுள்ளது” என்றும் கூறினர்.
நிச்சயமற்ற எதிர்காலம்
தொழிலாளிகள் அவர்களின் குழந்தைகளுடன் தினமும் பத்து மணி நேரம் வேலை செய்தார்கள்; அவர்களின் குடும்பங்களோடு சிறு அறைகளில் தூங்கினார்கள். அவர்களுக்கு, அங்கு சுத்தமான நீரோ அல்லது கழிப்பறை வசதி கூட இல்லை.
மழைக்காலம் வந்து வேலைக்கு இடையூறு விளைக்கும் முன், ஜனவரியிலிருந்து ஜுன் வரை தொழிலாளிகள் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்திலும் சில முதியவர்கள் அல்லது கருவுற்ற பெண்களைக் கொண்டதாக இருந்தது, இவர்கள் தினமும் 2,000 செங்கற்கள் தயாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு செய்யாவிட்டால் குறைந்த பணமே அவர்களின் கடனில் இருந்து கழிக்கப்படும்.
அவர்களுக்கு கடன் பற்றிய அதிகார பூர்வமான ஆவணங்கள் எதுவும் தரப்படவில்லை என்றும் அதனால் அவர்கள் எவ்வளவு கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெரியவில்லை என்றும் கூறினர்.
’’ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20,000 வரை கடன் இருந்தது. அவர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாரத்திற்கு ரூபாய் 400 என்ற அடிப்படையில் கூலி கொடுக்கப்பட்டது என்றும் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தாதவரை அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட வில்லை’’ என்றும் சோதனை முன்னின்று நடத்திய வருவாய் துறை அதிகாரி எம். நாராயணன் கூறினார்.
செங்கல் சூளை சொந்தக்காரர்களுக்காக வேலை செய்த, அந்த இடத்தின் மேற்பார்வையாளர்கள் உட்பட ஐந்து பேருடன் கைது செய்யப்பட்ட, ஒரு மருத்துவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் கூலியாட்கள் விடாமல் தொடர்ந்து வேலை செய்ய வலிநிவாரண மாத்திரைகளை கிடைக்க ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.
தொழிலாளர் சட்டங்களை மதிக்காமை, முகர்வர்களுக்கும் செங்கல் சூளைச் சொந்தக்காரர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் மீட்கப்பட்ட வேலையாட்களுக்கு மாற்று இல்லாததாலும் சுரண்டல் சுழற்சியை உடைக்க முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
’’பெரும்பாலான சமயங்களில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை என்றும் அதனால் வேறு வழியில்லாமல் முகவர்களுடன் செல்ல வேண்டியுள்ளது’’ என்றும் அமெரிக்காவில் உள்ள ஒரு மனித உரிமைகள் குழுவான சர்வதேச நீதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மாத்யூ ஜோஜி கூறினார்.
”அடிப்படை நிலவரம் மாறும்வரை மீட்கப்பட்ட பிறகும் அவர்களின் நிலைமை வளர்ச்சி அடையாது” என்றும் கூறினார்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆர்.கீதா, தொழிலாளர் மீட்பினால் கடன் அடிமைத்தனம் முடிவுக்கு வருவதில்லை என்று கூறினார். மேலும், “கண்காணிப்பு இல்லாமையால், பல மீட்கப்பட்ட தொழிலாளர்கள் இரண்டாவது கடன் அடிமைத்தனத்திற்கு ஆளாகின்றார்கள் அல்லது இன்னொரு முதலாளிக்கு பழைய மோசமான நிலைமைக்கு சமமான நிலையில் வேலை செய்யும் நிலமைக்கு தள்ளப்படுகின்றனர்” என்றும் கீதா கூறினார்.
பஞ்சோரைப் பொறுத்த வரையில், அவரும் அவளுடைய குடும்பமும்
கிராமத்திற்கு திரும்பிப் போனாலும் கூட, ஒரு சிறந்த வாழ்கைக்கு உத்தரவாதம் இல்லை. ”நாங்கள் வீடு திரும்புகிறோம். ஆனால் எங்கள் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது’’ என்று அவர் செங்கல்சூளையை விட்டு வெளியேறி பேருந்தில் முட்டித் தள்ளி ஏறும்போது வருத்தத்துடன் கூறினார்.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ், கூடுதல் செய்தியாளர் நீதா பல்லா. கட்டுரையை எழுதியவர்: நீதா பல்லா; எடிட் செய்தவர்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரிடெட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. மேலும் இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.