-ரினா சந்திரன்
மும்பை, ஏப்ரல் 6 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - ஒரு பள்ளிக்கூடத்தில் திட்டமாக ஆரம்பித்த, குழந்தைத் தொழிலாளர் திட்டம், மாநகரம் முழுதும் ஒரு பிரச்சாரமாக மாறி, தற்போது குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை நாடு முழுதும் உள்ள சமூகக் குழுக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் ஒரு தேசிய அளவிலான சமூக ஊடகப் பிரச்சாரமாக மாறி இருக்கிறது.
குணால் பார்கவா (வயது 17), மும்பையின் அமெரிக்கன் பள்ளியின் ஒரு மாணவர், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையைத் தன் வகுப்பறைத் திட்டத்திற்கு எடுத்துக் கொண்டார். மாநகரில் வீதியில் திரியும் குழந்தைகளுக்கு பொருள் மற்றும் உதவிகள் செய்துவரும் சலாம் பாலக் அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்திடம் இதற்காக அவர் அணுகினார்.
இந்த மாணவர் உருவாக்கிய சுவரொட்டிப் பிரச்சாரம் மும்பை காவல்துறையினரிடையே மிகவும் தாக்கத்தை ஏற்படுத்த இதை தழுவி மாநகர் முழுவதும் இந்த விளம்பரபலகைகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் வைக்கப்பட்டது.
இந்த வாரம், மாநகரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு வரும் லோக்கல்சர்கிள்ஸ் ஆட்சி அதிகாரம் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து பொதுநல நோக்கில் விவாதங்களை மேற்கொண்டு வரும் பிரஜைகளை ஈடுபடுத்தும் மேடை ஒன்று, இப்பிரச்சனை மீதும் கருத்துக்களைக் கோரும் விதத்தில் குழந்தைத் தொழிலாளர் மீது விவாதங்கள் நடத்திடும் ஒரு குழுவை உருவாக்கியது.
“இந்தச் சிறார்கள் என் வயது ஒத்தவர்கள், என்னை விட இளையவர்கள், என்னைப் போன்று பள்ளிக்கூடங்களுக்குப் படிக்கப் போவதற்குப் பதிலாக வேலை செய்துகொண்டிருப்பது குறித்து நான் மிகவும் அதிகமாகவே நினைத்துப் பார்த்த ஒன்று தான் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையாகும்,’’ என்று பார்கவா கூறினார்.
“ஒவ்வொருநாளும் இந்த அனுப்பவத்தை நாம் எதிர்கொள்கிறோம். எனவே, இது சம்பந்தப்பட்ட சமூகத்தையே இதில் ஈடுபடுத்துவது குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க ஒரு வலுவான வழியாக இருக்கும்,’’ என்று அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் கூறினார்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் கூற்றின்படி, ஐந்துக்கும் பதினேழுக்கும் இடைப்பட்ட வயதில், உலக அளவில் உள்ள 16 கோடியே 80 லட்சம் (168மில்லியன்) குழந்தைத் தொழிலாளர்களில், இந்தியாவில் 57 லட்சம் (5.7 மில்லியன்) குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் சார்ந்தவற்றில், பருத்தி, கரும்பு மற்றும் நெல் வயல்வெளிகளில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், கால் பகுதிக்கும் மேலானவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களிலும், துணிமணிகளில் எம்பிராய்டரி போடும் தொழில்களிலும், கம்பளிகள் போன்ற தரைவிரிப்பான் நெசவு அல்லது தீக்குச்சிகள் செய்வதிலும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். குழந்தைச் சிறார்கள், உணவுவிடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் பாத்திரங்களைக் கழுவுவது, காய்கறிகளை நறுக்குவது மற்றும் நடுத்தர வர்க்கத்தாரின் வீடுகளில் வேலை செய்வது போன்றவற்றிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்திய அரசாங்கம் முப்பது ஆண்டுக்கும் மேலான குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சுரங்கங்கள், இரத்தினம் போன்ற விலை உயர்ந்த கற்களை வெட்டுதல், சிமென்ட் உற்பத்தி செய்தல் மற்றும் கைத்தறி நெசவாலைகள் உட்பட 18 இடர்மிகுந்த தொழில்களிலும் 65 பதப்படுத்தும் தொழில்களிலும் 14 வயதுக்குக் குறைவானவர்கள் குழந்தைகளை வேலை செய்வதற்குத் தடை விதிக்க விரும்புகிறது.
ஆயினும், குழந்தைகள், தங்கள் குடும்பத்திற்கு அல்லது தங்கள் குடும்ப வணிகத்திற்கு உதவுவதற்காக, பள்ளி நேரத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்திட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கலை நிகழ்ச்சி அல்லது விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் கூட தங்கள் படிப்பு பாதிக்காத வகையில் வேலை செய்திடலாம்.
லோக்கல்சர்கிள்ஸ் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், பல்வேறுவிதமான ஆலோசனைகளை வழங்குவதுடன், இது தொடர்பான படங்களை ஒட்டி வைக்கலாம் என்றும், குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த சம்பவங்களை, காவல்துறையினருக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் தெரிவித்து இவற்றில் நடவடிக்கை எடுக்க வைக்கலாம் என்றும் இந்த குழுவின் நிறுவனர் சச்சின் தபாரியா கூறினார்.
“இந்த மேடை அவசர தொலைபேசியை (ஹாட்லைன்) விட மிகவும் வலுவானது. ஒரு தேநீர் விடுதியில் அல்லது வீதியில் பிச்சை எடுக்கும் குழந்தைத் தொழிலாளரைக் பார்க்கும் போது எத்தனை பேர் உண்மையில் அவற்றை நினைவு வைத்துக்கொள்கிறார்கள் அல்லது இவர்களை அழைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்?’’ என்று அவர் கேட்டார்.
“இதுபோன்று படங்களை எடுத்து, சமூக ஊடகங்களில் பரப்புவது அவர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது, இது அதற்கு வசதிசெய்து தந்திருக்கிறது,’’என்றார்.
விவாதக் குழுக்களிடமிருந்து இதுவரை வந்துள்ள ஆலோசனைகளில், குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்துவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், அத்தகைய குழந்தைகள் வயது வரும்போது வருமானத்தைத் தேடிக்கொள்ள உபயோகமாக இருக்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களில் பயிற்சி அளித்து அவர்களது திறமைகளை வளர்த்திட வேண்டும் என்பவைகளும் அடங்கும்.
குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பின்னர் மோசமான மீள் ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களை மிகச் சரியான விதத்தில் பேணிப்பாதுகாக்காமல் விட்டுவிடுவது, அவர்கள் மீண்டும் கடத்தப்படுவதற்கும், அதே வேலையைச் செய்வதற்கும் தள்ளப்பட்டுவிடும், என்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான எப்எக்ஸ்பி மையம் சென்ற மாதம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
குழந்தைத் தொழிலாளர்களுக்கான லோக்கல்சர்க்கிள்ஸ் குழு இந்திய காவல் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகத் தலைவர்களைக் கொண்ட சிந்தனையாளர்கள் இந்த பட்டறையில் அடங்கியுள்ளனர்.
லோக்கல்சர்கிள்ஸ் விவாதக் குழுக்களின் உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தில்லி மற்றும் குர்கான் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த விபச்சார விடுதிகள் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய தபாரியா, சமூகபோலீஸ் ஏற்கனவே குழந்தைத் தொழிலாளர் மற்றும் ஆட்கடத்தல் போன்றவற்றில் பங்களிப்பினைச் செய்திருக்கிறது என்றார்.
“காவல்துறையையும், அரசு சாரா நிறுவனங்களையும் சார்ந்த எங்களால் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை சரிசெய்வதில் ஒரளவு செய்து கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த சமூகமும் முழுமையாக இதில் தலையிடும்போதுதான் மேலும் அதிக அளவு விழிப்புணர்வு உருவாக்கி,குழந்தைத் தொழிலாளர்களை மேலும் அதிகமான அளவில் விடுவிக்க உதவிட முடியும்,’’ என்று மும்பை காவல் துணை ஆணையர், பிரவீண் பட்டீல் கூறினார்.
(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.