×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பச்சிளம் குழந்தைகளை பிஸ்கெட் பெட்டிகளில் வைத்துக் கடத்திய 11 பேரை மேற்கு வங்க காவல்துறை கைது செய்தது

by சுப்ரதா நாக்சௌத்ரி | Thomson Reuters Foundation
Wednesday, 23 November 2016 14:12 GMT

A health worker (R) weighs a child under a government program in New Delhi, India, in this May 7, 2015 archive photo. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

சுப்ரதா நாக்சௌத்ரி

கொல்கத்தா, நவ 23 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மேற்கு வங்க மாநிலத்தில் திருமணமாகாத பெண்கள் புதிதாகப் பிறந்த தங்கள் குழந்தைகளை விற்பனை செய்யும் வகையில் அவர்களை ஏமாற்றி அந்தக் குழந்தைகளை குழந்தையில்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்வதற்காக தத்தெடுப்பு மையம் ஒன்றுக்கு பிஸ்கெட் பெட்டிகளில் வைத்து கடத்திச் சென்ற 11 பேரை  கைது செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்தது.

தனியார் மருத்துவ மனை ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டபோது அங்கு பூட்டப்பட்ட மருந்துக் கிடங்கு ஒன்றில் இருந்த அட்டைப் பெட்டிகளில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர் என இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலமான மேற்கு வங்கத்தின் குற்றப் புலன்விசாரணைத் துறையின் (சிஐடி) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், கொல்கத்தாவிலிருந்து 80 கிலோமீட்டர் (50 மைல்கள்) தூரத்திலுள்ள பாதுரியா என்ற இடத்தில் உள்ள  இந்த மருத்துவ மனையின் உரிமையாளர், செவிலியர் மற்றும் இதர ஊழியர்கள் ஆகியோரும் அடங்குவர்.

இந்தக் குழந்தைகளுக்கென போலி ஆவணங்களை தயாரித்துத் தந்ததாக சந்தேகிக்கப்படும் நீதிமன்ற எழுத்தர்கள், தத்தெடுப்பு மையத்தை நடத்தி வந்த ஓர் அறக்கட்டளையின் தலைவர் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

 “இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. அதில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்ட பிறகே மேலும் விவரங்கள் தெரியவரும்” என மேற்கு வங்க குற்றப் புலன்விசாரணைப் பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பரத் லால் மீனா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

இது பற்றி உடனடியாக கருத்து தெரிவிக்க அந்த மருத்துவ மனை, அறக்கட்டளை ஆகியவற்றின் ஊழியர்கள் எவரும் கிடைக்கவில்லை.

திருமணமாகாத  இளம்பெண்களும், பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்வதற்காக இந்த மருத்துவ மனைக்கு வரும்போது, அதற்குப் பதிலாக குழந்தையைப் பெற்றுவிட்டு அதன் பின் தங்கள் குழந்தைகளை விற்று விடலாம் என அதன் ஊழியர்கள் ஊக்கம் கொடுத்து வந்தனர் என துவக்கநிலையிலான விசாரணைகள் தெரிவிப்பதாக காவல் துறையினர் கூறினர்.

காவல் துறையினர் இதற்கான விலையைக் குறிப்பிடவில்லை எனினும், ஆண் குழந்தைக்கு ரூ. 3,00,000/- (4,380 அமெரிக்க டாலர்கள்) பெண் குழந்தைக்கு ரூ. 1,00,000/- (1,460 அமெரிக்க டாலர்கள்) என்ற விகிதத்தில் இக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என உள்ளூர் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளும் கூட திருடப்படுகின்றன. அதன் பெற்றோரிடம் குழந்தை இறந்தே பிறந்தது என்று கூறி விடுவதாகவும் தெரிகிறது. இவ்வாறு பெற்றோர்களை ஏமாற்றுவதற்காகவே இறந்தே பிறந்த குழந்தைகளின் உடலை வைத்து அதை இவர்களில் ஒரு சிலரிடம் காட்டப்படுவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பிறந்த உடனேயே கடத்தப்படும் இந்தப் பச்சிளம் குழந்தைகளை பிஸ்கெட் பாக்கெட்களை அடுக்கி வைக்கப் பயன்படுத்தும் அட்டைப் பெட்டிகளில் வைத்து அங்கிருந்து 25 கிலோமீட்டர் (15 மைல்கள்) தூரத்தில் இருக்கும் மச்லாந்தபூர் என்ற இடத்திலுள்ள ஒரு தத்தெடுப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கே குழந்தையில்லாத தம்பதிகளுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்படுகின்றன.

“இவை அனைத்துமே மிக ஒழுங்காக நடத்தப்படும்  ஒரு கூட்டு நடவடிக்கைதான். இவ்வாறான கடத்தல் வேலைகளுக்கு உதவக்கூடிய அனைத்து விதமான நபர்களையும் உள்ளடக்கியே இச்செயல் நடைபெற்று வருகிறது” என செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படாத,பெயர் குறிப்பிட விரும்பாத குற்றப் புலன்விசாரணைத் துறையின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படக் கூடும் என்றும் குற்றப் புலன்விசாரணைத் துறையின் அதிகாரி தெரிவித்தார்.

அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆட்கடத்தல் அதிகரித்துள்ளது என்றும், இதில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவை குழந்தைகள் விற்கப்படுவது; வாங்கப்படுவது;நவீன அடிமைகளாக சுரண்டப்படுவது என்பதாகவே உள்ளன என அரசின் குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் கூறுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2014ஆம் ஆண்டில் ஆட்கடத்தல்  தொடர்பான வழக்குகள் 5,466 ஆக இருந்து கடந்த ஆண்டில் 6,877 ஆக உயர்ந்துள்ளது என்றும், இதில் அதிகமான வழக்குகள் வடகிழக்குப்பகுதி  மாநிலமான அசாம், அதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் ஆகியவற்றிலிருந்து வெளிவந்துள்ளன எனவும் தேசிய குற்றப் பதிவுகள் நிலையம் தெரிவிக்கிறது.

இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் தெற்காசிய பகுதியானது உலகத்தில் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

இதில் ஈடுபட்டு வரும் கும்பல்கள் ஒவ்வொரு ஆண்டும் இதனால் பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கானவர்களை கொத்தடிமைகளாக ஆக்கி வருகின்றன; அல்லது அதிகமான உழைப்புச் சுரண்டலில் ஈடுபடும் முதலாளிகளிடம் கூலிகளாக வாடகை அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பெண்கள், சிறுமிகள் பலரும் பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து செயல்படும் வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணையின்படி உலகத்தில் இருப்பதாக மதிப்பிடப்படும் 4 கோடியே 58 லட்சம் அடிமைகளில், 40 சதவீதம் பேர்  இந்தியாவில் உள்ளனர்.

(செய்தியாளர்: சுப்ரதா நாக்சௌத்ரி; எழுதியவர்: நிதா பல்லா; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->