- ரோலி ஸ்ரீவஸ்தவா
மும்பை, மார்ச். 2 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - விளையாட்டு நிகழ்ச்சிகளை காண்பவர்களை அதற்கு மிக நெருக்கமாகக் கொண்டு செல்லும் மெய்ம்மைத் தோற்றம் என்ற காட்சி முறை இப்போது ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடுவதற்காகவும் களமிறக்கி விடப்பட்டுள்ளது. ஒரு சிறுமி எவ்வாறு இந்தியாவின் பாலியல் வர்த்தகத்திற்குள் இறக்கி விடப்படுகிறாள் என்பதை ஆவணப்படுத்துவதன் மூலம் இத்தொழில் நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு கிராமத்துச் சிறுமி அவளது தந்தையால் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, பின்னர் கடத்தப்பட்டு பாலியல் தொழில் மையத்திற்குச் சென்று சேரும் வாழ்க்கையின் யதார்த்தத்தை காண்பவர்கள் உணரும் வகையில் மெய்மைத்தோற்றம் என்ற காட்சிமுறையைப் பயன்படுத்துகிறது இந்த ஆவணப்படம்.
“மெய்ம்மைத் தோற்றம் என்பது கதை சொல்வதற்கு மிகவும் வலுவான வடிவம் ஆகும். உலகம் முழுவதிலும் அதிகமான கவனத்தைப் பெறுவதாகவும் அது விளங்குகிறது” என மை சாய்சஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் ஹன்னா நோர்லிங் தாம்ஸன் ஃபவுண்டேஷனிடம் வியாழனன்று தெரிவித்தார்.
இந்த லாப நோக்கற்ற அறக்கட்டளை மெய்ம்மைத் தோற்றத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தி வரும் அமெரிக்க நிறுவனமான ஓகுலஸ்-இன் அறக்கட்டளைப் பிரிவோடு இணைந்து இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இந்த மாதம் டெக்சாஸ் நகரில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
தனியொரு நபரின் வாழ்க்கையைச் சித்தரிப்பதன் மூலம் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 2 கோடியே 10 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ள ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட அனைவரின் மீதும் அதிக அளவில் கரிசனத்தை உருவாக்க முடியும் என இக்குழு நம்பிக்கை கொண்டுள்ளது. இவர்களில் 45 லட்சம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்களும் சிறுமிகளும் ஆவர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரது கதையைத்தான் “நோட்ஸ் டு மை ஃபாதர்” என்ற இத்திரைப்படம் சொல்கிறது. ஆட்கடத்தலின் பயங்கரங்களை தனது தந்தைக்கு தெரிவிப்பதாக இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய இரு இந்திய மாநிலங்களுக்குள் அடங்கும் இந்த கடத்தல் முதல் தப்பித்தல் வரையிலான பயணத்தை திரும்பிப் பார்ப்பதாக அமைந்துள்ள 11 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம் கிராமப்புற வாழ்வின் முழுப்பரிமாணத்தையும் வழங்குவதாக அமைகிறது.
“ மெய்ம்மைத் தோற்றத்தைப் பயன்படுத்துவது என்பது மிக முக்கியமானதொரு தேர்வாகவே இருந்தது. ஏனெனில் மற்றொரு நபரின் அனுபவத்தை தனியொருவரின் அனுபவமாக அது வழங்குகிறது. மக்களை நிகழ்வுகளில் ஈடுபடுத்தவும், அவர்கள் பிரதிபலிக்கவும் உதவி செய்கின்ற முதல் நிலைக் கருவியாக அது உருப்பெற்றுள்ளது” என நோர்லிங் குறிப்பிட்டார்.
மெய்ம்மைத் தோற்றத்திற்கான கருவியைப் பயன்படுத்தி இத்திரைப்படத்தைக் காணலாம். கதையின் கதாபாத்திரங்களுடன் உடலளவில் மிக நெருக்கமாக இருக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு இது தருவதாக அமைகிறது.
மிகவும் அபாயகரமான சமூக காரணிகளை ஆவணப்படுத்துவதில் சிறப்பானதாக கண்டறியப்பட்ட இத்தொழில்நுட்பம் இதற்கு முன்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யுனிசெஃப் அமைப்பிற்கான நிதி திரட்டுவதற்கு உதவும் வகையில் ஜோர்டானில் உள்ள ஒரு சிரிய நாட்டு அகதியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது.
பாலியல் தொழிலுக்காக மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் குறித்து தந்தையருக்கு அறிவுபுகட்டுவதற்கான விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படம் வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முகநூலில் வெளியிடப்படும் என்பதோடு கிராமப்புற இந்தியாவிலும் திரையிடப்படும் எனவும் நோர்லிங் கூறினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட பெண்களில் 90 சதவீதம் பேர் சமூக ரீதியாக மிகவும் ஒதுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களாகவே உள்ளதை மை சாய்சஸ் ஃபவுண்டேஷன் மேற்கொண்ட ஓர் ஆய்வு கண்டறிந்தது. எனவே இந்த வலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை விடுவிப்பது குறித்த எந்தவொரு முடிவும் அவளது தந்தையிடமே உள்ளது.
இந்த ஆவணப்படத்தில் சித்தரிக்கப்படும் சிறுமி 13 வயதிலேயே அவரது தந்தையால் திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார். அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது தந்தையின் விருப்பமாக இருந்தது.
“தன்னையும் அறியாமல் அந்தப் பெண் கடத்தப்படுவதில் அவர் பங்கு வகித்தார்” என நோர்லிங் குறிப்பிட்டார்.
அவளது கணவன் மிகவும் கொடுமைக்காரனாக மாறிய நிலையில் அந்தப் பெண் வலுவிழந்து போகிறார். அத்தகைய பலவீனமானதொரு நேரத்தில்தான் ஆட்கடத்தல்காரர்கள் அவளுக்கு ஆசை காட்டி, போதைக்கு அடிமையாக்கி, பின்னர் அவளை கடத்திச் சென்றனர்.
“அவள் வீட்டிலிருந்து காணாமல் போன காலம் முழுவதும் பணம் சம்பாதிப்பதற்காக செங்கற் சூளைகளில் வேலை செய்து, பின்னர் அவளைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் மிகவும் நல்லதொரு தந்தையாகவே இருந்தார்.”
(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.