புவனேஸ்வர், மே 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கடந்த ஆண்டு தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் மேற்கொண்ட ஒரு புலனாய்வு சட்டவிரோதமான சுரங்கங்களில் வேலை செய்து வந்த சிறுவர்களின் மரணங்களை அம்பலப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அதிகாரிகள் மைக்கா சுரங்கங்களை சட்டபூர்வமாக்குவதற்கான நடைமுறைகளை துவங்கியுள்ளனர்.
மைக்கா உற்பத்தி மாநிலமான ஜார்க்கண்டில் மூன்று மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் மூலம் சட்டவிரோதமான சுரங்கங்களில் அழகுசாதனப் பொருட்கள், கார்களுக்கான வண்ணங்கள் ஆகியவற்றை மேலும் ஒளிவிடச் செய்கின்ற இந்தக் கனிமத்தை எடுத்துத் தரம் பிரிக்கும்போது குறைந்தது ஏழு குழந்தைகள் இரண்டே மாதங்களில் உயிரிழந்தனர் என்ற தகவல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது.
இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதியினருக்கு வருமானம் அளித்து வரும் ஒரே ஆதாரமான இந்த சட்டவிரோதமான மைக்கா வெட்டியெடுக்கும் தொழில் இதன் விளைவாக முடிவுக்குக் கொண்டு வரப்படலாம் என்ற அச்சத்தினாலேயே இந்தச் சுரங்கங்களை நடத்துபவர்களும், இந்த விபத்துகளில் இறந்த சிறுவர்களின் குடும்பங்களும் இத்தகைய மரணங்கள் பற்றி புகார் எதுவும் தருவதில்லை.
மைக்காவை வெட்டியெடுக்கும் சுரங்கங்களை சட்டபூர்வமாக்குவது இத்துறையை ஒழுங்குபடுத்த வகை செய்யும்; குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக அகற்றும்; இந்தச் சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம், வேலை நிலைமைகள் ஆகியவற்றையும் உறுதி செய்யும் என குழந்தைகளின் உரிமைகளுக்கான நிபுணர்கள் தெரிவித்தனர்.
மைக்கா துண்டுகள் நிரம்பிய குவியல்களை முதலில் விற்று விட்டு பின்னர் பழைய மைக்கா சுரங்கங்களையும், சுரங்க வேலைகளை மேற்கொள்வதற்காக இதர மைக்கா சேமிப்பு இடங்களையும் ஏலம் விடுவதில் கவனம் செலுத்த திட்டமிட்டதாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுரங்கங்களுக்கான கமிஷனர் அபூபக்கர் சித்திக் கூறினார். இந்தக் குவியல்களிலும், பழைய சுரங்கங்களிலும் உள்ள கனிமத்தை சேகரிப்பதில் குழந்தைகள் பலரும் தங்கள் பெற்றோருடன் இணைந்து வேலை செய்கின்றனர்.
“இந்த மைக்கா குவியல்களை ஏலம் விடுவதற்காக புதன்கிழமையன்று ஓர் ஒப்பந்த அறிவிப்பை நாங்கள் வெளியிட்டோம். ‘திப்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் குவியல்கள் பழைய மைக்கா சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மைக்காவின் சேதாரங்களே ஆகும். இது தரம் குறைந்த மைக்கா செதில்கள் ஆகும்.” என ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியிலிருந்து தொலைபேசி மூலம் சித்திக் தெரிவித்தார்.
“மக்கள் இந்தக் குவியல்களை சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டு அதை சேகரித்து விற்று வருகின்றனர். இதை நிறுத்துவதற்காகவே, அவற்றை ஏலத்தில் விற்பதன் மூலம் மைக்காவின் இத்தகைய சேதார குவியல்களை அகற்றுவதென நாங்கள் முடிவு செய்தோம்.”
கார் உற்பத்தி, கட்டுமானத் துறை, எலெக்ட்ரானிக்ஸ், ‘இயற்கை’ அழகு சாதனப் பொருட்கள் என உலகத்தின் மிகப்பெரும் புகழ் பெற்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தக் கனிமமானது சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகவும் திகழும் நிலையில் சமீப ஆண்டுகளாக பிரபலமாகியுள்ளது. வெள்ளி நிறத்தில், பளபளப்பாக ஜொலிக்கும் இந்தக் கனிமத்தை உலகத்தில் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது.
ஒரு காலத்தில் இந்தத் தொழிலில் 700 சுரங்கங்களுக்கு மேல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்பட்டு வந்தபோதிலும், 1980 ல் காடுகளை அழிப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தும், இயற்கையான மைக்காவிற்குப் பதிலாக மாற்றுப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், பெரும்பாலான சுரங்கங்கள் மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எனினும் மைக்காவின் மீது மீண்டும் துளிர்விடத் துவங்கியிருக்கும் ஆர்வமானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா, கிரிடிஹ் ஆகிய மாவட்டங்களில் உள்ள காடுகளில் மூடப்பட்டிருந்த, இற்றுப்போன நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான சுரங்கங்களை இவ்வாறு சட்டவிரோதமாகப் பயன்படுத்த தூண்டிவிட்டது.
18 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களை சுரங்கங்களிலும், இதர அபாயகரமான தொழில்களிலும் வேலைக்காக ஈடுபடுத்துவதை இந்திய சட்டங்கள் தடை செய்கின்றன. எனினும் மிகவும் கடுமையான வறுமையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் வருமானத்தை பெருக்குவதற்கு தங்கள் குழந்தைகளையே நம்பியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் மேற்கொண்ட புலனாய்வைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர் நலத்துறை ஓர் விசாரணையை மேற்கொள்வதாக அறிவித்தது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்கள் இந்த மாதத் துவக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சட்டவிரோதமான மைக்கா சுரங்கப் பணிகள் உள்ளூர் மக்களின் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது என்று குறிப்பிட்ட இந்த ஆய்வறிக்கை, சில தொழிலாளர்கள் சுரங்கங்களில் ஏற்பட்ட சரிவினால் உயிரிழந்ததையும் உறுதிப்படுத்தியது. எனினும் குழந்தைகளின் மரணத்திற்கான ஆதாரம் எதையும் தாங்கள் காணவில்லை என்று அது குறிப்பிட்டது.
எனினும் குழந்தைத் தொழிலாளர் முறையை நிறுத்துவதற்காக மாநிலம் முழுவதிலும் தாங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த இயக்கம் ஒன்றைத் துவக்கியுள்ளதாகவும், சிறு கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் வேலை செய்து வந்த சுமார் 250 சிறுவர்களை தாங்கள் மீட்டெடுத்ததாகவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏலம் விடுவதற்கென சுமார் 100 மைக்கா குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சித்திக் குறிப்பிட்டார். இவற்றை விற்று முடித்த பிறகு, ‘வெறும் கூடாக’ செயலற்று இருக்கும் சுரங்கங்கள், மைக்கா இருப்புள்ள புதிய சுரங்கங்கள் ஆகியவை ஏலத்திற்கு முன்வைக்கப்படும். எனினும் இதற்கான கால வரையறை எதையும் அவர் குறிப்பிடவில்லை.
(செய்தியாளர்: ஜடேந்தர் டாஷ் @DashJatin; எடிட்டிங்: நிதா பல்லா @nitabhalla மற்றும் ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.