- அனுராதா நாகராஜ்
சென்னை, ஜூலை 31 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - உலகத்தில் பெருமளவில் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது நாடாக விளங்கும் வங்க தேசம் ஆயத்த ஆடைத் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதைத் தடுப்பதற்கான முதல் முயற்சியாக இதற்கான சப்ளை சங்கிலியில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர அதன் ஆயத்த ஆடைத் தொழில் முழுவதையும் மின்னணு முறையில் பதிவு செய்யவுள்ளது.
வங்க தேசம் முழுவதிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் குறித்த “நம்பிக்கையான, முழுமையான, மிகச் சரியான புள்ளிவிவரங்களை” இத்திட்டம் சேகரித்து, அவற்றை வெளிப்படையாகக் கிடைக்கும் வகையிலான இணைய தளம் மூலம் வெளிப்படுத்தும் என கடந்த சனிக்கிழமையன்று இத்திட்டத்தைத் துவக்கிய உற்பத்தியாளர் சங்கம் ஒன்று தெரிவித்தது.
2013ஆம் ஆண்டில் 1,100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உயிரைப் பறித்த, எட்டு தளங்களைக் கொண்ட ராணா ப்ளாசா தொழிற்சாலை இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆண்டுக்கு 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள, 40 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ள வங்க தேசத்தின் ஆயத்த ஆடைத் துறை அரசின் கூர்மையான ஆய்வுக்குள் வந்தது.
இந்த மாதத் துவக்கத்தில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேலும் அதிகமான வெளிப்படைத் தன்மை, தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்துவது ஆகியவை குறித்த குரல்கள் மீண்டும் எழத் துவங்கின.
“இந்த திட்டம் தொழிலாளர்கள், தொழிற்சாலை நிர்வாகம், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் மக்கள் சமூக அமைப்புகள் ஆகியவற்றிடையே சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என வங்க தேச ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான சித்திகர் ரஹ்மான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்த வெளிப்படையான முன்முயற்சியானது மேம்படுத்தப்பட்ட, மேலும் அபாயத்தைத் தவிர்க்கும்படியான சப்ளை சங்கிலிகளுக்கான எங்களது தற்போதைய முயற்சிகளுக்கு கணிசமான அளவில் உதவி புரியும்” என ரஹ்மான் தெரிவித்தார்.
பல வர்த்தக நிறுவனங்களும் தங்களின் சப்ளை சங்கிலியில் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதில் தவறிவிட்டன என இது குறித்த பிரச்சாரகர்கள் விமர்சித்தனர். நீண்ட வேலை நேரம், மிகக் குறைந்த ஊதியம், மிக மோசமான பாதுகாப்பு தரங்கள், தொழிற்சங்கங்களை உருவாக்க அனுமதி மறுப்பு ஆகியவை ஆயத்த ஆடைத் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் பொதுவான புகார்களாக இருந்து வருகின்றன.
பெரும் உற்பத்தியாளர்கள் பலரும் தங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் சங்கிலியின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் குறித்து வெளிப்படையாக இல்லாத நிலையில் துணை ஒப்பந்தக்காரர்களாக உள்ளவர்களை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.
இந்த டிஜிட்டல் முறையிலான பதிவு என்பது அத்தகைய நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என இத்திட்டத்தின் தலைவரான பர்வீண் எஸ் ஹுடா கூறினார்.
“இவ்வாறு பதிவு செய்யும் திட்டமானது வங்க தேசத்தின் ஆயத்த ஆடைத் தொழிலின் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் என்பதோடு, பகிர்ந்து கொள்ளப்பட்ட பொறுப்பு, பொறுப்பான வகையில் பொருட்களை பெறுவது, கூட்டான நடவடிக்கை, முன்கூட்டியே நன்கு தெரிவிக்கப்பட்ட முடிவெடுக்கும் முறையின் மூலம் இதற்கு முன்பு நிலவிய நிலைமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை உருவாக்குவதற்கும் உத்வேகமூட்டும்” என ஓர் அறிக்கையில் ஹுடா தெரிவித்தார்.
பெயர்கள், இடங்கள், தொழிலாளர்களின் எண்ணிக்கை, உற்பத்தி வகை, ஏற்றுமதி செய்யப்படும் நாடு, வர்த்தக வாடிக்கையாளர்கள் ஆகியவை உள்ளிட்ட தொழிற்சாலைகள் குறித்த புள்ளி விவரங்களை இத்திட்டம் தொழில்வாரியாக, விரிவாக வழங்கும்.
இத்தகைய தகவல்கள் சமகாலத்திற்கு உரியதாகவும், சரியானதாகவும் இருப்பதை உறுதிப் படுத்த இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் வேலை பொதுமக்களிடமிருந்து அணிதிரட்டப்படும்.
இத்தகைய பதிவின் முதல் வெளிப்படையான விவரம் டாக்கா பகுதியில் 2018ஆம் ஆண்டில் நேரடியாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபடும் 20 மாவட்டங்கள் அனைத்தின் விவரங்களையும் வெளிப்படுத்தும் ஏற்பாடு 2021ஆம் ஆண்டில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.