மும்பை, பிப் 17 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - பஞ்சாபில் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும் அவர்களுடைய குழந்தைகளையும் செங்கல் சூளை அதிபர்கள் கடன் வாங்கியதற்காக கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து பஞ்சாப் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் இங்கு தொழிலாளர் சட்டம் எதுவும் மீறப்படவில்லை எனக் கூறப்பட இதை எதிர்த்து தொழிலாளர்களும் சமூக ஆர்வலர்களும் போராடிய பின்னர், இப்போது இங்கு விசாரணை தொடங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா மாவட்டத்தில் இந்த வாரம் செங்கல் சூளை ஒன்றில் 12 குழந்தைகள் உட்பட 40 புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராகப் பணியாற்றி வந்திருக்கிறார்கள். செங்கல் சூளையின் உரிமையாளர், அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பித்தரவில்லை என்று கூறி அவர்களை வேலை வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண், ஒருசில மாதங்களே நிறைந்த ஒரு குழந்தையும் அடங்குவார்கள் என்று இந்த சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இப்பிரச்சனையில் சமூக ஆர்வலர்கள் தலையிட்டதை அடுத்து இவர்கள் அனைவரும் செங்கல் சூளையை விட்டு வெளியேற அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக, காவல்துறை துணை ஆணையர் பசந்த் கார்க் கூறுகையில், தொழிலாளர்களுக்கு சம்பளம் தராதிருந்ததுபோல் தோன்றுகிறது என்றும் இப்போது மூன்று முறை விசாரணை செய்தபிறகும், “அங்கே கொத்தடிமைகளாக தொழிலாளர்கள இருந்ததற்கு சாட்சியம் எதுவும் இல்லை,’’ என்றும் கூறியிருக்கிறார்.
அவர் மேலும், “இப்போது நாங்கள் செங்கல்சூளையில் தொழிலாளர்நலச் சட்டங்கள் மீறப்பட்டிருக்கிறதா என்பதற்காக, பதிவேடுகளைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்,’’ என்றும், “அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என்றும் தெரிவித்தார்.
இப்பிரச்சனையை வெளிக்கொண்டுவந்தவர்கள் காவல்துறையினரின் நடவடிக்கையில் விரக்தி அடைந்துள்ளனர். போலீசார் கடன் வாங்கிய கொத்தடிமை என்பதற்கான வரையறையைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர் என்று அவர்கள் கூறினார்கள்.
பதிந்தாவில் வேலை செய்த தொழிலாளர்கள் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்திலிருந்து, 5000 ரூபாயிலிந்து 10 ஆயிரம் ரூபாய் வரை முன்பணமாகக் கொடுக்கப்பட்டு, சென்ற அக்டோபரில் அழைத்து வரப்பட்டார்கள் என்று சமூகநீதிக்கான தொண்டர்களுடன் இருந்த கங்காம்பிகா சேகர் என்ற வழக்குரைஞர் கூறினார்.
இத்தொழிலாளர்கள் நாள்தோறும் 14 இலிருந்து 16 மணிநேரம் வரை வேலை செய்தனர் என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை, அவர்களின் ஊதியமும் பிடித்துவைத்துக்கொள்ளப்பட்டன, அவர்கள் உயிருடன் ஜீவித்திருப்பதற்காக ஏதோ பெயரளவிற்கு ஊதியம் தரப்பட்டிருக்கிறது.
“இவர்கள் இங்கே கொத்தடிமையாகத்தான் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனினும் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இதனை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறது,’’ என்றும் சேகர் கூறினார்.
“கொத்தடிமைகள் என்றால் கைகளில் சங்கிலி பூட்டிவைக்கப்பட்டிருப்பார்கள என்று அவர்கள் நினைக்கிறார்கள். கடன் வாங்கிய கொத்தடிமை என்றால் என்னவென்றே இன்னமும அவர்களுக்கு அறிமுகமில்லாதது. எனவேதான் அதை மறுக்கிறார்கள்,’’ என்று சேகர் கூறினார்.
உலகம் முழுதும் அநேகமாக 3 கோடியே 60 லட்சம் (36 மில்லியன்) பேர் இவ்வாறு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடவும், கடன் கொத்தடிமைகளாகவும் அல்லது அடிமைக்காகவே பிறந்தவர்களாக இருக்கின்றனர் என்று 2014ஆம் ஆண்டு உலக அடிமை அட்டவணை கூறுகிறது. இவர்களில் கிட்டதட்ட சரிபாதிப் பேர் (16 மில்லியன்)இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் கிராமப்புறங்களிலிருந்து நல்ல வேலை வாங்கித்தருவதாக அல்லது திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துவரப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதன்பின்னர் வீட்டுவேலைகள் செய்வதற்காக, விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அல்லது செங்கல்சூளை அல்லது நெசவாலைகளில் வேலை செய்வதற்காக விற்கப்படுகிறார்கள். பெரும்பாலனவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை அல்லது கடன் கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக நீதி தொண்டர்களும் லாபநோக்கற்ற குழுக்களும் மூன்று நாட்கள் போராட்டத்தை கடந்த வாரம் பதிந்தாவில் நடத்தியது. பதிந்தாவில் சுமார் 200 செங்கல்சூளைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் சுமார் 200 பேர் வேலை செய்கிறார்கள்.
“இவ்வாறு கொத்தடிமைகளாக வேலை செய்தவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் சென்ற வாரம் அவர்களின் ஊதியத்துடன் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். போலீசாரின் விசாரணை முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் போதுமான அளவிற்கு சான்றுகளை வழங்கியபின்னரும்கூட அதிகாரிகள் இங்கே கொத்தடிமையாக எவரும் இல்லை என்று நிலைநிறுத்தவே முயல்கிறார்கள்,’’ என்று சேகர் கூறினார்.
“தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகள் சொல்வதைத்தான் அவர்கள் நம்புகிறார்கள். தொழிலாளர்கள் சொல்வதை அவர்கள் நம்புவது மிகவும் அபூர்வம்,’’ என்றும் சேகர் கூறினார்.
Our Standards: The Thomson Reuters Trust Principles.