புது டெல்லி, ஜூன் 6 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சிறுநீரகங்களைத் தானம் செய்தவர்கள் சிறுநீரகங்களைப் பொறுத்தபவர்களின் உறவினர்கள் என்று மனித உடல் உறுப்புகளைக் கடத்துவோரால் நாடகமாடினார்கள் என்று திங்கள் அன்று டெல்லியில் உள்ள கௌரவமான மருத்துவமனை கூறியது. இந்தக் குற்றத்திற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தில்லியில் உள்ள மிக உயர்ந்த தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான இந்த்ரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் சட்டவிரோதமாக உறுப்புகள் விற்பனை மோசடி நடைபெறுவதாக வியாழக்கிழமை அன்று காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து மூத்த மருத்துவமனை மருத்துவரின் இரு உதவியாளர்கள் உட்பட ஐந்து பேரை இதுவரை அவர்கள் கைது செய்திருக்கிறார்கள்.
மனித உடல் உறுப்புகளைக் கடத்துபவர்கள் ஏழை மக்களிடம் அவர்களுடைய சிறுநீரகங்களை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்கு ஆசைகாட்டி வரவழைத்து பின்னர் கறுப்புச் சந்தையில் அதீத லாபத்திற்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.
மருத்துவமனையை ஏமாற்றுவதற்காக சிறுநீரகங்களைத் தானம் செய்பவர்கள் அதனைப் பெறுவோரின் உறவினர்கள் என்று போலியான அடையாள ஆவணங்கள் தயார் செய்திருக்கிறார்கள். ஏனெனில் இந்திய நாட்டுச் சட்டத்தின்கீழ் அது அனுமதிக்கப்பட்டதாகும்.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தெரியாமல் சீறுநீரகங்கள் நீக்கப்பட்டதாக இந்த்ரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை ஒப்புக்கொண்டிருக்கிறது. மேலும் சிறுநீரக விற்பனை மோசடி தொடர்பான காவல்துறையினரின் புலன்விசாரணையின் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் அது கூறியிருக்கிறது,
“அனைத்து எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட அதே சமயத்தில், போலியான மற்றும் சிருஷ்டனை செய்யப்பட்ட ஆவணங்கள் இந்த மோசடிக்காக குற்றமுறு நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது,” என்று மருத்துவமனையிலிருந்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேசனுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை கூறியது.
“நோயாளிகளையும், மருத்துவமனையையும் ஏமாற்றுவதற்காக மிகவும் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்ட நாடகத்திற்கு மருத்துவமனை பலியாகிவிட்டது. இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரை வலியுறுத்துகிறோம்.”
கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர் மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த சிறுநீரகவியல் மருத்துவரின் (சீனியர் நெஃப்ராலாஜிஸ்ட்) நேர்முக உதவியாளர்களாவர். ஆனாலும் மருத்துவமனையின் சம்பளப் பதிவேடுகளில் அவர்களின் பெயர்கள் இல்லை என்று அறிக்கை கூறியது.
மாற்று சிறுநீரகங்கள் பொறுத்துபவர்களுக்குத் தேவையான சிறுநீரகங்கள் கிடைக்காது கடும் பற்றாக்குறை நிலவியதால், உடல் உறுப்புகளுக்கான கறுப்புச்சந்தை வணிகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது,
உடல் உறுப்புகளுக்கான வணிகரீதியான வர்த்தகம் இந்தியாவில் சட்டவிரோதமாகும். உடல் உறுப்பு மாற்றுக்கான நன்கொடைகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இயங்கிவரும் சிறப்பு உடல் உறுப்பு மாற்றுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், பாதிப்புக்குள்ளானவர்கள் தில்லிக்கு வந்து தங்கள் சிறுநீரகங்களை விற்குமாறு மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளவர்களுக்கு ஆசைவார்த்தைகள் கூறப்பட்டு. அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் உடல் உறுப்பு கடத்துபவர்கள் போலி ஆவணங்களை சிருஷ்டனை செய்துதேவையான நடைமுறைகளுக்காக அப்போலோ மருத்துவமைனைக்குள் அவற்றை அனுமதித்திருக்கிறார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பது குறித்து இன்னமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை ஐந்து வழக்குகள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
அப்போலோ மருத்துவமனையில் உள்ள உடல் உறுப்பு மாற்றுக்குழு மோசடியான ஆவணங்களை அடையாளம் காணத் தவறியமைக்காக புலனாய்வுத்துறையின் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவமனையோ தாங்கள் அனைத்து சட்டரீதியான தேவைகளையும் பின்பற்றியதாகக் கூறியது.
“மருத்துவமனை, சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றைப் பூர்த்தி செய்யப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்காகவும். நடைமுறையில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் வெளி உறுப்பினர்களுடன் ஒரு சுயேச்சையான அமைப்பின் சம்மதத்தைப் பெற்று அதன்பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்கிறது,” என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
“இந்தக் குழு தேவையான அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து, சட்டத்தின்கீழான தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்று உத்தரவாதம் செய்கிறது, மேலும், சட்டத்தின்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்று மருத்துவமனையும் உத்தரவாதம் செய்கிறது.”
(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்:ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.