- நீதா பல்லா
புது டெல்லி, நவ. 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தேயிலைத் தொழிலில் பெரிய நிறுவனமான டாடா க்ளோபல் பிவெரேஜஸ் நிறுவனத்துடன் இந்தியாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்ட திட்டத்தில் கூட்டாக முதலீடு செய்துள்ள உலக வங்கி அது குறித்து ஆய்வு நடத்தியபோது வறுமையில் வாடும் தொழிலாளர்கள் மீது நடைபெறுவதாகக் கூறப்படும் அத்துமீறல்களை அது சமாளிக்கத் தவறியுள்ளதைக் கண்டறிந்துள்ளது என அந்தக் குழுமம் புதன்கிழமையன்று தெரிவித்தது.
அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் தேயிலை பறிப்பவர்கள் சுரண்டப்படுகின்றனர் என அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து தனது பொறுப்புகள் குறித்த அலுவலகம் இந்தத் திட்டம் குறித்து விசாரணையை மேற்கொண்டுள்ளது என உலக வங்கிக் குழுமத்தின் ஓர் உறுப்பினரான சர்வதேச நிதிக் கழகம் தெரிவித்துள்ளது.
தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு ஈமெயில் மூலம் அனுப்பியுள்ள ஓர் அறிக்கையில் இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்த செயல்படுவோம் என்றும், உடன்படுதலுக்கான ஆலோசனை நடுவர் மேற்கொண்டுள்ள விசாரணையை தாங்கள் வரவேற்பதாகவும் சர்வதேச நிதிக் கழகம் தெரிவித்துள்ளது.
“தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள், வேலை நிலைமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தற்போது செயல்பட்டு வரும் திட்டத்தில் அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச நிதிக் கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் தணிக்கைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் உடன்படுதலுக்கான ஆலோசனை நடுவர் அமைப்புடன் அது தொடர்ந்து இணைந்து செயல்படும்” எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது வீடுகள், துப்பறவு, மருத்துவ வசதிகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புகளில் தொழிலாளர்களின் நிலைமைகளில் கவனம் செலுத்தி சுயமான மதிப்பீட்டில் ஈடுபத்தி 2014 ஜூனிலிருந்து செயல்படுத்தி வருவதாக அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கூறுகிறது.
இந்த திட்டத்தில் நிதி முதலீடு செய்யப்பட்டு தொழிலாளர்களின் நிலைமைகளில் ஒரு சாதகமான மாற்றத்தை வேகமாக கொண்டுவரவும் பாராமரிக்கவும் உறுதி பூண்டுள்ளோம் என்றும் இந்த அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பிபிஎல் ஃபவுண்டேஷனின் தொண்டு நிறுவனம் தான் அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். இது இந்த திட்டத்தை கண்காணிப்பதோடு, தொழிலாளர்கள் சிறந்த முறையில் பயனடைகின்றனரா என்பதையும் உறுதிசெய்கிறது.
இந்த அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை சின்னமாக விளங்கும் டெட்லியை சொந்தமாக வைத்திருக்கும் டாடா க்ளோபல் பிவெரேஜஸ் நிறுவனத்தின் கீழிருந்த தேயிலைத் தோட்டங்களை கையிலெடுத்து நிர்வகிக்கவே 2009ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
87 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த “டாடா டீ” திட்டத்தில் சர்வதேச நிதிக் கழகம் 7.8 மில்லியன் டாலர்களை ஈடுபடுத்தியதன் நோக்கம் இதில் பங்கு கொள்ளும் தொழிலாளர்களை ஊக்குவிப்பது, இத்திட்டத்தின் மூலம் 30,000க்கும் மேற்பட்ட நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவையே ஆகும்.
அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் டாடா க்ளோபல் பிவெரேஜஸ் 41 சதவீத பங்குகளையும், சர்வதேச நிதிக் கழகம் 20 சதவீத பங்குகளையும் எடுத்துக் கொண்டன. மீதமுள்ள பங்குகள் தொழிலாளர்கள், சிறு நிறுவனங்கள் ஆகியோரிடம் உள்ளன.
எனினும் தேயிலை பறிப்பவர்கள் நீண்ட வேலை நேரம், குறைந்த ஊதியம், சங்கம் அமைப்பதற்கான உரிமையற்று இருப்பது, பூச்சிக் கொல்லிகளால் அதிகமாக பாதிக்கப்படுவது, மோசமான சுகாதார, வாழ்க்கை நிலைமைகள் ஆகிய தொல்லைகளாலும் சுரண்டலாலும் பாதிக்கப்படுகின்றனர் என பொதுநல நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் தெரிவித்த புகார்கள் உடன்படுதலுக்கான ஆலோசனை நடுவர் அமைப்பு 2014 பிப்ரவரியில் ஓர் ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது.
வீட்டு வசதி, ஊதியம் ஆகியவை குறித்த இந்திய, சர்வதேச சட்டங்களை மீறியது உள்ளிட்டு, தொழிலாளர்கள், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய விஷயங்களைக் கண்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சர்வதேச நிதிக்கழகம் தவறியுள்ளது என்பதை திங்கட்கிழமையன்று வெளியான உடன்படுதலுக்கான ஆலோசனை நடுவர் அமைப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
“அதன் வாடிக்கையாளர் வழங்கும் ஊதியமானது ‘வறுமையிலிருந்து வெளியேறுவதற்கு’ அல்லது தொழிலாளர்களின் ‘உடல்நலத்தைப் பாதுகாப்பது- மேம்படுத்துவது’ ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையிலான வேலைவாய்ப்புகளுக்கு உதவி செய்வது என்ற சர்வதேச நிதிக்கழகத்தின் உறுதிப்பாட்டிற்கு பொருத்தமாக இருப்பதை உறுதி செய்ய சர்வதேச நிதிக்கழகம் தவறியுள்ளது என உடன்படுதலுக்கான ஆலோசனை நடுவர் அமைப்பு கண்டறிந்துள்ளதாகவும்” அது தெரிவித்தது.
இத்திட்டத்தில் சர்வதேச நிதிக்கழகத்தின் முதலீடானது ஊழியர்கள் பங்குகளை வாங்குவதற்கான திட்டத்தை பிரச்சனைக்குரியதாக மாற்ற உதவியுள்ளது என்பதையும் உடன்படுதலுக்கான ஆலோசனை நடுவர் அமைப்பு கண்டறிந்துள்ளது. இந்தப் பங்குகளை வாங்குவதில் உள்ள அபாயங்களை அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தவறான வகையில் தெரிவித்துள்ளது என்று அது கூறியதோடு, இதன் விளைவாக இந்தப் பங்குகளை வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் கடனாளிகளாக மாற வழிவகுத்துள்ளது என்றும் கூறியது.
தொழிலாளர்களான பங்குதாரர்களை கலந்து ஆலோசிக்காமல், மேலும் அதிகமான பங்குகளை வழங்குவதை சர்வதேச நிதிக்கழகம் ஆதரித்தது என்றும், இதன் விளைவாக தொழிலாளர்களின் பங்குகளின் மதிப்பு குறைந்ததோடு, அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தொழிலாளர்களின் பங்குவிகிதமும் குறைய வழியேற்பட்டது என்றும் உடன்படுதலுக்கான ஆலோசனை நடுவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் முதலீட்டின் விளைவாக ஏற்பட்டுள்ள சமூகரீதியான தாக்கம் குறித்து ஒரு பரிசீலனையை மேற்கொள்ள வேண்டுமெனவும், அசாமில் உள்ள தேயிலை பறிப்பவர்களின் வறுமையான நிலையை மேம்படுத்த அதன் வாடிக்கையாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் (மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு) சர்வதேச நிதிக்கழகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
“சமூக அளவில் அதன் கடந்த காலத்திய தவறுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை சரி செய்வதிலும், அதன் உள்ளார்ந்த தோல்விகளைக் கண்டறிந்து அதற்குரிய வகையில் செயல்படுவதிலும் சர்வதேச நிதிக்கழகம் மெத்தனமாகவே இருந்து வருகிறது” என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பில் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான மூத்த ஆய்வாளர் ஜெசிகா இவான்ஸ் தெரிவித்தார்.
“சர்வதேச நிதிக்கழகத்தின் இயக்குநர்கள் குழு இந்தப் புகார்களை அனுப்பிய குழுக்கள், தொழிலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தும் வகையில் இது குறித்த செயல் திட்டத்தை திரும்பவும் அதன் ஊழியர்களிடமே அனுப்ப வேண்டும் என்பதோடு, இந்த விதிமீறல்கள் அனைத்தும் கவனத்தில் எடுக்கப்பட்டு, அவற்றிற்குப் பொருத்தமான மாற்று நடவடிக்கைகள் உருவாக்கப்படுவதையும் அது உறுதிப்படுத்த வேண்டும்.”
(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.