×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இனிப்புக் கடைகளில் வேலை செய்வதற்காகக் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்களை மீட்குமாறு இந்திய நீதிமன்றம் போலீஸுக்கு உத்தரவு

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Monday, 24 April 2017 13:17 GMT

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஏப். 24 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மேற்கு இந்தியாவில் உள்ள இனிப்புக் கடைகளில் வேலை செய்ய தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டதாக கருதப்படும் 50 சிறுவர்களை மீட்குமாறு சென்னை நீதிமன்றம் திங்களன்று பிறப்பித்த உத்தரவு காணாமல் போன தங்கள் மகன்களுடன் மீண்டும் சேரமுடியும் என்ற நம்பிக்கையை அந்தச் சிறுவர்களின் குடும்பங்களுக்கு அளித்துள்ளது.

இவ்வாறு காணாமல் போன பதின்பருவச் சிறுவனின் தந்தையால் பதிவு செய்யப்பட்ட மனுவின் மீது ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்றம் இந்தச் சிறுவர்களை மீட்பதற்கென ஒரு சிறப்புக் குழுவை அமைக்குமாறும் மூன்று வாரங்களுக்குள் இது குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

 “இந்த உத்தரவு பல நம்பிக்கைகளை வழங்குகிறது” என இந்த மனுதாரரின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் டேவிட் சுந்தர் சிங் கூறினார்.

 “இந்த வழக்கு காணாமல் போன ஒரு சிறுவன்; அவனது தந்தை ஆகியவர்களைப் பற்றியதாக இருந்தபோதிலும், மிகவும் அரிதிலும் அரிதானதொரு சம்பவமாக நீதிமன்றம் வீட்டுக்குத் திரும்பாத மகன்களைக் கொண்ட வேறு பல குடும்பங்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.”

எம். ஆறுமுகம் தனது இளைய மகனை கடைசியாகப் பார்த்தது 2013ஆம் ஆண்டில்தான். அப்போது ‘வேலைக்கு சேர்க்கும்’ ஒரு ஏஜெண்ட் அவருக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு, மேலும் ரூ. 20,000 கொடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்து விட்டு, அப்போது 14 வயதான அவரது இளைய மகன் சூர்ய பிரகாஷ்-ஐ அவரது சொந்த கிராமமான குல்லால குண்டுவிலிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்தச் சிறுவர்கள் இனிப்பு தயாரிக்கும் கடைகளில் எட்டு மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்றும், அவர்கள் தங்குவதற்கு இடம் உண்டு என்றும், அவர்களது மாத சம்பளம் ரூ. 5,000 என்றும், முறையான உணவு வழங்கப்படும் என்றும் வீட்டிற்குத் திரும்பி வர விடுமுறை அளிக்கப்படும் என்றும் அந்த ஏஜெண்ட் உத்தரவாதம் அளித்தார் என ஆறுமுகத்தின் மனு தெரிவிக்கிறது.

 “எங்கள் மகனின் எதிர்காலத்திற்கு இது நல்லதாக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டு நாங்களும் அதற்கு ஒப்புக் கொண்டோம்.” என ஆறுமுகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளியிலிருந்து நின்று போன பல மாணவர்களில் பிரகாஷும் ஒருவர். இத்தகைய சிறுவர்கள்தான் மேற்கு இந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் கடத்திச் செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் நொறுக்குத் தீனிகளை வறுத்தும், இனிப்புகளை தயாரித்தும் விற்கின்ற கடைகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர் என இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொள்வோர் தெரிவிக்கின்றனர்.

சூடான எண்ணெயால் சூடுபட்ட பிறகு மேற்குப் பகுதியில் உள்ள நகரமான நாசிக் நகரத்தில் இனிப்புகளை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையிலிருந்து தப்பித்து வந்த அவரது தங்கை மகன் கூறிய விவரங்களின் அடிப்படையில் இந்தச் சிறுவர்கள் எத்தகைய கொடுமைகளை அனுபவிக்க நேர்கிறது என்பதை ஆறுமுகம் தனது மனுவில் விவரித்திருந்தார்.

 “சரியான நேரத்திற்கு தூங்கி எழுந்திருக்காவிட்டாலோ அல்லது நோயின் காரணமாக அவர்கள் ஓய்வெடுத்தாலோ அந்த முதலாளியும் அவரது மனைவியும் எனது மகனையும் மற்ற சிறுவர்களையும் தாக்குகின்றனர்” என அந்த மனு குறிப்பிடுகிறது.

வாங்கப்பட்ட முன் தொகையை திருப்பித் தரும்வரை யாரையும் தொடர்பு கொள்வதற்கோ அல்லது வீட்டிற்குத் திரும்பிச் செல்லவோ இந்தச் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தான் வாங்கியதாக தந்தை சொல்லும் தொகையை விட மிக அதிகமான தொகையை முன் தொகையாகக்  கொடுத்திருப்பதாக அந்த முதலாளி கூறுகிறார்.

‘முறுக்கு ஃபேக்டரி’ என்று பொதுவாக அறியப்படும் இந்தக் கடையின் முதலாளி தனது மகனை நான்காண்டுகள் வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 “நான் என் மகனுடன் கடைசியாக ஜனவரி மாதம் பேசினேன். அப்போது அங்கு  கொடுமைப்படுத்தப்பட்டதால் ஓடி வந்துவிட்ட தனது உறவுக்காரப் பையன் மீண்டும் வேலைக்கு வராவிட்டால் தன்னைக் கொன்று விடுவேன் என்று முதலாளி மிரட்டுவதாக அவன் என்னிடம் தெரிவித்தான்” என ஆறுமுகம் கூறினார்.

“அதன் பிறகு இதுவரை அவனைப் பற்றி எந்தவித தகவலும் இல்லை.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->