- அனுராதா நாகராஜ்
சென்னை, ஆக. 23 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - உலகம் முழுவதிலும் சமையலறைகளுக்கான மேடைகள், கணப்பு மேடைகள், ஓடுகள் ஆகியவற்றுக்கான கிரானைட் கற்களை தென்னிந்தியாவில் உள்ள கிரானைட் சுரங்கங்களில் தேடி கடுமையாக உழைத்து வரும் பத்துக்கு ஆறு தொழிலாளர்கள் தாங்கள் வாங்கியிருந்த பெரும் கடன்களை திருப்பி அடைப்பதற்காக மிகவும் அபாயகரமான நிலைமைகளில் பணிபுரிந்து வருகின்றனர் என இத்தகைய பொருட்களை சப்ளை செய்து வரும் கண்ணுக்குத் தென்படாத சப்ளை சங்கிலிகளை கண்டறிந்து வரும் அறக்கட்டளையினர் புதன்கிழமை அன்று தெரிவித்தனர்.
கற்பாறைகளை ஏற்றுமதி செய்வதில் உலகத்தின் மிகப்பெரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவிலிருந்து இத்தகைய கிரானைட் கற்களை வாங்குபவர்களில் அரசாங்கங்களும் உண்டு; அவற்றின் அலுவலகங்கள், நகரங்களில் உள்ள பொது இடங்கள் ஆகியவற்றை அழகுபடுத்த அவை இந்த கற்களை பயன்படுத்துகின்றன என இந்தியா கமிட்டி ஆஃப் த நெதர்லாண்ட்ஸ் (ஐசிஎன்) என்ற உரிமைகளுக்கான குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“முறையான ஒப்பந்தங்கள் என்பது எதுவுமில்லாத நிலையில், இந்தத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர்; மிகக் குறைவான ஊதியம் பெறுகின்றனர். இந்தச் செயல்முறை முழுவதையுமே கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது” என இந்தியாவிலுள்ள கிரானைட் சுரங்கங்கள் தங்களது தொழிலாளர் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் அறக்கட்டளையான டிஎஃப்டியின் இந்திய தலைவரான கிரீஷ் கோவாலே கூறினார்.
“இந்தப் பிரம்மாண்டமான தொழிலில் உள்ள தொழிலாளர்கள் மிகப் பெருமளவிற்கு ஒழுங்குபடுத்தப்படாதவர்களாகவே உள்ளனர். இந்தத் தொழிலில் பல செயல்முறைகளும் பெருமளவிற்குத் தொழிலாளர்களின் உழைப்பையே சார்ந்துள்ளன.”
இது தொடர்பாக பேட்டி காணப்பட்ட தொழிலாளர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசின் ஆய்வாளர்கள் சுரங்கங்களுக்கு வருகை தரும்போது மட்டுமே தங்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படுகின்றன என்று இந்தியாஸ் க்ளோபல் ரிசர்ச் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இரண்டும் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
தென்னிந்தியாவில் கற்சுரங்கங்களில் நிகழும் விபத்துக்களில் ஆண்டுதோறும் சராசரியாக மூன்றிலிருந்து நான்கு தொழிலாளர்கள் உயிரிழக்கின்றன என ஒரு தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் கூறியதை மேற்கோள் காட்டிய இந்த அறிக்கை 2016ஆம் ஆண்டில் நடந்த ஒரு விபத்தில் 90 அடி உயரத்திலிருந்து (27 மீட்டர்) கீழே விழுந்து ஒருவர் இறந்த விதத்தை அவர் விவரித்ததாகவும் குறிப்பிடுகிறது.
“கயிற்றில் பாதுகாப்பிற்கான பட்டை (பெல்ட்) அணிந்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியும்” என்று குறிப்பிடும் இந்த அறிக்கை அரசாங்கங்களும், வர்த்தக நிறுவனங்களும் தங்களுக்கு சப்ளை செய்யும் சங்கிலித் தொடரில் தொழிலாளர்களை மோசமாக நடத்துவதைத் தவிர்க்கும் வகையில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.
தாங்கள் கொல்லப்படுவதற்கும் அல்லது வெடிகளை வெடிக்கும்போதோ அல்லது பெரும் பாறைகளை நகர்த்தும்போதோ காயம் படுவதற்கும் ஆன அபாயத்தை பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர் கொண்டு வருகின்றனர் என்றும் எனினும் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுகின்றன என்றும் இந்த அறிக்கையை உருவாக்கியவர்களில் ஒருவரான தாவுலூரி வெங்கடேஸ்வரலு கூறினார்.
“இந்தத் தொழிலாளர்களுக்கு தலைக்கவசமோ, கண்ணாடிகளோ, காலணிகளோ வழங்கப்படுவதில்லை” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.
இத்தகைய அபாயகரமான நிலைமைகள் நிலவிய போதிலும், மக்கள் தாங்கள் வாங்கிய அல்லது அவரது உறவினர் பட்ட கடனுக்காக உழைப்பை செலுத்தி அக்கடனை தீர்க்க முன்வருகின்ற நிலையில், அந்தக் கடன் தளை இத்தகைய சுரங்கங்களில் தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகிறது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடனாக நிலுவையில் இருந்த ரூ. 22,000-ஐ திருப்பித் தருவதற்காக 45 வயதான பீமராஜு பத்ருவா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல் சுரங்கத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
அவர் தினமும் ரூ. 310 ஊதியம் பெறுகிறார். இதில் ரூ. 5 ஐ அந்த வேலையைப் பெறுவதற்கு உதவியாக இருந்த இடைத்தரகருக்கு வழங்குகிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் பல தொழிலாளர்களும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களிடம் இந்த வேலைக்கு அமர்த்தியவர்களிடம் ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரையில் கடன் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இதற்காக பேட்டி காணப்பட்ட தொழிலாளர்களில் கால் வாசிப் பகுதியினர் ஆண்டுக்கு 35 சதவீதம் வரையிலான வட்டியை தரும் வகையிலான கடன்களை தாங்கள் வாங்கியுள்ளதற்காகவே இத்தகைய வேலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
“இந்த அறிக்கை இந்தியாவிலுள்ள கிரானைட் சுரங்கங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமைகளை பெருமளவிற்கு முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குரலெழுப்பும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என ஐ சி என் இயக்குநர் ஜெரார்ட் ஊங்க் கூறினார்.
(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.